Fatwa

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

பொதுவாகக் குழந்தையைப் பாதுகாத்து வளர்ப்பதும் பராமரிப்பதும் தாய், தந்தை இருவரினதும் கடமையாகும். அவ்விருவரும் விவாகரத்து மூலம்; பிரிந்துவிட்டால் குழந்தையின் தாயே பராமரிப்புக்குத் தகுதியானவளாவாள்.

இதற்கான காரணம், குழந்தைப் பராமரிப்புக்கு ஆண்களைவிட பெண்களே தகுதியானவர்கள் என்பதாகும். ஏனெனில், அவர்கள் மிகவும் இரக்க சுபாவமுடையவர்கள், பராமரிக்கத் தெரிந்தவர்கள், பொறுமையுள்ளவர்கள், மேலும் அதிகமாகப் பிள்ளைகளுடன் சேர்ந்து இருப்பவர்கள்.  இதனால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வரும் ஹதீஸில் குறித்த குழந்தையைப் பராமரிப்பதற்கு தாயே (மறுமணம் செய்யாத பட்சத்தில்) தகுதியானவள் என்று கூறினார்கள்.
 
'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண்வந்து கூறினாள்: அல்லாஹ்வின் தூதரே எனது வயிறு என்னுடைய இம்மகனை சுமக்கும் உறையாகவும், எனது மார்பு இவன் (பால்) அருந்தும் பையாகவும், எனது மடி இவனது விரிப்பாகவும் இருந்தன, இந்நிலையில் அவனது தகப்பன் என்னை தலாக் சொல்லிவிட்டு என்னிடமிருந்து மகனை எடுத்துச்செல்ல நாடுகிறான் என்று கூறினாள். அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'மற்றுமொரு திருமணம் முடிக்காத வரை நீயே அவனை வளர்க்க உரித்தானவள்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் றழியல்லாஹு அன்ஹு, நூல்: அபூ தாவூத் : 2276)

அவ்;வாறு, தாய் மறுமணம் செய்தல், மரணித்தல், பராமரிக்க மறுத்தல், கெட்ட குணமுடையவளாக இருத்தல், அல்லது சுய நினைவை இழப்பவளாக இருத்தல் போன்ற பராமரிக்கத் தகுதியான பண்புகள் இல்லாமல் இருக்கும் நிலைமைகளில், தாயின் தாய் அல்லது அவளின் தாய் (பாட்டி) போன்றவர்கள் பராமரிக்கத் தகுதியானவர்களாகக் கருதப்படுவார்கள்.  

அவர்கள் இல்லாதவிடத்து, குழந்தையின் தகப்பன் தகுதியானவராகிவிடுவார். அவரும் இல்லாத பட்சத்தில் தந்தையின் தாய் அல்லது அவளது தாய் (பாட்டி) பராமரிப்புக்குத் தகுதியானவராவார்கள்.
 
என்றாலும், குழந்தை தனது காரியங்களைச் சுயமாகச் செய்ய, கருமங்களை பிரித்தறிய முடியுமான வயதை அடைந்ததன் பின், அக்குழந்தையின் விருப்பத்திற்கேற்ப தந்தையையோ தாயையோ தெரிவுசெய்யும் உரிமை அக்குழந்தைக்கு உண்டு. இதைப் பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண் வந்து யா ரஸுலல்லாஹ்! எனது தாயும் தந்தையும உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், எனது கணவன் எனது பிள்ளையை என்னிடம் இருந்து எடுத்துச் செல்வதற்கு நாடுகிறார். அப்பிள்ளை எனக்கு அபூ இனபா எனும் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துத் தருகின்றான் என்று கூறினார். அதே நேரத்தில் அவளது கணவனும் அங்கு சமுகமளித்து என்னுடைய பிள்ளையை எடுப்பதற்கு யாரால் முடியும் என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்பிள்ளையைப் பார்த்து 'சிறுவனே இதோ உனது தாயும் தந்தையும் இருக்கிறார்கள். உனக்கு யார் விருப்பமோ அவரது கையைப் பிடித்துக்கொள்' என்று கூறினார்கள். அதற்கு அப்பிள்ளை தாயின் கரத்தைப் பிடித்துக் கொண்டு சென்றது. (நூல் : அபூ தாவூத் : 2277)

மேலும், ஒரு ஆண் பிள்ளை தனது தாயைத் தெரிவு செய்யும் போது, இரவு நேரத்தில் அவரிடமே இருப்பார்;. ஒழுக்கம், கல்வி, தொழில் விடயங்களில் வழிகாட்டலைப் பெறுவதற்குத் தனது தந்தையுடன் பகல் நேரத்தில் இருப்பார்.
அப்பிள்ளை பெற்றோர் இருவருடனும் இருப்பதாகக் கூறினால், சீட்டுக் குலுக்கல் மூலம் ஒருவர் பொறுப்பேற்பார். யாரையும் தேர்ந்தெடுக்காத சந்தர்ப்பத்தில் பராமரிப்பதற்குத் தாயே தகுதியாகுவாள்.  
 
அப்பிள்ளை பெற்றோரில் யாரைத் தெரிவுசெய்கின்றதோ, அவர் மற்றவருக்குப் பிள்ளையைப் பார்ப்பதற்கு அனுமதியளிப்பது அவசியமாகும். அவ்வாறு பார்ப்பதற்கு அனுமதியளிக்காமல் இருப்பது உறவைப்பிரிப்பதாகும்.  

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'தாயையும் குழந்தையையும் யார் பிரிப்பாரோ அல்லாஹு தஆலா மறுமையில் அவரை அவரது விருப்பத்துக்குரியவர்களை விட்டும் பிரித்துவிடுவான்' (சுனன் அல்-திர்மிதி)  என்றும், இன்னுமொரு ஹதீஸில், 'தகப்னையும் அவனது பிள்ளையையும் பிரிப்பவரை அல்லாஹ் சபிக்கின்;றான்' (நூல்: சுனன் இப்னி மாஜஹ்)  என்றும் கூறியுள்ளார்கள்.

மேலும், ஒரு பெண் பிள்ளை தந்தையைத் தெரிவு செய்யும் போது அதன்; பாதுகாப்பைக் கருதி அப்பிள்ளையை வெளியில் அனுப்பாமல், தாயே அப்பிள்ளையைச் சந்திக்கச் செல்வது மிகவும் ஏற்றமானதாகும்.

பெற்றோரில் ஒருவர் மற்றவருக்குப் பிள்ளையைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்குதல் வேண்டும். குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை அனுமதி வழங்குவது கட்டாயம் என்றும், வீடு சமீபமாக இருந்தால் ஒவ்வொரு நாளும் சந்தித்துக் கொள்ள அனுமதி வழங்குவது அவசியம் என்றும் மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.  இச்சந்திப்பை இருதரப்பும் பேசி பொருத்தமான ஓர் இடத்தில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

மேலும், கணவன் மனைவி விவாரத்து மூலம் பிரியும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய மேற்குறித்த சட்டங்களையும் ஒழுங்குகளையும் பற்றி இன்னும் விரிவாகவும், துள்ளியமாகவும் இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் உடைய  'மின்ஹாஜுல் தாலிபீன் மற்றும் அதனுடை விரிவுரை நூற்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, உங்களது மகனுக்குப் பிறந்த குழந்தை அவருடைய தாயிடத்தில்; இருப்பதாக உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்நிலையில், மேற்குறிப்பிட்ட அடிப்படைகளின் பிரகாரம், இரு தரப்பும் குறிப்பிட்ட சில நாட்களைச் சுமுகமாகத் தீர்மானித்து பிள்ளையைப் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொள்வது பொருத்தமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்     

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

உழ்ஹிய்யா எனும் இபாதத்தை நிறைவேற்றுபவர், அது சம்பந்தமான சட்டதிட்டங்களை அறிந்தவராக இருப்பின், நாட்டின் சட்டங்களையும் பின்பற்றி, அவராகவே அதை நிறைவேற்றுவதும், முடியுமாக இருந்தால் அவரது வீட்டில், அவரது குடும்பத்தினர் முன்னிலையில் இருப்பதும் சிறந்தது. 

தற்காலத்தில் சில இடங்களில் உழ்ஹிய்யாவுடைய அமலைக் கூட்டாக நிறைவேற்றும் வழமை உள்ளது. பொதுவாக ஸகாத், நேர்ச்சை, அகீக்கா, உழ்ஹிய்யா போன்ற அமல்களை தானே முன்னின்று நிறைவேற்றுவதைப் போன்று, பிறரையும் பொறுப்பாக்கி, அவற்றை நிறைவேற்ற அனுமதியுள்ளது என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது உழ்ஹிய்யாவின் சில பிராணிகளை அலி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மூலம் உழ்ஹிய்யாக் கொடுத்திருக்கின்றார்கள். உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு பொருப்பாக்கப்படுபவர் தனி நபராக அல்லது ஒரு நிறுவனமாக  இருக்கமுடியும். என்றாலும், உழ்ஹிய்யா ஒரு வணக்கமாக இருப்பதால், அதைக் நிறைவேற்றுவதற்குப் பொருப்பேற்பவர்கள் உழ்ஹிய்யா சம்பந்தமான மார்க்க சட்டங்களை அறிந்தவராக இருத்தல் வேண்டும் என்றும் மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர். 

மேலும், இலங்கையில் பிராணிகளை அறுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள பிரத்தியேக அரசாங்க சட்டங்களையும் உழ்ஹிய்யாக் கொடுப்பவர்கள் கவனத்தில் கொள்வது இலங்கை நாட்டுப் பிரஜை என்ற வகையில் அவசியமாகும். தனியாக ஒவ்வொருவரும் உழ்ஹிய்யாவுடைய அமலை நிறைவேற்றும்போது இச்சட்டங்களைப் பின்பற்றி நிறைவேற்றுவது குறிப்பாக நகர்ப்புறங்களில் கடினமான விடயமாகும்.

இவ்வடிப்படையில், உழ்ஹிய்யா சம்பந்தமான மார்;க்க அறிவுடனும், அரசாங்க சட்டங்களைப் பின்பற்றியும் தனியாக உழ்ஹிய்யாவைக் கொடுக்க முடியுமாக இருந்தால், தனியாகக் கொடுப்பதே சிறந்தது. அவ்வாறு தனியாகக் கொடுப்பது சிரமமாக இருக்கும் பட்சத்தில்; தனி நபரையோ அல்;லது நிறுவனத்தையோ உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு நியமிக்க முடியும்.

நியமிக்கப்படுவர்கள், முழு அமானிதத்துடன் இதை முறையாக நிறைவேற்ற முடியுமாக இருந்தால் தான், இப்பொறுப்பை ஏற்கவேண்டும். அவ்வாறு பொறுப்பேற்பவர்கள் குறித்த உழ்ஹிய்யாப் பிராணிக்கு அல்லது அதன் பங்கிற்கு எவ்வளவு பெறுமதியோ அந்தத் தொகையையும், அதனுடன் சம்பந்தமான இதர செலவுகளை மாத்திரமே அறவிடுதல் வேண்டும். உழ்ஹிய்யா மற்றும் உழ்ஹிய்யா சம்பந்தமான இதர செலவுகள் கழிந்ததன் பின்னர், ஏதேனும் மீதமானால், அதை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைத்தல் வேண்டும்.

மேலும், பிறரை நியமிக்கும் சந்தர்ப்பங்களில், உழ்ஹிய்யாக் கொடுப்பவரும், உழ்ஹிய்யாக் கொடுக்கும் இடத்தில், முடியுமாயின் சமுகமளித்திருப்பது விரும்பத்தக்கது. நியமிக்கப்பட்டவர் உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் பொழுது, நியமித்தவர் உழ்ஹிய்யாவுடைய நிய்யத்தை வைப்பது போதுமானது.

உழ்ஹிய்யாவுக்காகப் பிறரை நியமிக்கும் பொழுது, நியமிப்பவர், நியமிக்கப்பட்டவரை, உழ்ஹிய்யாவுடைய நிய்யத்தை நீங்களே வைத்து உழ்ஹிய்யாவை நிறைவேற்றுங்கள் என்று கூறிப் பொறுப்பாக்கவும் முடியும்.

இந்நிலையில், நியமிக்கப்பட்டவர்கள் உழ்ஹிய்யாக் கொடுக்கும் போது, குறிபிட்ட பிராணி அல்லது அதன் பங்குகள் யாருடையது என்பதை முடிவு செய்து, அவருடைய நிய்யத்தை வைப்பது அவசியமாகும்.

அவ்வாறே, சில இடங்களில், பல மாடுகளை உழ்ஹிய்யாக் கொடுக்க நியமிக்கப்பட்டவர்கள் மூலம், சில மாடுகளைக் குர்பான் செய்து, ஏழைகளுக்கு எப்பகுதியையும் ஒதுக்காமல் உழ்ஹிய்யாக் கொடுத்தவர்களுக்கு மத்தியில் மாத்திரம் பங்கு பிரிக்கப்படுகிறது. இம்முறை தவறானதாகும். ஏனெனில், உழ்ஹிய்யாவுடைய பிராணி அல்லது பங்கில், சிறிதளவேனும் ஏழைகளுக்கு சதகா செய்வது அவசியம் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன், உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு வகீலாக்கப்பட்டவர், தான் உழ்ஹிய்யாக் கொடுக்கும் பகுதியில் உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கான நேரம் நுழைந்திருப்பது அவசியமாகும். உதாரணத்திற்கு சஊதி நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் இலங்கையில் உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு ஒருவரை நியமித்தால் இலங்கையில் உழ்ஹிய்யாவுடைய நேரம் நுழைந்திருப்பது அவசியமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹு

துல்-ஹிஜ்ஜஹ் மாதத்துடைய ஆரம்ப பத்து நாட்களிலும் நல்லமல்கள் செய்வது வேறு நாட்களில் நல்லமல்கள் செய்வதை விடவும் சிறந்தது என்று ஹதீஸ்களில் வந்துள்ளது.

இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

'(துல்ஹஜ்) பத்து நாட்களில் செய்யும் நல்லமல்கள் ஏனைய நாட்களில் செய்யும் நல்லமல்களை விட சிறந்ததாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள். 'ஜிஹாதை விடவுமா'? என்று நபித் தோழர்கள் கேட்டனர். 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.  (சஹீஹுல் புகாரி : 969)

அதே போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் துல்-ஹிஜ்ஜஹ் மாதத்தில் ஆரம்ப 9 நாட்களிலும் நோன்பு நோற்றுள்ளார்கள் என்ற ஹதீஸ் முஸ்னத் அஹ்மத் மற்றும் அபூதாவூத் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறே குறிப்பாக பிறை 9ஆம் நாளில் நோற்கப்படும் அறபா நோன்பிற்கும் பல சிறப்புக்கள் உள்ளன. ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள பின்வரும் ஹதீஸ் இதற்கு சான்றாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்களிடம் அறபாவுடைய நாளில் நோற்கப்படும் நோன்பு பற்றிக் கேட்கப்பட்ட பொழுது, அது சென்ற வருடம் மற்றும் 

இவ்வருடம் செய்த பாவங்களுக்கு குற்றப் பரிகாரமாகவும் ஆகிவிடும் என்று கூறினார்கள்.   (சஹீஹு முஸ்லிம் -1162)

ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச் சென்றவர்கள் துல்ஹிஜ்ஜா மாதம் பிறை 9ம் நாள் (ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முன்னைய தினம்) அறபா மைதானத்தில் தரித்திருப்பது ஹஜ்ஜுடைய கடமைகளில் ஒன்றாகும். ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் அன்றைய தினம் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

சில அறிஞர்கள் மக்காவில் ஹாஜிகள் அறபாவில் ஒன்றுகூடுவதை வைத்து, அதே தினத்தில் ஏனைய நாடுகளிலும் அறபா நோன்பு நோற்கப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். உள்நாட்டு பிறையின் அடிப்படையில் மாதத்தை தீர்மானிப்பவர்களுக்கு மத்தியிலும் இந்த சந்தேகம் காணப்படுகின்றது.

மக்காவில் ஹாஜிகள் அறபாவில் பிறை 9ஆம் நாளில் தரிப்பதும் ஏனைய நாடுகளில் பிறை 9ஆம் நாளன்று அறபா நோன்பு நோற்பதும் பிறை மாதம் ஆரம்பமாகுவதை அடிப்படையாக வைத்து வேறுபடலாம். இதுவே பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும்.

புவியியலின் அடிப்படையில் பார்க்கும் போது பிராந்தியத்துக்குப் பிராந்தியம் நேரங்கள் வேறுபடுவதால் நாட்களின் ஆரம்பமும் வேறுபடுகின்றது என்பது யாவரும் அறிந்த விடயம். அவ்வாறே மாதங்களின் ஆரம்பமும் வேறுபடும். எனவே, மக்காவில் ஹாஜிகள் அறபா தினத்தில் தரித்து நிற்கும் நேரத்தில், முழு உலக நாடுகளிலும் அதே நேரம் காணப்படுவது சாத்தியமற்றதாகும்.

ஏனெனில், மக்காவில் பிறை தென்படுவதற்கு முன்னைய நாள் அல்லது அடுத்த நாள் வேறு பகுதிகளில் பிறை தென்படுவதற்கு வாய்ப்புள்ளது என்பதை யாவரும் அறிவர். அந்த வகையில் மக்காவில் 9ஆவது தினமாக இருக்கும் பொழுது ஏனைய பகுதிகளில் பிறை 8ஆக அல்லது 10ஆக இருக்கும். எனவே, மக்காவை மையமாக வைத்து நோன்பு நோற்றால் அதற்கு முன்னைய தினம் பிறை தென்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு 10ஆம் நாளாக இருக்கும்.  அன்றைய தினம் அவர்களுக்குப் பெருநாளாகும். அத்தினத்தில் நோன்பு நோற்பது ஹராமாகும்.

மக்காவில் அமைந்துள்ள றாபிதாவின் இஸ்லாமிய பிக்ஹ் ஒன்றியம் உட்பட, பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடும், பிராந்தியங்களில் பிறை தென்படுவதில் உள்ள வேறுபாட்டுக்கேற்ப இஸ்லாமிய மாதங்களின் ஆரம்பம் நாட்டுக்கு நாடு வேறுபடும் என்பதாகும். இது குறிப்பிட்ட ஓரிரு மாதங்களுக்கு மாத்திரம் என்றில்லாமல் 12 மாதங்களுக்கும் இதுவே அடிப்படையாகக் கொள்ளப்படும் என்பது இவர்களது நிலைப்பாடாகும்.

இதற்கு பின்வரும் அடிப்படைகள் ஆதாரங்களாக உள்ளன:

அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் 'உங்களில் றமழான் மாதத்தை யார் அடைகின்றாரோ அவர் நோன்பு நோற்கட்டும்' (02:185) என்று கூறுகிறான். இதன் விளக்கம் யாதெனில், உங்களில் ரமழான் மாதத்தை அடையாதவர்கள் (ரமழான் மாதத்துக்கான பிறை தென்பட்டதாக அறிவிக்கப்படாத பகுதிகளில்) நோன்பு நோற்கத் தேவையில்லை என்பதாகும்.

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'நீங்கள் பிறையைக் கண்டால் நோன்பை ஆரம்பியுங்கள், பிறையைக் கண்டால் நோன்பை விடுங்கள்' என்று கூறியுள்ளார்கள்  (சஹீஹுல் புகாரி, சஹீஹு முஸ்லிம்). இதன் விளக்கமும் நீங்கள் பிறையைக் காணாவிட்டால் நோன்பு நோற்க வேண்டாம் என்பதாகும்.

இன்னும், ஸஹீஹு முஸ்லிமில் பதிவாகியுள்ள சம்பவத்தில், குரைப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷாம் தேசத்திலிருந்து மதீனா வந்தபொழுது, ஷாம் தேசத்தில் றமழான் மாதம் ஆரம்பித்ததற்கும் மதீனாவில் ஆரம்பித்ததற்கும் ஒரு நாள் வித்தியாசம் இருந்ததைக் கண்ட, இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் நாங்கள் மதீனாவில் பிறை கண்டதன் அடிப்படையில் தான் நோன்பை நோற்றோம், அதன் அடிப்படையிலேயே நோன்பை விடுவோம். ஷாம் தேசத்தில் றமழான் மாத ஆரம்பம் வித்தியாசமாக இருந்தாலும் சரியே. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறே எமக்கு ஏவினார்கள் என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸும் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் பிறை மாத ஆரம்பம் வித்தியாசம் அடையும் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.

எனவே, இவற்றின் அடிப்படையில் தலைப்பிறை தென்படுவதற்கேற்ப நாட்டுக்கு நாடு அறபாவுடைய தினம் வேறுபடும் என்பதால், இலங்கை நாட்டில் துல் ஹிஜ்ஜாவின் ஒன்பதாம் தினமே, இலங்கையில் அறபாவுடைய சுன்னத்தான நோன்பு நோற்கும் தினமாகும்.

இக்கருத்தையே அறபா நோன்பு விடயத்தில் அஷ்-ஷைக் இப்னு உஸைமின் றஹிமஹுல்லாஹ் அவர்கள்  உட்பட பெரும்பான்மையான தற்கால மார்க்க அறிஞர்களும்

தாருல் இப்தா, தாருல் உலூம் தேவ்பந்த்  மற்றும் றாபிததுல் ஆலம் அல்-இஸ்லாமிய்யின் இஸ்லாமிய பிக்ஹ் ஒன்றியம்  ஆகிய பத்வா அமைப்பினர்களும் கொண்டுள்ளனர்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஸகாத்துல் பித்ர் என்பது, ஷவ்வால் மாத தலைப் பிறை கண்டதும் வசதியுள்ளவர்கள் மீது கடமையாகும் ஓரு தர்மமாகும். இதற்கு ஸதகதுல் பித்;ர் என்றும் கூறப்படும்.

இதை நிறைவேற்றும் விடயத்தில் மார்க்க அறிஞர்களிடையே கருத்து வேற்றுமைகள் நிலவுகின்றன.

இமாம் அபூஹனீபா றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸகாத்தல் பித்ரை நிறைவேற்றும் பொழுது அதன் பெறுமதியைக் கொடுக்கலாம் என்று கூறுகின்றார்கள்.

இமாம் மாலிக், இமாம் ஷாபி, இமாம்; அஹ்மத் இப்னு ஹன்பல் போன்ற பெரும்பான்மையான மார்க்க அறிஞர்கள் பிரதான உணவாக உட்கொள்ளக்கூடிய தானிய வகையில் இருந்தே இது வழங்கப்பட வேண்டும் என்றும், இதற்கு மாற்றமாக அதன் பெறுமதியைக் கொடுப்பது கூடாது என்றும் கூறுகின்றனர்.

இதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கூறுகின்றனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஸாஃ அளவு பேரீச்சம் பழத்தை அல்லது ஒரு ஸாஃ அளவு வாற் கோதுமையை (Barley) ஸகாத்துல் பித்ராகக்  கடமையாக்கினார்கள். என இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள்  அறிவிக்கின்றார்கள். 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களது காலத்தில் தீனார், திர்ஹம் போன்ற நாணயங்கள் புழக்கத்தில் இருந்தும் கூட தானிய வகையில் இருந்தே ஸகாதுல் பித்ரைக் கடமையாக்கியுள்ளார்கள்.

மேலும், இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹிமஹுமுல்லாஹ் அவர்களிடம் ஸகாத்துல் பித்ரை திர்ஹமாகக் கொடுப்பது சம்பந்தமாகக் கேட்கப்பட்ட போது 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி முறைக்கு மாற்றமாகக் கொடுத்தால் அது ஸகாத்துல் பித்ராக நிறைவேறமாட்டாதோ என்று நான் அஞ்சுகின்றேன்' என்று கூறினார்கள். 

இவ்வடிப்படையில், பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் கருத்தின்படி ஸகாத்துல் பித்ரை நிறைவேற்றும் போது பிரதான உணவாகக் கொள்ளப்படும் தானிய வகையில் இருந்து கொடுத்தல் வேண்டும். இதனை நிறைவேற்றும் போது ஒவ்வொருவரும் ஒரு ஸாஃ அளவு வீதம் கொடுத்தல் வேண்டும். ஒரு ஸாஃ என்பது 2.4 கிலோ கிராமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத காப்புறுதி முறைகளில், வட்டி போன்ற இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட பல விடயங்கள் உள்ளன. இம்முறைகளில் ஒருவர்; பணம் செலுத்தி அதன் மூலம் காப்புறுதி பெறுவது இஸ்லாத்தின் பார்வையில் அனுமதிக்கப்படாத ஒன்றாகும்.

என்றாலும், அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுரக்ஷ காப்புறுதித் திட்டத்தில் பாடசாலை மாணவர்களோ அல்லது அவர்களைப் பராமரிப்பவர்களோ காப்புறுதிக்காகக் கட்டணம் செலுத்தி, உடன்படிக்கை எதுவும் செய்வதில்லை, மாறாக அரசாங்கமே இதற்கென்று பணத்தை ஒதுக்கி மாணவர்களுக்காக காப்புறுதி நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கை செய்கிறது.

மேலும், இத்திட்டத்தின் படி, ஒரு மாணவன் இறந்தால் அல்லது நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் அல்லது மாணவனின் பெற்றோர் இறந்தால் அதற்காக ஒரு தொகைப் பணத்தைக் குறித்த மாணவனுக்காக அரசாங்கம் காப்புறுதி நிறுவனத்தின் ஊடாக வழங்குகிறது.

எனவே, நீங்கள் குறிப்பிட்டுள்ள இவ்விடயம் யதார்த்தத்தில் அரசாங்கம் செய்யும் உபகாரமாகவே கருதப்படுவதினால், அரசாங்க உபகாரங்களைப் பெற்றுக்கொள்வதில் தவறேதுமில்லை.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஓர் இடத்தில் உள்ள மக்கள் அனைவரும் நோன்பு நோற்கும்போது அவர்களுடன் சேர்ந்து ஒவ்வொருவரும் நோன்பு நோற்பதும், அவர்கள் நோன்பை விட்டு பெருநாள் கொண்டாடும் பொழுது, அவர்களுடன் சேர்ந்து பெருநாள் கொண்டாடுவதும் அவசியமாகும் என்று முற்கால மற்றும் சமகால அறிஞர்கள் கூறியுள்ளனர். இதற்கு பின்வரும் ஹதீஸ் அடிப்படையாக உள்ளது.

'உங்களது நோன்பு நீங்கள் அனைவரும் நோன்பு நோற்கும் பொழுதாகும். நீங்கள் நோன்பை முடிப்பது நீங்கள் அனைவரும் நோன்பை முடிக்கும் பொழுதாகும். உங்களது ஈதுல் அழ்ஹாவுடைய பெருநாள் நீங்கள் அனைவரும் பெருநாள் கொண்டாடும் நாளாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். 

நூற்கள்: ஸுனன் அல்-திர்மிதி 697, ஸுனன் இப்னி மாஜஹ் - 1660, அல்-ஸுனன் அல்-குப்ரா 8010, ஸுனன் அபீ தாவூத்- 2324, ஸுனன் அல்-தாரகுத்னி - 2177)

பொதுவாகப் பிறை மாதங்கள் இருபத்தொன்பது அல்லது முப்பது நாட்களாகவே இருக்கும் என அப்துல்லாஹ் இப்னு உமர்  றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும்' என்று (இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி) முப்பது நாற்கள் எனக் கூறிவிட்டு, பிறகு 'மேலும் இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கலாம்' (என்று இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி மூன்றாம் முறை பெருவிரலை மடக்கியபடி) - இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கலாம் என்று கூறினார்கள்.   (நூற்கள்-ஸஹீஹுல் புகாரி - 5302, ஸஹீஹு முஸ்லிம் - 1080)

அதாவது, மாதம் என்பது சில வேளை முப்பது நாட்களாக அல்லது இருபத்தொன்பது நாட்களாக இருக்கும் என்று கூறினார்கள்.

இவ்வாதாரங்களை அடிப்படையாக வைத்து, மார்க்க அறிஞர்கள் பிறை மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களை விடக் குறையாது எனும் விடயத்தில் 'இஜ்மாஃ' கருத்தொற்றுமைப் பட்டுள்ளனர்.  மேலும், இருபத்தொன்பதாவது தினம்; மாலை பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

'நீங்கள் அதைப் (பிறையைப்) பார்த்தால் நோன்பை ஆரம்பித்துக் கொள்ளுங்கள். மேலும், அதைப் பார்த்தால் நோன்பை முடித்துவிடுங்கள். உங்களுக்கு அது மறைக்கப்பட்டால், ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்.  (நூல் : ஸஹீஹுல் புகாரி-1907, ஸஹீஹு முஸ்லிம் -1081)

இவ்வடிப்படையில், ஒருவர் எப்பகுதிதியில் இருக்கின்றாரோ அப்பகுதியில் உள்ள மக்கள் நோன்பை ஆரம்பிக்கும் பொழுது, அவரும் நோன்பை ஆரம்பிப்பதும், அவர்கள் நோன்பை முடித்து பெருநாள் கொண்டாடும் போது அவரும் அவர்களுடன் பெருநாள் கொண்டாடுவதும் அவசியமாகும்.

மேலும், ஒருவர் ஒரு பகுதியில் அப்பகுதி மக்களுடன்; நோன்பை ஆரம்பித்து, பின்பு இன்னும் ஒரு பகுதிக்குச் சென்று, அங்கு பெருநாள் வரை தங்கியிருந்தால், அவர்கள் ரமழானை முடித்துப் பெருநாளைக் கொண்டாடும் தினத்திலேயே அவரும் பெருநாளைக் கொண்டாடுவார். இரு பகுதிகளிலும் ரமழான் வேறுபட்ட தினங்களில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் சரியே.

அவ்வாறு குறித்த நபர் ரமழானை முடிக்கும் போது முப்பத்தொரு நாட்கள் நோன்பு நோற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், அப்பகுதி மக்களுடன் அவர் அவரது முப்பத்தொராவது நோன்பையும் நோற்று அவர்கள் பெருநாள் கொண்டாடும் போது அவரும் பெருநாள் கொண்டாடுவார்.

அதேபோன்று, அம்மக்கள் பெருநாள் கொண்டாடும் பொழுது குறித்த நபர் இருபத்தெட்டு நோன்பை முடித்திருந்தால் அம்மக்களுடன் பெருநாளைக் கொண்டாடிவிட்டு பிறிதொரு நாளில் ஒரு நோன்பைக் கழா செய்து கொள்வார். ஏனெனில் ஒரு மாதம் குறைந்தது இருபத்தொன்பது நாட்களாகவே இருக்கும் என்பது மேற்கூறிய ஆதாரங்களிலிருந்து தெளிவாகின்றது.

அவ்வாறே, ஒரு பகுதியில், றமழான் மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டு அல்லது ஷஃபான் மாதத்தை முப்பதாகப் பூர்த்;தி செய்து, றமழான் மாதத்தின் நோன்பை ஆரம்பித்ததன் பின்னர், இருபத்தெட்டாவது நாளில் தலைப் பிறை தென்படுவதற்கான வாய்ப்புகள் இருந்து, உறுதியான சாட்சிகள் மூலம் பிறை தென்பட்ட விடயம் நிரூபிக்கப்பட்டால் இருபத்;தொன்பதாவது நாளில் பெருநாள் கொண்டாடிவிட்டு பிறிதொரு நாளில் ஒரு நோன்பைக் கழா செய்வதும் அவசியமாகும்.

இவ்வாறான ஒரு நிகழ்வு அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்தில் நடைபெற்று, அவர்கள் மக்களை ஒரு நோன்பைக் கழா செய்துகொள்ளுமாறு ஏவினார்கள் என்ற விடயம் ஸுனன் அல்-பைஹகி மற்றும் முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக் போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

அவ்வாறே ஸஊதி அரேபியாவிலும் ஹிஜ்ரி 1404 ஆம் ஆண்டு மேக மூட்டம் காரணமாக ஷஃபானை முப்பதாகப் பூர்த்தி செய்;து றமழானை அந்நாட்டு மக்கள் ஆரம்பித்தனர். என்றாலும், இருபத்தெட்டாவது தினம் பிறை தென்பட்டதாக நிரூபிக்கப்பட்டதால் பிறிதொரு நாளில் நோன்பைக் களா செய்வது அவசியம் என்று ஸஊதி அரேபியாவின் ஆய்வுக்கும் பத்வாவுக்குமான நிரந்தர அமைப்பு பத்வா வழங்கியது. 

எனவே, றமழானுடைய மாதம் ஏனைய பிறை மாதங்களைப் போன்று இருபத்தொன்பது அல்லது முப்பது நாட்களாகவே இருக்கும். அவ்வாறு இருபத்தெட்டாவது தினம் ஷவ்வால் பிறை தென்பட்டது நிரூபிக்கப்பட்டால், பெருநாள் கொண்டாடிவிட்டு இன்னும் ஒரு நாளில் ஒரு நோன்பைக் கழா செய்து கொள்வது அவசியமாகும்.

மேற்கூறப்பட்ட விடயங்கள் பற்றிய தெளிவுகள் அனைத்தும் பல இஸ்லாமிய சட்ட நூற்களில் பதிவாகியுள்ளது. குறிப்பாக ஷாபிஈ மத்ஹபின், மின்ஹாஜுத் தாலிபீன ;  மற்றும் அதனுடைய விரிவுரை நூற்கள், இமாம் மாலிக்  றஹிமஹுல்லாஹ் மற்றும், ஹனபி மத்ஹபுடைய ரத்துல் முஹ்தார் , மற்றும் ஹனபி மத்;ஹபின் தற்;கால பத்வா நூற்கலான "அஹ்சனுல் பதாவா" , "பதாவா றஹீமிய்யா" போன்ற நூற்களின் ஆசிரியர்கள், ஜோர்தான் நாட்டு உத்தியோக பூர்வ பத்வா நிலையம் , சமீப கால அறிஞர்களான அஷ்-ஷைக் இப்னு பாஸ், மற்றும் அஷ்-ஷைக் இப்னு உஸைமீன்  போன்ற இன்னும் பலர் இக்கருத்தைக் கூறியுள்ளனர்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு

முஸ்லிம் அல்லாதவர்களை மஸ்ஜிதிற்குள் அனுமதிப்பது பற்றிய மார்க்கத் தெளிவு

மஸ்ஜித் என்ற அரபுப் பதத்தின் பொருள்; சிரம் சாய்க்கும் (ஸுஜூத் செய்யும்) இடம் என்பதாகும். அல்லாஹ்வை சிரம் சாய்த்து வணங்குவது (ஸுஜுத் செய்வது) மஸ்ஜிதில் நடைபெறும் பிரதான வணக்கமாகும்.

மஸ்ஜித்கள் பற்றி அல்லாஹு தஆலா கூறும் போது 'மஸ்ஜித்கள் அல்லாஹ்வுக்கென்று நிர்மாணிக்கப்பட்டவைகளாகும். அதில்; அல்லாஹ் அல்லாத எதையும் அழைக்க வேண்டாம்' என்று கூறுகின்றான். (72:18)

மேலும், அல்லாஹு தஆலா திருமறையில் 'இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்பட வேண்டும் என்றும், அவற்றின் கண்ணியம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளான். அவற்றில் காலையிலும் மாலையிலும் முஸ்லிம்கள் அவனைத் துதி செய்து கொண்டிருப்பார்கள்'; என்று கூறுகிறான். (24:36)

'மஸ்ஜித்கள் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றுவதற்கும், தொழுவதற்கும், குர்ஆன் ஓதுவதற்கும் உரியதாகும்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். (நூல் : சஹீஹுல் புகாரி)

அல்லாஹ்வின் இல்லமான மஸ்ஜித் கண்ணியமான இடமாகும். அது முஸ்லிம் சமூகத்தின் சமய, சமூக, கலாசார, ஆன்மீக, மற்றும் கல்விசார் செயற்பாடுகளின் முன்னேற்றத்திற்கு உதவுதல் போன்ற விடயங்கள் நடைபெறும் இடமாகும். எனவே, அதன் புனிதத்துவத்தைப் பாதுகாப்பதற்காக முஸ்லிம்கள் அதற்கான ஒழுங்கு விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதை யாரும் அறிவர்.

அவற்றில், மஸ்ஜிதிற்குள் நுழையும் ஆண், பெண் இருபாலாரும் ஒழுக்கமான ஆடையை அணிந்திருத்தல், வீண் பேச்சுக்களைத் தவிர்த்தல், சப்தத்தைத் தாழ்த்தல், இஃதிகாப் நிய்யத்துடன் வீற்றிருத்தல் துர்வாடையின்றி மணமாக இருத்தல், ஜனாபத் உடைய சந்தர்ப்பங்களில் மஸ்ஜிதில் தரிக்காதிருத்தல் என்பவை முக்கியமானவையாகும்.

எமது நாட்டில் உள்ள மஸ்ஜித்களில் நடைமுறையில் இருப்பது போன்று, முஸ்லிம் பெண்கள் மஸ்ஜிதிற்குள் நுழைவதாயின் அவர்களுக்கென்று தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களைப் பயன்படுத்துவதோடு, அவர்கள் மாதவிடாய், பிரசவ ருது போன்றவற்றிலிருந்து சுத்தமாக இருப்பதும் அவசியமாகும்.

மேலும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி எடுத்துக் கூறுவதும், இஸ்லாத்தைப் பற்றி அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதும் முஸ்லிம்களது கடமையாகும். நாம் இஸ்லாம் கூறும் பிரகாரம் வாழத் தவறியதும், அதைப் பிறருக்கு முறையாக எட்டச் செய்யாமையும்; அவர்களுக்கு இஸ்லாம் பற்றிய பல சந்தேகங்கள் அதிகரிப்பதற்கான காரணங்களாகும்.

மேலும், 'ஒவ்வொருவரையும் அவரது அந்தஸ்திற்கேற்ப கண்ணியப்படுத்துங்கள்' (ஸஹீஹு முஸ்லிமின் முன்னுரை) என்ற நபி மொழிக்கேற்ப, முஸ்லிம் அல்லாதவர்களை அழைத்து இஸ்லாத்தை எடுத்துக் கூறும் போது, சமயத் தலைவர்கள்; உட்பட முக்கியஸ்தர்கள் அனைவரையும் அவர்களது அந்தஸ்திற்கேற்ப கௌரவிப்பது மர்க்கத்தில் உள்ள ஒரு விடயமாகும்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாம் பற்றிய தெளிவை ஏற்படுத்துவதற்காக வசதியுள்ளவர்கள் தமது வீடுகளைப் பயன்படுத்த முடியும். முஸ்லிம் பாடசாலைகளையும், மத்ரஸாக்களையும் அல்லது பொதுவான மண்டபங்களையும் இதற்காகப் பயன்படுத்த முடியும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் சபா மலைக்கு அருகாமையில் தமது குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து இஸ்லாத்தை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

மேலும், முஸ்லிம் அல்லாதவர்கள் மஸ்ஜிதில் நுழைவதற்கான தேவையிருந்தால் அவர்களை அனுமதியளிக்கும் விடயத்தில் மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மஸ்ஜிதுல் ஹராம் தவிர்ந்த ஏனைய மஸ்ஜித்களுக்கு, அவற்றில் பேணவேண்டிய ஓழுங்குகளுடன் நுழைய அனுமதிக்கலாம் என்று ஷாபிஈ மத்ஹபுடைய அறிஞர்கள் கூறுகின்றனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுமாமா இப்னு உஸால், ழிமாம் இப்னு ஸஃலபா போன்ற சில தனிப்பட்ட நபர்களுக்கு மஸ்ஜிதிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். அதேபோன்று சில குழுக்களுக்கும் மஸ்ஜிதிற்குள் நுழைய அனுமதியளித்துள்ளார்கள். இவை சஹீஹான ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறு முஸ்லிமல்லாதவர்கள் மஸ்ஜித்களுக்குள் நுழையும் அவசியம் ஏற்படின் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளும்; உள்ளன. அவற்றில் சில பின்வருமாறு:

1. இதற்காக பொருத்தமான மஸ்ஜித்களை மாத்திரம் தெரிவு செய்தல்.

2. மஸ்ஜித் வளாகத்தில் இதற்கென்று பிரத்தியேக இடமொன்றை ஓழுங்கு செய்து கொள்வதும் பொருத்தமாகும்.

3. ஏகத்துவம் பகிரங்கப்படுத்தப்படும் இடமாகிய மஸ்ஜிதில் இணைவைத்தலுடன் சம்பந்தமான எந்தக் காரியமும் நிகழா வண்ணம் ஏலவே உத்தரவாதப்படுத்திக்கொள்ளல்.

4. மஸ்ஜிதைத் தரிசிக்க வருவோருக்கு மஸ்ஜிதின் மகத்துவம் மற்றும் ஒழுங்கு முறைகள் பற்றிய தெளிவொன்றை ஆரம்பத்திலேயே வழங்குதல்.

5. ஆண், பெண் இருபாலாரினதும் ஆடைகள் ஒழுக்கமான முறையில் இருத்தல்.

6. மஸ்ஜிதில் நுழைய விரும்பும் பெண்களுக்கு பிரத்தியேக ஆடையொன்றை ஏற்பாடு செய்தல்.

7. பாதணிகளுடன் மஸ்ஜிதிற்குள் நுழைவதை அனுமதிக்காதிருத்தல்.

8. போதையுடன் இல்லாதிருத்தல்.

9. எக்காரணம் கொண்டும் தொழுகை மற்றும் ஜுமுஆ போன்ற வழிபாடுகளுக்கு இடையூறு இல்லாததாக இருத்தல்.

10. றமழானுடைய மாதத்தில் இப்தாருடைய நேரத்தில்; அவர்களை அழைக்கும் பொழுது இப்தாருடன் சம்பந்தப்பட்ட வணக்கங்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், அந்நேரங்களில் அவர்களை அழைப்பதை முற்றாகத் தவிர்த்;துக் கொள்ளல்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

கோழியை அறுப்பதற்கு முன்னர் அதனை மயக்கும் நோக்கத்தில் மின்சார அதிர்ச்சியை ஏற்படுத்தும் போது அது இறந்து விடுமானால் அல்லது அது இறந்ததற்குரிய அறிகுறிகள் ஏதும் தென்படுமானால் அதன் மாமிசத்தை உண்பது ஹலாலாக மாட்டாது. இந்நிலையில் அதன் உணவுக் குழாய் சுவாசக் குழாய் மற்றும் கழுத்தில் உள்ள இரு பெரும் நாளங்கள் என்பவற்றைத் துண்டித்தாலும் அதை உண்பதற்கு அனுமதி கிடையாது.

அதே நேரம் மின்சார அதிர்ச்சியின் மூலம் மயக்கமுற்ற கோழி அறுக்கப்படாது விடப்பட்டால் மீண்டும் சற்று நேரத்தில் சுய உணர்வுக்கு வருவது உறுதியாக இருந்தால் அந்தக் கோழியை மயக்கமுற்ற நிலையில் அறுக்க முடியும்.

 இருப்பினும் இம்முறையில் அறுக்;கப்படும்பொழுது கோழி மின்சார அதிர்ச்சியின் வேதனையை உணராத அளவு மின் அழுத்தத்தின் அளவைக் குறைத்தல் அவசியமாகும்.

பொதுவாக,  மிருகங்கள் மற்றும் பறவைகளை இயல்பான முறையில் அறுப்பதே மிகவும் ஏற்றமானதாகும். மேலும், அறுக்கப்படும் பிராணிகள் துன்புறுத்தப்படுவது கூடாது என்பது கவனத்திற்கொள்ளப்படல் வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹு

 

 

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

திருமணம் என்பது ஒரு முஸ்லிமான ஆண் ஒரு முஸ்லிமான பெண்ணை வலீ, சாட்சி, மற்றும் மஹ்ர் மூலம் தாம்பத்திய வாழ்விற்கு ஹலாலான பெண்ணாக ஆக்கிக் கொள்வதாகும்.

பொதுவாக முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவது, அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வது போன்ற விடயங்களை இஸ்லாம் தாராளமாக அனுமதித்தாலும், ஒரு முஸ்லிமான பெண் அல்லது ஆண் முஸ்லிமல்லாத ஓர் ஆணை அல்லது (யூத, கிறிஸ்தவப்) பெண்கள் அல்லாத பெண்ணைத் திருமணம் செய்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கவில்லை.

அவ்வாறு திருமணம் செய்;தால் அது இஸ்லாத்தின் பார்வையில் செல்லுபடியற்றதாகவே கருதப்படும். அவ்வாறு திருமணம் செய்வது ஹராம் என்று தெரிந்தும், அதை தன்மீது ஹலாலாக்கி திருமணம் செய்து கொண்டால் அப்பொழுது அவர் இஸ்லாத்தை விட்டும் நீங்கியவராக கருதப்படுவார். அதே வேளை அவ்வாறு செய்வது ஹராம் என்று தெரிந்து கொண்டே திருமணம் செய்;து உடலுறவு கொண்டால் அது விபச்சாரமாகவே கருதப்படும்.

என்றாலும், மாற்றப்பட (அல்-குர்ஆன் இறங்க) முன்னுள்ள, திரிபு படுத்தப்படாத, உண்மையாக இருக்கும் நிலையில் இருந்த, தௌராத் அல்லது இன்ஜீலைப் பின்பற்றும் வேதக்கார பரம்பரையைச் சேர்ந்த (யூத, கிறிஸ்தவப்) பெண்களை இஸ்லாமிய அடிப்படையில் திருமணம் செய்வதற்கு அனுமதியுண்டு.

அவ்வாறு, மாற்றப்பட (அல்-குர்ஆன் இறங்க) முன்னுள்ள, திரிபு படுத்தப்படாத, உண்மையாக இருக்கும் நிலையில் இருந்த, தௌராத் அல்லது இன்ஜீலைப் பின்பற்றும் வேதக்கார பரம்பரையைச் சேர்ந்தவர் எனும் விடயத்தில் சந்தேகம் ஏற்பட்டால் அல்லது அப்பரம்பரையைச் சார்ந்த பெண் அல்ல என்பது உறுதியாகத் தெரிந்தால் அப்பெண்ணைத் திருமணம் செய்வது ஹராமாகும்.

முஸ்லிம் அல்லாத ஒருவரை, ஒரு முஸ்லிமான ஆண் அல்லது பெண் திருமணம் செய்து, அதே நிலையில் மரணித்தால் அவர் செய்த இச்செயல் பெரும்பாவமாக இருந்தாலும், அவர்  இஸ்லாத்தை  விட்டும் நீங்கியவராகக் கணிக்கப்படமாட்டார். எனவே, அவருக்கு ஒரு முஸ்லிம் மரணித்தால் செய்ய வேண்டிய அனைத்துக்  கடமைகளையும் செய்வது அவசியமாகும்.

என்றாலும், குறிப்பிட்;ட நபர் இஸ்லாத்தை விட்டும் நீங்கியது உறுதியாகத் தெரிந்தால், அப்போது ஒரு முஸ்லிம் மரணித்தால் செய்ய வேண்டிய கடமைகளை அவருக்கு செய்வதோ, முஸ்லிம் மையவாடியில் அவரை அடக்கம் செய்வதோ கூடாது.

எதிர் காலத்தில் இத்தகைய திருமணங்கள் நடைபெறாமல் இருப்பதற்குத் தேவையான ஆக்கபூர்வமான அறிவுரைகளையும் மார்க்கத் தெளிவுகளையும் பொதுமக்களுக்கு வழங்குவது ஆலிம்களதும் சமூக நலன்விரும்பிகளதும் கடமையாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

தமத்துஃ முறையில் நிய்யத் வைத்த ஒருவர் உம்ரா செய்துவிட்டு ஹஜ்ஜுடைய அமல்களை ஆரம்பிக்குமுன் உள்ள இடைப்பட்ட காலத்திலோ அல்லது பொதுவாக ஏனைய காலத்திலோ,  ஒரே பயணத்தில் ஒன்றை விடப் பல உம்ராக்களை செய்வது விரும்பத்தக்க அமலாக இருந்தாலும், ஹஜ்ஜுடைய காலங்களில் ஒன்றை விட அதிகமான உம்ராக்களை நிறைவேற்றும் பொழுது பர்ளான உம்ராவை நிறைவேற்றுபவர்களுக்கு இடநெருக்கடி ஏற்படுமாயின் அல்லது தனக்கு ஹஜ்ஜுடைய அமல்களை நிறைவேற்றுவதற்கு சிரமம் ஏற்படலாம் என அஞ்சினால் மேலதிக உம்ராக்களைச் செய்யாமல் இருத்தல் நல்லது.