குறியெண்: ACJU/SCR/2021/003
12 ஜனவரி 2021
கௌரவ உதய கம்மன்பில அவர்கள்
எரிசக்தி அமைச்சர்
எரிசக்தி அமைச்சு
ஸ்ரீ லங்கா ஜனனாயக சோ~லிஸ குடியரசு
மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே,
அடக்கம் செய்தல் பற்றி திருக்குர்ஆனில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என தாங்கள் பாராளுமன்றத்தில் மேற்கொண்ட கூற்று தொடர்பானது
அண்மையில் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களை அடக்கம் செய்வது பற்றி திருகுர்ஆனில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று நீங்கள் கூறிய தவறான கூற்று குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிகுந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறது. ஆளும் கட்சியின் முன்னணி உறுப்பினரும், ஒரு முக்கிய அமைச்சரும், ஒரு வழக்கறிஞருமான உங்களிடமிருந்து இதை விட விவேகமான அணுகுமுறையை நாம் எதிர்பார்த்தோம். 2021 ஜனவரி 8ஆம் திகதி பாராளமன்றத்தில் நீங்கள் கூறியுள்ள கூற்றானது முற்றிலும் தவறானதாகும்.
இஸ்லாமிய மார்க்க தீர்வுகளை பெறுவதானது திருகுர்ஆனின் வசனங்களையும் அதனுடன் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்களுடைய வழிகாட்டல்களாகிய ஹதீஸ் கலைகளையும் நன்கு கற்ற இஸ்லாமிய அறிஞர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
எவ்வாறாயினும், திருக்குர்ஆனை நீங்கள் இருதடவை வாசித்துப் பாரத்ததையிட்டு எங்கள் பாராட்டுக்களை தெரிவிக்கும் அதே வேளையில், கட்டாயம் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று அதில் எங்கும் இல்லை என்று சொல்வது முற்றிலும் தவறானதாகும் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இஸ்லாமீய மத போதனைகளுடன் தொடர்புடைய மார்க்கத் தீர்ப்புகளைப் பெறும் முறை தொடர்பான சில விடயங்களை தெளிவுபடுத்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விரும்புகிறது.
இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் பின்வரும் நான்கு மூலங்களில் இருந்தே பெறப்படும்:
1. திருக்குர்ஆன்
2. நபிமொழி (சுன்னா)
3. இஜ்மா (அறிஞர்களின் இணக்கப்பாடு)
4. கியாஸ் (ஒத்த சந்தர்ப்பங்கள்)
திருகுர்ஆன் என்பது இறை வசனமாவதோடு, மனித குலத்திற்கான முழுமையான வழிகாட்டியாகவும் உள்ளது. இது உலகத்தாருக்கு வழிகாட்டியாக இறக்கப்பட்டதுடன் விடயங்களை கருத்தியல் ரீதியாகவும் உரையாற்றுகிறது. இதற்கு கால அல்லது பிராந்திய வரம்புகள் எதுவும் கிடையாது. இருப்பினும் சட்ட திட்டங்களுக்காக திருக்குருஆனை மட்டும் நோக்குவது சாத்தியமல்ல. ஏக இறைவனின் இறுதித் தூதரின் முன்மாதிரி மற்றும் அறிவுரைகளையும் நாம் சேர்த்தே நோக்க வேண்டும்.
உதாரணமாக, இஸ்லாத்தின் மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகிய தொழுகை பற்றி குர்ஆன் மிக விளக்கமாக எதுவும் கூறவில்லை. ஐவேளை தொழுகைகளின் பெயர்கள், அவற்றிற்கான நேரங்கள், தொழுகை நிறைவேறுவதற்கான நிபந்தனைகள் மற்றும் அது எவ்வாறு உடல் ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன திருக்குருஆனில் விரிவாக விவரிக்கப்படவில்லை. அவ்வாறு குறிப்பிடப்படவில்லை என்பதை காரணம் காட்டி முஸ்லிம்கள் அதை நிறைவேற்றத் தேவையில்லை என எவரும் வாதிட முடியாது.
அதேபோல், உலகெங்கிலும் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் ரமலான் மாதத்தின் நோன்பு, வசதியுள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டிய ஸகாத் மற்றும் ஹஜ் யாத்திரை ஆகியவற்றை திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது திருக்குர்ஆனில் விரிவாக விளக்கப்படவில்லை. இதனை காரணம் காட்டி அப்பொறுப்புக்களைப் பற்றி முஸ்லிம்கள் கவலைப்படத் தேவையில்லை என்று ஒருவர் வாதிட முடியாது. ஏனென்றால், இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்காக திருக்குர்ஆனை மட்டும் நோக்குவது நமக்கான வழிமுறையல்ல.
எனவே, இஸ்லாத்தின் மிக அடிப்படைக் கோட்பாடுகளைக் கூட விரிவாகப் புரிந்துகொள்வதற்கு மேற்கூறிய அடிப்படை ஆதாரங்களை கூட்டாகக் குறிப்பிட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு இஸ்லாமிய மார்க்க சட்டம் பற்றி நாம் தெரிந்து கொள்ள விரும்பினால், திருக்குர்ஆன் என்பது முதல் மற்றும் முக்கிய ஆதாரமாக இருந்த போதிலும், அதனுடன் சேர்த்து கவனத்தில் கொள்ள வேண்டிய ஏனைய பிற மூலங்களும் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய ஒருவருக்கு சிறப்பு கலைகளின் அறிவும் திறமையும் இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதன்படி, ஒரு முஸ்லிம் இறந்ததும், அவரை குளிப்பாட்டி, வெள்ளைத் துணியால் கஃபன் செய்து, தொழுகையை நிறைவேற்றி அதன் பின் மண்ணில் அடக்கம் செய்வது என்ற வரிசையான செயன்முறையை, ஒருவர் திருக்குர்ஆனை ஒராயிரம் தடவைகள் புறட்டினாலும் காண மாட்டார்.
மேலும், அடக்கம் பற்றி திருக்குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை என்று நீங்கள் சொல்லியிருப்பதும் முற்றிலும் தவறாகும். உண்மையில், திருக்குர்ஆன் சுமார் பத்து இடங்களில் அடக்கம் செய்வது பற்றி பேசியுள்ளது. ஏனைய இஸ்லாமிய கடமைகள் போலவே, அடக்கம் தொடர்பான முழுமையான செயன்முறையும் நாம் நபியவர்களின் வழிகாட்டுதல் மற்றும் எடுத்துக்காட்டுகள் மூலமாகவும், மார்க்க அறிஞர்களின் உதவியுடனேயே அறிந்து கொள்கின்றோம்.
ஒவ்வொரு மதத்திற்கும் அதன் போதனைகள் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான முறைகள் இருப்பதை புரிந்து கொள்வது முக்கியமாகும், இது அந்தந்த மத அறிஞர்களின் பொறுப்பும் கடமையும் ஆகும்.
குறிப்பிட்ட விடயத்தில் அதிகாரப்பூர்வ அறிவு உள்ளவர்களின் சரியான ஆலோசனை இல்லாமல் பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் அளிக்கும் இத்தகைய அறிக்கைகள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன.
இஸ்லாம் மற்றும் புனித குர்ஆன் அல்லது வேறு எந்த மதத்தையும்; எந்தவொரு அரசியல் தேவைக்கும் பயன்படுத்துவதைத் தவிர்ந்துகொள்ளுமாறு மரியாதைக்குரிய உங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறது. எங்கள் தாய்நாட்டில் உள்ள சமூகங்களுக்குள் தேவையற்ற பிரச்சினைகள், தவறான எண்ணங்கள் மற்றும் தவறான புரிதல்கள் தவிர்க்கப்படுவதை உறுதிசெய்ய மேற்கூறிய தவறான அறிக்கைகளை சரிசெய்யுமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்விடயம் பற்றி மேலும் விரிவான விளக்கங்களைப் பெற நீங்கள் விரும்பினால் தங்களை நேரில் சந்தித்து தெளிவுரைகளை தரவும் நாம் தயாராக உள்ளோம்.
நம் அனைவரையும் அல்லாஹ் நேர் வழியில் நடாத்துவானாக, ஆமீன்!
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா