2023.11.22 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் அகில இலங்கை இந்து குருமார் அமைப்பு, இலங்கை பிராமண அமைப்பு மற்றும் இலங்கை மக்கள் பேரவை ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளிடையே விஷேட சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது அண்மையில் முஸ்லிம் மதபோதகர் ஒருவர் பரத நாட்டியம் தொடர்பில் பேசிய, சர்ச்சைக்குள்ளான காணொளி தொடர்பில் ஜம்இய்யா பிரதிநிதிகள் தமது கண்டனங்களை தெரிவித்ததுடன் இஸ்லாம் பிறமதங்களோடு எவ்வாறு அழகிய முறையில் நடந்துகொள்ள வழிகாட்டியுள்ளது என்பது தொடர்பிலும் வருகை தந்திருந்த மதகுருமாருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் மதத்தலைவர்கள் பிற மதங்களை, கலாச்சாரங்களை மதித்துநடப்பவர்களாக இருக்கவேண்டியதுடன், சமூகங்களிடையே புரிந்துணர்வினையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியவர்களாக திகழவேண்டுமெனவும் இச்சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது.
குறித்த சந்திப்பில் இந்து குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி. பிரம்ம சிறீ.சிவ சிறீ கு.வை.க. வைதீஸ்வர குருக்கள், இலங்கை பிராமணர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரம்ம சிறீ. மணி சிவராமகிருஷ்ண ஐயர் மகேஸ்வர குருக்கள் மற்றும் சிவ சிறீ.சிவ. தர்ஷக ஷர்மா குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜம்இய்யா சார்பில் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி. ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் ஆகியோருடன் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன்ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின் இறுதியாக ஊடகசந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-ACJU Media-