1442.06.28
2021.02.11
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹமத்துல்லாஹி வபறகாத்துஹூ
சோதனைகள், சிரமங்கள் ஏற்படும் போது தொழுகை, நோன்பு, துஆ, திக்ர், இஸ்திஃபார் மற்றும் ஸதகா போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு, அல்லாஹ்வின் பக்கம் நாம் திரும்புவது அச்சோதனைகள் நீங்குவதற்கும் அதன் மூலம் நலவுகள் உருவாகுவதற்கும் காரணமாக அமைகின்றது.
மேலும், சோதனைகளின் போது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைகளில் குனூதுன்னாஸிலா ஓதிவந்துள்ளார்கள். இதனை அடிப்படையாக வைத்து நாமும் கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெற குனூதுன்னாஸிலா ஒதிவந்தோம்.
தற்போது நாட்டில் கொரோனாவின் அச்சுறுத்தல் மட்டுமல்லாது, அரபு மத்ரஸாக்கள் மற்றும் முஸ்லிம் தனியார் சட்டம் போன்றவற்றுக்கான அச்சுறுத்தல்களும் மீண்டும் முடக்கிவிடப்படுவதால், இவை அனைத்திலிருந்தும் பாதுகாப்புப்பெற சுருக்கமாகவும், உருக்கமாகவும், மஃமூம்களுக்கு சிரமமில்லாத முறையில் தொடர்ந்தும் ஐவேளைத் தொழுகைகளில் குனூதுன்னாஸிலாவை ஒரு மாதகாலத்திற்கு ஓதிவருமாறு மஸ்ஜிதுடைய இமாம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் - பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
2020.11.05 (1442.03.17)
எமது நாட்டில் இரண்டாவது தடவையாகவும் கொரோனா வைரஸ் முன்பு இல்லாதது போன்று தீவிரமாகப் பரவி நாடு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு அரசாங்கம் பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம். இது விடயமாக அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கும் வழிகாட்டல்களை பின்பற்றி இந்த நோய் இலங்கையில் மீண்டும் பரவாமல் இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும்.
இவ்வுலகில் அனைத்து விடயங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றன என்பதை ஒவ்வொரு முஃமினும் நம்புவது அவசியமாகும். பொதுவாக அனைத்து நோய்களுக்குரிய நிவாரணியை அல்லாஹூ தஆலா இறக்கி வைத்திருக்கின்றான். அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹூரைரா றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அத்துடன், குறித்த வைரஸ் தாக்கத்திலிருந்;து அனைவரையும் பாதுகாத்துக் கொள்ள பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் வேண்டிக் கொள்கின்றது.
1. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இடங்களில் வாழும் மக்கள் அதன் சட்டங்களை முழுமையாக பின்பற்றி நடத்தல். அத்துடன் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் எம்மனைவரதும் நலனுக்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கி பொறுப்புணர்வுடன் நடந்துக் கொள்ளல். (2020.04.06 வெளியிடப்பட்ட அறிக்கை : https://acju.lk/downloads-ta/download-posters-ta/file/244-2020-04-06-15-00-00 )
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தொழுநோய் இருக்கும் ஊருக்குள் நுழைய வேண்டாம், அந்த நோய் ஏற்பட்ட ஊரிலிருந்து வெளியேரவும் வேண்டாம். (ஸஹீஹூல் புகாரி: 5729, ஸஹீஹூல் முஸ்லிம்: 2219)
2. சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றி நடத்தல். குறிப்பாக முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளுதல் மற்றும் 1 மீட்டர் இடைவெளியை பேணுதல் போன்ற விடயங்களை கண்டிப்பாக பின்பற்றி செயற்படல்.
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தொழுநோய் உள்ளவர்கள் ஆரோக்கியமானவர்களிடமிருந்து விலகியிருத்தல் வேண்டும். (ஸஹீஹூல் புகாரி: 5771, ஸஹீஹூல் முஸ்லிம்: 2221)
3. நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்படாத பகுதிகளில் உள்ளவர்கள் அத்தியவசிய தேவைகளுக்கே அன்றி வெளி இடங்களுக்கு செல்வதையும், பொது இடங்களில் ஒன்றுகூடுவதையும் தவிர்த்துக் கொள்ளல்.
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தன்னையும் மற்றவர்களையும் பாதுகாப்பதற்காக வீட்டில் இருப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் இருக்கின்றனர். (முஸ்னத் அஹ்மத்)
4. ஐவேளைத் தொழுகைகளை வீட்டில் உரியநேரத்தில் ஜமாஅத்தாக நிறைவேற்றிக் கொள்ளல். (2020.05.09 வெளியிடப்பட்ட அறிக்கை : https://acju.lk/downloads-ta/download-posters-ta/file/261-2020-05-24-14-27-19 )
5. மஸ்ஜித்களின் விடயங்களில் வக்ப் சபை வழங்கி வருகின்ற வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றி நடத்தல்.
6. இச்சோதனைகள் நீங்குவதற்காக ஏலவே அறிவுறுத்தியது போல ஒரு மாத காலத்திற்கு குனூத் அந்-நாஸிலாவை ஐவேளை தொழுகைகளில் ஓதுவதோடு, பாவமான காரியங்களிலிருந்து விலகி நடந்து, துஆ, திக்ர், இஸ்திஃபார், நோன்பு மற்றும் ஸதகா போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்தித்தல். (குனூத் அந்-நாஸிலா பற்றிய விரிவான விளக்கம் 2020.10.26 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது :https://acju.lk/news-ta/acju-news-ta/item/2005-covid-19)
அத்துடன் பின்வரும் துஆவை அடிக்கடி ஓதிவருதல்:
" اللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ "
(பொருள் : யா அல்லாஹ் வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் மோசமான நோய்களில் இருந்து உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். (அபூதாவுத் 1554)
7. ஆலிம்கள் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வையும் மார்க்க ரீதியான வழிகாட்டல்களையும் அடிக்கடி வழங்கி ஞாபகமூட்டல்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இது போன்ற கொடிய நோய்களிலிருந்து நம் தாய் நாட்டு மக்களையும் முழு உலக மக்களையும் பாதுகாப்பானாக. ஆமீன்.
அஷ்ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
குறிப்பு: மேற்படி வழிகாட்டல்களை மஸ்ஜித்கள் மூலம் பொது மக்களுக்கு தொடர்ந்து மூன்று தினங்களுக்கு வாசித்துக் காட்ட ஏற்பாடு செய்யுமாறு ஜம்இய்யாவின் கிளைகளையும் மஸ்ஜித் நிரவாகிகளையும் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
ACJU/FRL/2020/19-236
2020.10.26
1442.03.08
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹூ
உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் (Covid- 19) பரவி அதன் மூலம் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்கள். எமது நாட்டிலும் அந்தத் தாக்கம் காணப்படுகின்றது. அதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.
அல்லாஹூ தஆலா அடியார்களுக்கு சோதனைகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதையே விரும்புகின்றான். இச்சோதனைகள் நீங்குவதற்காக தொழுகை, நோன்பு, துஆ, திக்ர், இஸ்திஃபார், மற்றும் ஸதகா போன்ற நல்லமல்கள் மூலம் அல்லாஹ்வின் பக்கம் நாம் திரும்ப வேண்டும்.
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சோதனைகளின் போது தொழுகையில் குனூத் அன்னாஸிலாவை ஓதியுள்ள விடயம் பல ஸஹீஹான ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது. இதை அடிப்படையாக வைத்து பாரிய நோய்கள் பரவும் போது குனூத் அன்னாஸிலா ஓதுவது சுன்னதாகும் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே, இலங்கையில் கொரோனா வைரஸ் (Covid- 19) தாக்கத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதற்காக அடுத்து ஒரு மாத காலத்திற்கு ஐவேளைத் தொழுகைகளிலும் குனூத் அன்னாஸிலாவை ஓதுவதற்கு மஸ்ஜித்களில் ஏற்பாடு செய்யுமாறும் மற்றும் வீடுகளில் தொழுபவர்களும் அதனை ஓதிவருமாறும் கேட்டுக் கொள்வதோடு, மஸ்ஜிதுடைய இமாம்கள் குனூத் அன்னாஸிலாவை ஓதும் போது வழமையாக பஜ்ருடைய தொழுகைகளில் ஓதப்படும் குனூத்துடைய துஆவுடன் பின்வரும் துஆக்களை ஓதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ. (سنن أبي داود)
اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ. (صحيح البخاري)
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ. (صحيح مسلم)
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா