‘அரபு மத்ரஸாக்களை வலுவூட்டல்’ எனும் தொனிப் பொருளிலான அரபுக் கல்லூரி அதிபர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு

2024.03.07ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவினரின் வழிகாட்டலில், ஜம்இய்யாவின் அரபிக் கல்லூரிகளுக்கான குழுவின் ஏற்பாட்டில் ‘அரபு மத்ரஸாக்களை வலுவூட்டல்’ எனும் தொனிப் பொருளிலான அரபுக் கல்லூரி அதிபர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு தெஹிவளை முஹியத்தீன் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக அஷ்-ஷைக் அல்-காரி அப்துல்லாஹ் அவர்களால் கிராத் ஓதப்பட்டதனையடுத்து நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்விற்கு வருகை தந்திருந்த அரபிக் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களை வரவேற்கும் முகமாக ஜம்இய்யாவின் அரபுக் கல்லூரிகள் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் ஜஃபர் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

அடுத்து ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் ‘நிகழ்வின் நோக்கம் மற்றும் குறிக்கோள்கள்’ எனும் தலைப்பில் குறித்த செயலமர்வின் அவசியம் பற்றி எடுத்துரைத்ததோடு உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி அவர்களால் ‘தற்கால அரபுக் கல்லூரிகளும் அவற்றின் எதிர்கால முன்னேற்றங்களும்’ எனும் தலைப்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும் ஜம்இய்யாவின் கல்விப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். நாழிம் அவர்கள் ‘மத்ரஸா முகாமைத்துவம் மற்றும் நிர்வாக கட்டமைப்பு’ எனும் தலைப்பில் விளக்கங்களை வழங்கினார்கள்.

இதனையடுத்து  ‘அரபு மத்ரஸாக்களுக்கான பாடத்திட்டம்’ தொடர்பில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் உள்ளக விவகாரங்களின் நிறைவேற்று அதிகாரியுமான அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்கள் சில முக்கிய விடயங்களை பகிர்ந்து கொண்டதோடு ‘நிதி முகாமைத்துவம்’ எனும் தலைப்பில் அரபிக் கல்லூரிகளுக்கான குழுவின் உறுப்பினரான அஷ்-ஷைக் ஸஅத் அவர்களினாலும் சில முக்கிய குறிப்புக்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

மேற்படி தெளிவுரைகளையடுத்து வருகை தந்திருந்த அரபிக் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் நிர்வாகிகள் பிராந்திய ரீதியில் 08 குழுக்களாக பிரிக்கப்பட்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இக் கலந்துரையாடல்களையடுத்து ஜம்இய்யாவின் துணைத் தலைவர்களுள் ஒருவரான அஷ்-ஷைக் எச். உமர்தீன் அவர்களினால் ஜம்இய்யாவின் வெளியீடுகள் பற்றிய அறிமுக உரையொன்று நிகழ்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாணவர்களுடன் உஸ்தாத்மார் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் பற்றி பத்வா குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் அவர்களால் விஷேட உரையொன்றும் நிகழ்த்தப்பட்டது.

அடுத்து, ஜம்இய்யாவின் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டதோடு ஜம்இய்யாவின் உப பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு நிகழ்வானது இனிதே நிறைவுற்றது.

இந்த செயலமர்வில் அனைத்து அரபுக் கல்லூரிகளுக்கும் பொதுவான ஒரு பாடத்திட்டத்தினை உருவாக்கல், உஸ்தாத் மார்களுக்கான விஷேட பயிற்சித் திட்டங்களை ஆரம்பித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஏகமனதாக சபையில் தீர்மானிக்கப்பட்டது.

இதில் நாடளாவிய ரீதியிலுள்ள அரபிக் கல்லூரிகளிலிருந்து அதிபர்கள், நிர்வாகிகள் என சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

– ACJU Media –

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *