அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகளுடனான சந்திப்பும் நூல் வெளியீட்டு வைபவமும்

2018.12.30 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் ஜம்இய்யாவின் மாவட்ட, பிராந்திய கிளைகளுடனான சந்திப்பும், சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்க கடமை எனும் நூல் வெளியீட்டு வைபவமும் தெஹிவளை முஹியித்தீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.

அஷ்-ஷைக் இன்ஆமுல் ஹஸன் அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வின் வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் நிகழ்த்தினார்கள். அவர் தனதுரையில் ஜம்இய்யா கடந்து வந்த பாதைகள் பற்றி குறிப்பிட்டதுடன் ஜம்இய்யாவின் அழைப்பை ஏற்று வருகை தந்தவர்களை வரவேற்று விடைபெற்றார்.

அதனைத் தொடர்ந்து ஜம்இய்யாவின் அடைவுகள் எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனதுரையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 15 பிரிவுகளை உள்ளடக்கி அவற்றினூடாக தன்னாலான ஏராளமான பணிகளை செய்து வருவதாகவும், அப்பணிகளுக்கு ஏனையோரின் பங்களிப்புக்களும் அவசியம் எனவும் குறிப்பிட்டார். மேலும் தமக்குள் இருந்து வரும் முரண்பாடுகளிற்குள் உடன்பாட்டை வளர்ப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒற்றுமைக்கும் ஒருங்கிணைப்பிற்குமான குழுவினால் 2010 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட நூல் எழுதும் போட்டியில் முதலிடம் பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றது. இதன் வரவேற்புறையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் பாழில் அவர்கள் நிகழ்த்தினார்கள். அவர் தனதுரையில் இந்நூல் எழுதும் போட்டு தொடர்பான பூரண தெளிவொன்றையும் வழங்கியமை குறிப்பிட வேண்டிய அம்சமாகும்.

அதனைத் தொடர்ந்து சமூக ஒற்றமை காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை எனும் நூலின் மதிப்புரை இடம் பெற்றது. இதனை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித் அவர்கள் நிகழ்த்தினார்கள். அதன் போது அவர் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள தலைப்புக்களின் அடிப்படையில் பார்க்கின்ற போது இந்நூல் மிகவும் பிரயோசமான ஒரு நூல் எனவும் இந்நூலை ஒவ்வொருவரும் கட்டாயம் வாசித்து பயன் பெற் வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் இப்புத்தகத்தை எழுதிய அஷ்-ஷைக் முப்தி அஹ்மத் மபாஸ், அஷ்-ஷைக் பாழில் ஹுமைதி ஆகியோர் பற்றிய சிறு குறிப்பொன்றையும் முன்வைத்து விடைபெற்றார்.

அதனையடுத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஹாஷிம் ஷூரி அவர்களின் சிற்றுரையொன்று இடம் பெற்றது. அவ்வுரை வேற்றுமைகளுக்கு அப்பால் ஒற்றுமைப்படுவோம் எனும் தொனிப்பொருளிலேயே அமைந்திருந்தது. அத்தோடு அந்நிகழ்வு நிறைவு பெற்றது.

மீண்டும் நிகழ்வின் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் ளுஹர் தொழுகையை தொடர்ந்து ஆரம்பமானது. இந்நிகழ்வின் முதல் நிகழ்வாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்படவுள்ள அல்குர்ஆனின் சிங்கள மொழி மூலமான விளக்கவுரை தொடர்பான தெளிவொன்றை அஷ்-ஷைக் மாஹிர் அவர்கள் முன்வைத்தார்கள். இதன் போது இவ்விளக்கவுரையை செய்வதற்கு ஆரம்பிக்கப்பட்டது முதல் இது வரை மேற்கொண்ட முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும், ஏனைய விளக்கவுரைகளில் இருந்து இவ்விளக்கவுரை சிறப்புற காரணமாக அமையும் விடயங்கள் தொடர்பாகவும் அழகிய முறையில் முன்வைத்து விடைபெற்றார்.

அதனைத் தொடர்ந்து கிளைகளின் செயற்பாட்டை மேம்படுத்தல் எனும் தலைப்பில் உரையொன்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் அர்க்கம் நூரமீத் அவர்கள் நிகழ்த்தினார்கள். இதன் போது ஜம்இய்யாவின் ஒவ்வொரு பிரிவும் செயற்படும் விதம் தொடர்பாக தெளிவு படுத்தியதுடன் ஒவ்வொரு கிளைகளும் இதனடிப்படையில் ஜம்இய்யாவின் வழிகாட்டலிள் திறன் பட செயலாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பான தெளிவு ஒன்று அத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் ஸியாட் அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *