அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் சமூக சேவைக் குழுவின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆலிம்கள், முஅத்தின்கள் மற்றும் ஏனையோருக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

2024.10.31ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் சமூக சேவைக் குழுவின் ஏற்பாட்டில், கொழும்பு கிழக்கு கிளை ஜம்இய்யாவின் ஒத்துழைப்பில் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட ஆலிம்கள், முஅத்தின்கள் மற்றும் ஏனையோருக்கான உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கும் நிகழ்வு வெல்லம்பிட்டிய, ‘ஐ-மக்ஸ்’ (IMEX Hall) மண்டபத்தில் நடைபெற்றது.

ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் ‘Ummah Welfare Trust (UWT)’ எனும் சர்வதேச நலன்புரி அமைப்பின் அனுசரணையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஆலிம்கள், மஸ்ஜிதுகளில் கடமையாற்றும் முஅத்தின்கள், விதவைகள் ஆகியோர் உள்வாங்கப்பட்டு சுமார் 10,000 ரூபாய் பெறுமதியான 380 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், அகில ஜம்இய்யத்துல் உலமா சபை கொழும்பு கிழக்கு கிளையின் உறுப்பினர்கள், கொலன்னாவை மஸ்ஜித் சம்மேளன உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகம் சார்பில் சமூக சேவைக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம், குழுவின் பிரதம ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் சகோதரர் எம்.என்.எம். நுபைல், ஊடகக் குழு ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

– ACJU Media –

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *