Ref: ACJU/NGS/2022/109

2022.05.09

ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருவோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை தொடர்பாக தமது எதிர்ப்பை முன்வைத்து ஜனநாயக ரீதியில் காலி முகத்திடலிலும் அலரி மாளிகைக்கு முன்னிலும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டவர்கள் மீது இன்று தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமையானது மிகவும் கவலையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்திற்கு எதிரான இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இத்தாக்குதல் தொடர்பில் நியாயமான மற்றும் வெளிப்படையான ஒரு விசாரணை நடாத்தப்பட்டு, இதனை மேற்கொண்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாம் கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் சகல தரப்பினரும் வன்முறையை தவிர்ந்து அமைதியான முறையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

அஷ்-ஷைக் எம். எஸ். எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ACJU/NGS/2022/006

2022.01.09 (1443.06.05)

அஷ்ஷைக் ஜே. அப்துல் ஹமீத் பஹ்ஜி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

மதவாக்குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நம் நாட்டின் மூத்த ஆலிம்களில் ஒருவரான அஷ்ஷைக் ஜே. அப்துல் ஹமீத் பஹ்ஜி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. இலங்கை ஃபாஸிய்யத்து ஷாதுலிய்யா தரீக்காவின் கலீபத்துல் குலபாவாகிய அஷ்ஷைக் ஜே. அப்துல் ஹமீத் பஹ்ஜி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் இன்று (2022.01.09) தனது 66 ஆவது வயதில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

காலி கோட்டை பஹ்ஜத்துல் இப்ராஹிமிய்யா அரபுக் கல்லூரி, மதவாக்குளம் ஷரபிய்யா அரபுக் கல்லூரி மற்றும் உம்மு ஸாவியா மஸ்ஜிதில் அமைந்துள்ள அஜ்வத் அல் ஃபாஸி அரபுக் கல்லூரி ஆகியவற்றின் பணிப்பாளராகவும், கொழும்பு உம்மு ஸாவியா மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஆகியவற்றின் பிரதான கதீபாகவும் இருந்த அவர்கள், ஆரம்ப காலம் முதல் சமூகத்துடன் ஈடுபாடு கொண்டவராகவும் இருந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அன்னார், 2013 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக செயற்பட்டு சமூகத்துக்கு பாரிய பணிகளையும் மேற்கொண்டுள்ளார்கள்.

இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ{தஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களை பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

 أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله

(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே. அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக.)

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 

 

 

ACJU/NGS/2022/002

ஜனவரி 07, 2022

பேராசிரியர் சன்ன ஜயசுமான அவர்களுக்கான பதில்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை “திட்டவட்டமான தவறு” என்று மறுதலிக்கின்றது.

மருந்துப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய பேராசிரியர் சன்ன ஜயசுமான அவர்கள், 42 வருடங்களுக்கு முன்பாக அன்றைய ஜம்இய்யதுல் உலமாவினால் விடுக்கப்பட்ட, சட்ட ரீதியாக பிணையாத மார்க்க கருத்துரையொன்று தொடர்பில் நீதி அமைச்சருக்கு முறைப்பாடு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் ஆழ்ந்த கவலையை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துக்கொள்கின்றது. பொறுப்புள்ள கல்விமானாக, இவ்விடயத்தை மூன்றாம் தரப்புக்கு எடுத்துரைப்பதை விட, முஸ்லிம் அறிஞர்களைக் கொண்ட, இலங்கையில் நன்கு அறிமுகமான நிறுவனமான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிடம் இது தொடர்பான தெளிவுகளை பெற்றிருக்கலாம்.

42 வருடங்களுக்கு முன்பு ‘அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவானது மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான சட்டத்துக்கு புறம்பான தீர்ப்பொன்றை வழங்கி உள்ளது’ என்ற பேராசிரியர் சன்ன ஜயசுமான அவர்களின் குற்றச்சாட்டு, திட்டவட்டமான பொய்யானதாகவும், பாரதூரமான விஷமம் நிறைந்ததும், முன்னைய காலத்தில் இலங்கை முஸ்லிம்களால் நன்கு மதிக்கப்பட்ட அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் மூத்த, பிரபலமான அறிஞர்களை இழிவு படுத்துவதாகவும் உள்ள கருத்தாக அமைந்துள்ளது.

முன் எப்போதோ தீர்த்து வைத்த விடயம் ஒன்றை, அண்மையில் பாகிஸ்தான் சியால்கோட் பிரதேசத்தில் நடைபெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்துடன் தொடர்பு படுத்தி, பாகிஸ்தான் அரசும், அங்குள்ள மக்களும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு தம்மால் முடிந்த பேருபகாரத்தை செய்துள்ள நிலையில், பேராசிரியர் ஜயசுமான அவர்கள் இவ்விடயத்தை நினைவூட்டுவதன் காரணம் என்ன என்பதை வினவுவதற்கு நாம் உந்தப்படுள்ளோம்; அதுவும், குறிப்பாக இலங்கையர்களாகிய நாம் பொருளாதார இடரில் சிக்கித்தவிக்கும் இச்சந்தர்ப்பத்தில், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வெளி நிதியுதவிகளை பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமையில்.

என்றாலும் தெளிவிற்காக, பின்வரும் விடயங்களை குறிப்பிட விரும்புகின்றோம்:

இஸ்லாமிய மார்க்க விடயங்களுக்கு மாத்திரம் அறிவுரை வழங்கும் இஸ்லாமிய மார்க்க அமைப்பு என்ற வகையில், எந்த விடயத்துக்கும் சட்டரீதியான தீர்ப்புக்கள் வழங்குவது என்பது எமது அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட விடயமாகும்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையானது இஸ்லாமிய மார்க்க விடயங்களில் சட்டரீதியாக பிணையாத கருத்துரைகளையே வழங்கி வருவதுண்டு.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் இலங்கை முஸ்லிம்கள், ஏனைய பிரஜைகளைப் போன்றே இந்நாட்டின் ஒரே நீதித்துறைக்கு கீழ் கட்டுப்பட்டவர்களே என்பதனை ஆணித்தரமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

என்றாலும், தமது சமூகங்களை வழிகேடான, தத்தமது மதங்களின் அடிப்படை கொள்கைகளுக்கு அந்நியமான சிந்தனைகள் தொடர்பாக அறிவுறுத்துவதும், தெளிவூட்டுவதும் அந்தந்த மதச் சபைகளின் பொறுப்பாகும். மேலும், எவராவது மதத்தின் பெயரில் சமூகத்தை பிழையாக வழிநடாத்த முயற்சித்தால், குறித்த சிந்தனைகள் வழிகேடனாவை என்றும், பிழையென்றும் பிரகடனப்படுத்தி சட்டரீதியாக பிணையாத மார்க்க கருத்துரைகளை வழங்குவது மதச் சபைகளின் தார்மீகப் பொறுப்பாகும்.

நாட்டினது ஒவ்வொரு துறையும் மிகப்பாரதூரமான பொருளாதார பின்னடைவை எதிர்கொண்டுள்ள நிலையில் பேராசிரியர் ஜயசுமானவின் கதை எழுத்தாளர், சியால்கோட் சம்பவத்தை பொருத்தப்பாடு இல்லாமல் குறிப்பிட்டு எமது பாகிஸ்தானுடனான உறவை சீர்குலைப்பதற்கும், பொது மக்களை நாட்டின் அபிவிருத்திக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் ஒன்றிணைப்பதனை விடுத்து, எமது சமூகங்களை உள் மத விவகாரங்கள் அடிப்படையில் பிரிப்பதற்கும் முயற்சி செய்துள்ளமையானது எம்மை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பேராசிரியர் அவர்கள் தீய சக்திகளினால் வழிநடாத்தபடுவதிலிருந்து தன்னை காத்து, எம்முடன் சுமுகமான கலந்துரையாடல் ஒன்றுக்கு வருகை தருமாறு அன்பாக அழைப்புவிடுக்கின்றோம்.

உண்மையும், நீதியும் நிலைக்கட்டுமாக!

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

ACJU/NGS/2021/012

1442.07.11

2021.02.24

 

அன்புடையீர்!


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு


எக்காலத்திலும் நாம் எல்லா விடயங்களிலும் மார்க்க வழிகாட்டலின் அடிப்படையிலேயே எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொழில்நுற்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் எமது செயல்பாடுகள் அனைத்தும் மார்க்க வழிகாட்டல்களுக்கு ஏற்ப அமையும் போதே இம்மையிலும், மறுமையிலும் நன்மையைப் பெற முடியும்.


يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا ۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ‏ (49:06)


முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:06)


عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ» (صحيح مسلم : 06)


ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹு முஸ்லிம், ஹதீஸ் எண் : 06)


ஒரு தனிநபரைப் பற்றியோ அல்லது ஒரு நிறுவனத்தைப் பற்றியோ ஏதேனும் செய்திகள் கிடைக்கும் போது, அதனை நன்கு விசாரித்து மார்க்க முறைப்படி உறுதிப்படுத்தாது, அதனை உண்மைப்படுத்துவதோ அல்லது மற்றவரிடம் கூறுவதோ பெரும்பாவமாகும். மேற்கூறப்பட்ட அல்-குர்ஆன் வசனமும், நபிமொழியும் எமக்கு இதனையே போதித்துள்ளது.


தற்போதைய சூழ்நிலையில் ஒருசிலர் தமது சுயநோக்கங்களுக்காக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை குறிவைத்துத் தாக்கி, பொய்யான செய்திகளை சமூக ஊடகங்களில் பரவ விடுவதை காண்கின்றோம். இச்செயல் மார்க்க ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் தவறான ஒன்றாகும்.


وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ ۖ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَىٰ أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ (04:83)


மேலும், பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்;. அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். (04:83)


مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ (50:18)


(மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது.)


ஒரு முஸ்லிமைப் பொருத்தவரையில் எச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹு தஆலா கூறும், இவ்வசனத்தை தனது உள்ளத்தில் நிலைத்திருக்கச் செய்வது ஈமானின் ஒரு பகுதியாகும்.


எனவே, உங்களிடம் யாரைப்பற்றியாவது அல்லது எந்த நிறுவனத்தைப் பற்றியாவது அல்லது ஏதாவது ஒரு விடயத்தைப் பற்றியாவது செய்திகள் வரும்போது, மிகவும் கவனமாக நடந்து கொள்வதுடன், உரியவர்களிடம் தெளிவைப் பெறாது அதனை உண்மைப்படுத்தவோ பிறருடன் அதனைப் பகிர்ந்து கொள்ளவோ வேண்டாமென அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.


குறிப்பாக ஜம்இய்யாவைப் பற்றியோ, அதன் தலைவரைப் பற்றியோ அல்லது வேறு ஒரு நிறுவனத்தைப் பற்றியோ அல்லது வேறு ஒரு தனிநபரைப் பற்றியோ, செய்திகள் வரும்போது அதனை உறுதிப்படுத்தாது, பகிர்வதை தவிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.


மேலும், பிழையான, உறுதியில்லாத செய்திகளை வெளியிடுபவர்கள், இவற்றின் மூலமாக இம்மையிலும், மறுமையிலும் ஏற்படும் பாவத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அவற்றிலிருந்து தவர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.


ஜஸாக்குமுல்லாஹு கைரா

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

ACJU/FRL/2020/21-238
2020.11.05

1442.03.17

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹூ


எமது நாட்டில் இரண்டாவது தடவையாகவும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் இந்நிலையில் சுகாதார அதிகாரிகளினால் 25 நபர்களுக்கு மேல் மஸ்ஜித்களில் ஒன்றுசேரக் கூடாது என்ற ஒரு வழிகாட்டல் பிறப்பிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஏற்கனவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் 2020.06.16 ஆம் திகதி “கோவிட் 19 அசாதாரண நிலையில் ஜுமுஆ நடாத்துவது தொடர்பான மார்க்க வழிகாட்டல்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலக்கம் 2 இல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


“ஜுமுஆக் கடமை நிறைவேறுவதற்கு நிரந்தரக் குடியிருப்பாளர்கள், பருவ வயதை அடைந்த 40 ஆண்கள் சமுகமளித்திருப்பது ஷாபிஈ மத்ஹபின்படி கட்டாயம் என்பதால், நிரந்தரக் குடியிருப்பாளர்கள் 40 ஆண்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இடநெருக்கடி அல்லது சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்மை அல்லது வேறு காரணங்களினால், 40 பேரைவிட குறைவான எண்ணிக்கையிருப்பின் அவர்கள் ழுஹ்ர் தொழுது கொள்ள வேண்டும்.” https://acju.lk/news-ta/acju-news-ta/item/1964-19


இந்நாட்டு முஸ்லிம்கள் மற்றும் ஆலிம்கள் பல வருடகாலங்களாக இவ்வடிப்படையிலேயே ஜுமுஆவுடைய இந்த அடையாளத்தைப் பாதுகாத்து வந்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இதனையே வலியுறுத்தி வந்துள்ளது.


நாட்டில் நிலவும் இந்த அசாதாரண நிலைமை எதிர்காலத்தில் நீடிக்காமல் அவசரமாக நீங்கி, நல்ல நிலைமை உண்டாகி, ஜுமுஆவை வழமை போன்று நிறைவேற்ற அல்லாஹூ தஆலா அனுகூலம் புரிய வேண்டும் என்றும், அல்லாஹூ தஆலா உங்களது கவலைகளுக்கு பூர்த்தியான கூலிகளைத் தந்தருள வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம்.


வஸ்ஸலாம்.


அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 


2020.11.05 (1442.03.17)


எமது நாட்டில் இரண்டாவது தடவையாகவும் கொரோனா வைரஸ் முன்பு இல்லாதது போன்று தீவிரமாகப் பரவி நாடு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு அரசாங்கம் பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம். இது விடயமாக அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கும் வழிகாட்டல்களை பின்பற்றி இந்த நோய் இலங்கையில் மீண்டும் பரவாமல் இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும்.


இவ்வுலகில் அனைத்து விடயங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றன என்பதை ஒவ்வொரு முஃமினும் நம்புவது அவசியமாகும். பொதுவாக அனைத்து நோய்களுக்குரிய நிவாரணியை அல்லாஹூ தஆலா இறக்கி வைத்திருக்கின்றான். அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹூரைரா றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


அத்துடன், குறித்த வைரஸ் தாக்கத்திலிருந்;து அனைவரையும் பாதுகாத்துக் கொள்ள பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் வேண்டிக் கொள்கின்றது.


1. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இடங்களில் வாழும் மக்கள் அதன் சட்டங்களை முழுமையாக பின்பற்றி நடத்தல். அத்துடன் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் எம்மனைவரதும் நலனுக்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கி பொறுப்புணர்வுடன் நடந்துக் கொள்ளல். (2020.04.06 வெளியிடப்பட்ட அறிக்கை : https://acju.lk/downloads-ta/download-posters-ta/file/244-2020-04-06-15-00-00 )


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தொழுநோய் இருக்கும் ஊருக்குள் நுழைய வேண்டாம், அந்த நோய் ஏற்பட்ட ஊரிலிருந்து வெளியேரவும் வேண்டாம். (ஸஹீஹூல் புகாரி: 5729, ஸஹீஹூல் முஸ்லிம்: 2219)


2. சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றி நடத்தல். குறிப்பாக முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளுதல் மற்றும் 1 மீட்டர் இடைவெளியை பேணுதல் போன்ற விடயங்களை கண்டிப்பாக பின்பற்றி செயற்படல்.
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தொழுநோய் உள்ளவர்கள் ஆரோக்கியமானவர்களிடமிருந்து விலகியிருத்தல் வேண்டும். (ஸஹீஹூல் புகாரி: 5771, ஸஹீஹூல் முஸ்லிம்: 2221)


3. நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்படாத பகுதிகளில் உள்ளவர்கள் அத்திவசிய தேவைகளுக்கே அன்றி வெளி இடங்களுக்கு செல்வதையும், பொது இடங்களில் ஒன்றுகூடுவதையும் தவிர்த்துக் கொள்ளல்.


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தன்னையும் மற்றவர்களையும் பாதுகாப்பதற்காக வீட்டில் இருப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் இருக்கின்றனர். (முஸ்னத் அஹ்மத்)


4. ஐவேளைத் தொழுகைகளை வீட்டில் உரியநேரத்தில் ஜமாஅத்தாக நிறைவேற்றிக் கொள்ளல். (2020.05.09 வெளியிடப்பட்ட அறிக்கை : https://acju.lk/downloads-ta/download-posters-ta/file/261-2020-05-24-14-27-19 )

 

5. மஸ்ஜித்களின் விடயங்களில் வக்ப் சபை வழங்கி வருகின்ற வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றி நடத்தல்.

 

6. இச்சோதனைகள் நீங்குவதற்காக ஏலவே அறிவுறுத்தியது போல ஒரு மாத காலத்திற்கு குனூத் அந்-நாஸிலாவை ஐவேளை தொழுகைகளில் ஓதுவதோடு, பாவமான காரியங்களிலிருந்து விலகி நடந்து, துஆ, திக்ர், இஸ்திஃபார், நோன்பு மற்றும் ஸதகா போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்தித்தல். (குனூத் அந்-நாஸிலா பற்றிய விரிவான விளக்கம் 2020.10.26 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது :https://acju.lk/news-ta/acju-news-ta/item/2005-covid-19)


அத்துடன் பின்வரும் துஆவை அடிக்கடி ஓதிவருதல்:

"‏ اللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ ‏"‏


(பொருள் : யா அல்லாஹ் வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் மோசமான நோய்களில் இருந்து உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். (அபூதாவுத் 1554)

 

7. ஆலிம்கள் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வையும் மார்க்க ரீதியான வழிகாட்டல்களையும் அடிக்கடி வழங்கி ஞாபகமூட்டல்.


எல்லாம் வல்ல அல்லாஹ் இது போன்ற கொடிய நோய்களிலிருந்து நம் தாய் நாட்டு மக்களையும் முழு உலக மக்களையும் பாதுகாப்பானாக. ஆமீன்.

 


அஷ்ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

குறிப்பு: மேற்படி வழிகாட்டல்களை மஸ்ஜித்கள் மூலம் பொது மக்களுக்கு தொடர்ந்து மூன்று தினங்களுக்கு வாசித்துக் காட்ட ஏற்பாடு செய்யுமாறு ஜம்இய்யாவின் கிளைகளையும் மஸ்ஜித் நிரவாகிகளையும் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

 

30.10.2020 / 12.03.1442

அகிலத்துக்கோர் அருட்கொடையாக வந்துதித்த நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்புச் செய்தியை வெளியிடுவதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பெருமகிழ்ச்சி அடைகின்றது.


ரபிஉனில் அவ்வல் மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாதமாகும். மனித சமூகத்துக்கு அருளாகவும், அனைவரையும் நேர் வழியின் பக்கம் வழி நடாத்தவும் வந்துதித்த நபி முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மாதம் இது.


'ரபீஉன்” என்றால் வசந்தம் என்பது பொருள். வசந்த காலம் பூமிக்கு பசுமையையும், அழகையும் கொண்டு வருவது போல 'வசந்தம்' எனப் பொருள்படும் 'ரபீஉனில் அவ்வலில்” பிறந்த நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மனித சமூகத்திற்கு சுபீட்சத்தையும், வெற்றியையும், மகிழ்ச்சியையும், அமைதியையும், மன நிறைவையும் கொண்டுவந்தார்கள்.


இன்றைய உலகின் ஆன்மீகத் தேவையை நிறைவேற்றுவதற்கும் மற்றும் உலக அமைதி, சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் அவசியமான போதனைகளும் வழிகாட்டல்களும் அன்னார் கொண்டு வந்த தீனுல் இஸ்லாத்தில் நிறைவாக உண்டு.


இறைத்தூதர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அளவிலா அன்புடனும் நேசத்துடனும் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவு கூருகின்ற இந் நன்னாளில் அவர்கள் போதித்த மனித நேயம், அன்பு, கருணை, பிறர் நலன் பேணல், நல்லிணக்கத்துடன் வாழ்தல் முதலான பண்புகளை கடைப்பிடித்து வாழ நாம் திட சங்கற்பம் பூணுவோமாக.


நடைமுறையில் இத்தினங்களில் முஸ்லிம்கள் பல்வேறு நற்காரியங்களில் ஈடுபடுவர் என்ற வகையில் அனைவரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் சமூக ஒற்றுமையைப் பேணி, சகோதரத்துவ வாஞ்சையுடன், அடுத்தவர்களின் உணர்வுகளை மதித்தும் நடந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.


கொவிட்-19 தொற்றின் காரணமாக நம் நாட்டு மக்களில் பலர் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்ற சூழலில் இந்த பொன்னான நாளில் தேவையுடைய மக்களுக்கு இன, மத பாகுபாடுகள் இன்றி உதவிக்கரம் நீட்டுமாறும் அனைவரையும் தயவாய் வேண்டிக் கொள்கின்றோம். மேலும் பயங்கர கொரோனா தொட்டின் ஆபத்து நம் நாட்டிலிருந்தும் உலகிலிருந்தும் விரைவில் நீங்கி எல்லோருக்கும் சுபீட்சமான வாழ்வு பிறக்க பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் எல்லோரையும் கேட்டுக் கொள்கின்றோம்.


நமது தாய் மண்ணில் சாந்தியும், சமாதானமும், நல்லுறவும் நல்லிணக்கமும் ஓங்க வேண்டும் என இன்றைய நன்னாளில் எல்லாம் வல்ல அல்லாஹூத் தஆலாவிடம் பிரார்த்திக்கின்றோம்.

 

முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Ref: ACJU/GEN/2020/025

10.09.2020/21.01.1442

நேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக

 

2020.09.09ம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது அதிருப்தியையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் நேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவுக்கு ஜம்இய்யா சார்பில் ஆஜராகிய அதன் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக்  எம்.எம்.எம். முர்ஷித் அவர்கள் தொடர்பாக ஊடகங்களில் வந்துள்ள செய்திகள் தொடர்பில் உரிய தெளிவை அவரிடமிருந்து பெறுவதற்காக ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுவின் அவசரக் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் தலைமையகத்தில் நடைபெற்றது. மேற்படிக் கூட்டத்தில் ஜம்இய்யாவின் யாப்பின் பிரகாரம் குறித்த விடயத்தை விசாரித்தறிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் அவர்கள் விசாரணை முடியும் வரை ஜம்இய்யாவின் உதவிப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் நீங்கிக் கொள்வதாக எழுத்து மூலம் ஜம்இய்யாவின் தலைமையகத்துக்கு அறியத் தந்துள்ளார். ஜம்இய்யாவும் அவரது குறித்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை இத்தால் அறியத் தருகின்றோம். 

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம்

உதவிப் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

ACJU/FRL/2020/13-230

 

24.08.2020

04.01.1442

 

அன்புடையீர்!

 

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

 

நிர்ப்பந்த நிலையில் ஒரே மஸ்ஜிதில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜுமுஆக்கள் நடாத்துவது தொடர்பாக

 

கடந்த 16.06.2020 அன்று கோவிட் 19 அசாதாரண நிலையில் ஜுமுஆ நடாத்துவது தொடர்பான மார்க்க வழிகாட்டல் ஒன்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டிருந்தது. குறித்த வழிகாட்டலில், ஓர் ஊரில் பல இடங்களில் ஜுமுஆ நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்துகொள்ள முடியாதவர்கள் பத்வாப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தது.

 

அந்த அடிப்படையில், எந்தெந்த மஸ்ஜித்களில் சுகாதார அதிகாரிகளின் இடைவெளி பேணல் முறையை அமுல்படுத்தும் போது குறித்த நேரத்திற்கே மஸ்ஜிதுக்கு சமுகமளித்திருக்கும் அனைவரையும் அனுமதிக்க முடியாதுள்ளனவோ, அத்தகைய மஸ்ஜித்கள் குறித்த கோவிட் 19 உடைய அசாதாரண நிலையைக் கவனத்திற்கொண்டு நிர்ப்பந்தமான இந்நிலையில், இரண்டாவது ஜுமுஆவை நடாத்தும் விடயத்தில் பத்வாப் பிரிவின் துரித இலக்கத்தை 0117490420 தொடர்பு கொண்டு மார்க்க வழிகாட்டலைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

 

வஸ்ஸலாம்.

 

 

 

அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்

செயலாளர் - பத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா