2023.12.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குர்ஆன் மத்ரஸா பிரிவு மற்றும் பிரச்சாரக் குழு ஆகியவற்றின் வழிகாட்டலில், ஜம்இய்யாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் புத்தளம் மாவட்டத்தை மையப்படுத்தி பல மார்க்க வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அந்தவகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மார்க்க வழிகாட்டல் நிகழ்ச்சி புத்தளம் மௌலா மக்காம் மர்கஸில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குறித்த பிரதேசத்தினை சேர்ந்த ஆண்கள், பெண்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அதனையடுத்து காஸிமிய்யா அரபிக் கல்லூரியின் இறுதிவருட மாணவர்களுக்கு ஜம்இய்யா பற்றிய அறிமுகம், மன்ஹஜ் மற்றும் பத்வா வழங்குவதன் நுணுக்கங்கள் ஆகியவற்றை தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று காஸிமிய்யா அரபிக் கல்லூரியில் நடைபெற்றது. குறித்த செயலமர்வில் காஸிமிய்யா அரபிக்கல்லூரியின் இறுதிவருட மாணவர்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
மேலும் புத்தளம் பஃகா ஜுமுஆ பள்ளிவாயலில் இளைஞர்களுக்கான மார்க்க வழிகாட்டல் வகுப்பொன்றும் நடைபெற்றதோடு நிகழ்வில் புத்தளம் மாவட்டத்தின் குறித்த பிரதேசத்தினை சேர்ந்த பல இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அத்தோடு குர்ஆன் மத்ரஸாக்களை மேம்படுத்தல், மற்றும் விரிவுபடுத்தல் எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு புத்தளம் பெரிய ஜுமுஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் மத்ரஸாக்களின் முஅல்லிம்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
புத்தளம் மாவட்டத்தை மையப்படுத்திய இந்நிகழ்வுகளில் ஜம்இய்யா சார்பில் உபதலைவர்களுள் ஒருவரான அஷ்-ஷைக் எச். உமர்தீன், பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், பிரச்சாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான், பத்வா பிரிவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் மபாஹிம், குர்ஆன் மத்ரஸா குழுவின் உறுப்பினர்களான அஷ்-ஷைக் முஹம்மத் மற்றும் அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
– ACJU Media –