அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சி

2023.09.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சி ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் தலைமையில் தெஹிவளை முஹியத்தீன் ஜுமுஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் அறுநூற்றுக்கும் மேற்பட்ட ஆலிம்கள் கலந்துகொண்டனர்.

‘இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் போதனைகளின் அடிப்படையில் வாழுகின்ற, தீனின் மேம்பாட்டிற்கும் சமூகத்தினதும் தேசத்தினதும் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்கின்ற ஒரு கட்டுக்கோப்பான முன்மாதிரிமிக்க முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதில் ஆலிம்களின் பங்களிப்புக்கள் என்ன? அதற்காக அவர்களை எவ்வாறு தயார்படுத்துவது என்ற தொனிப்பொருளை மையப்படுத்தியதாக இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

ஆரம்பமாக தெஹிவளை முஹியத்தீன் ஜுமுஆ பள்ளிவாயலின் பிரதம இமாம் அஷ்ஷைக் எம்.எம். அஹமத் ஸுஹைல் (ஹக்கானி) அல்குர்ஆன் ஓதி நிகழ்வினை தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் ஆலிம்கள் விவகாரப் பிரிவின் செயலாளருமான அஷ்ஷைக் எஸ்.எல். நவ்பர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தியதனை அடுத்து பொதுச்செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் ‘ஆலிம்களின் முக்கியத்துவம்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அதனைத்தொடர்ந்து ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களினால் ஜம்இய்யாவின் இதுவரைகால செயற்பாடுகள் தொடர்பில் ஆலிம்கள் மத்தியில் விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் உதவிச் செயலாளருமான அஷ்ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் முளப்பர் அவர்கள் ‘தீவிரவாதம் வேண்டாம்’ எனும் தலைப்பிலும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ்ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்கள் ‘அரபுக்கல்லூரிகளை நெறிப்படுத்துதல்’ எனும் தலைப்பிலும் உப தலைவர்களுள் ஒருவரான அஷ்ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் ஸூரி அவர்கள் ‘சமூக ஒற்றுமையின் முக்கியத்துவம்’ எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அடுத்து ஜம்இய்யாவின் பொருளாளர் கலாநிதி அஷ்ஷைக் ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் அவர்களால் ஜம்இய்யாவின் மன்ஹஜ் சபையில் தெளிவுபடுத்தப்பட்டது. அடுத்து உப தலைவர்களுள் ஒருவரான அஷ்ஷைக் ஏ.எல்.எம். கலீல் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

இறுதியாக ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் பத்வா பிரிவின் செயலாளருமான அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் அவர்களினால் கப்பாரத்துல் மஜ்லிஸ் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்விற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்கியமைக்காக தெஹிவளை முஹியத்தீன் ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகம், அங்கு கடமைபுரியும் சிற்றூழியர்கள் மற்றும் தெஹிவனை மஸ்ஜித்களின் சம்மேளனம் ஆகியவற்றிற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *