அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் நிருவாகிகளுக்கான மாநாடு
12.06.2019ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அகில இலங்கை அரபுக் கல்லூரிகள் ஒன்றியம் ஆகியன இணைந்து அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் நிறுவாகிகளுடனான மாநாடொன்று தெஹிவளை ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.
அஷ்-ஷைக் பவ்ஸான் அவர்களின் கிராத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வின் வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களின் ஒருவரான அஷ்-ஷைக் ரிழா அவர்கள் நிகழ்த்தினார்கள். அதன் போது அரபுக் கல்லூரிகளின் அவசியம் தொடர்பாக பல விடயங்களை முன் வைத்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்வின் தலைமை உரையை எமது உப தலைவர்களின் ஒருவரான முப்தி எம்.யூசுப் ஹனீபா அவர்கள் நிகழ்த்தினார்கள். தனதுரையில் தற்போதைய நிலையில் முஸ்லிம்கள் சோதனைகளை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக் காட்டினார்.
அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்-ஷைக் இல்யாஸ் அவர்களின் உரை இடம் பெற்றது. இதனை போது அரபுக் கல்லூரிகளின் செயற்பாடுகள் தொடர்பாக பல விடயங்களையும், வழிகாட்டல்களையும் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து தெஹிவளை பிரதேச உயர் பொலிஸ் அத்தியச்சகர் அவர்களின் உரை இடம் பெற்றது. இவ்வுரையில் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக விளக்கப்பட்டதுடன் தொடர்ந்து அரபுக் கல்லூரிகள் எவ்வாறான முறையில் தமது நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடினார். அந்நிகழ்வினை தொடர்ந்து நிகழ்வின் முதல் கட்ட நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
மீண்டும் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பாழில் அவர்களின் நிகழ்வுடன் ஆரம்பமானது. இதன் போது தற்போதைய நிலையில் அரபுக் கல்லூரிகள் சட்டரீதியாக கையாள வேண்டிய விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வினை தொடர்ந்து அனைத்து அரபுக் கல்லூரிகளினதும் பிரதிநிதிகள் எட்டு பகுதிகளைக பிரிக்கப்பட்டு ஆலோசனைகளும், கலந்துரையாடல்களும் நடை பெற்றது இந்நிகழ்வுடன் பகல் உணவிற்காக இடை வேளை வழங்கப்பட்டு இரண்டாவது அமர்வு நிறைவு பெற்றது.
மீண்டும் அஸர் தொழுகையுடன் நிகழ்வின் மூன்றாம் கட்ட நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் முர்ஷித் அவர்களின் தற்போதைய நிலையில் சகவாழ்விற்காக அரபுக் கல்லூரிகளின் பங்களிப்பு எனும் தலைப்பிலான உரையுடன் ஆரம்பமானது. இந்நிகழ்வின் போது இஸ்லாம் தொடர்பான பிழையான கருத்துக்களை போக்குவதில் அரபுக் கல்லூரிகளின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக மிகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தேசிய வலையமைப்புத் திட்டம் தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் உமர்தீன் அவர்களின் உரை இடம் பெற்றது. இதன் போது இஸ்லாம் தொடர்பான விடயங்களுக்கான விளக்கங்களை பிற சமூகத்தினருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எவ்வாறான செயற்பாடுகள் மூலமாக வழங்கி வருகின்றது என்பதை குறிப்பிட்டார். அத்துடன் நிகழ்வின் மூன்றாம் கட்ட அமர்வு நிறைவு பெற்றது.
மஃரிப் தொழுகையை தொடர்ந்து மாநாட்டின் நான்காவது கட்ட நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் முப்தி எம்.ஐ.எம் அவர்களின் உரையுடன் ஆரம்பமானது. அவர் தனதுரையில் இன்றைய நிலைமையில் முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் ஒரே அணியில் பயணத்தை தொடர்வதினூடாகவே இவ்வாறான சவால்களை எம்மால் வெற்றி கொள்ள முடியும் எனவும் எமது உரிமைகளை நாம் முன்னோர்கள் போன்று இன்றும் பாதுகாக்க முன்வர வேண்டும். இவையனைத்தையும் நிதானமாகவும் முறைகளை பேணியுமே நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்றைய மாநாட்டின் பிரகடனம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் தாஸிம் அவர்களினால் வாசிக்கப்பட்டது. இத்துடன் நிகழ்வுகள் யாவும் கப்பாரதுல் மஜ்லிஸுடன் இனிதே நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் சுமார் 950 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.