அறம் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்

ACJU/NGS/2023/206
2023-09-05 (1445-02-19)

 

அறம் என்பது நீதி, ஒழுக்கநெறி, தர்மம், கடமை ஆகியனவற்றை குறித்து நிற்கும் ஒரு பதமாகும். அதாவது எம்மால் யாருக்கும் எந்தத் தீங்குகளும் ஏற்படாமல் நடந்துகொள்வதை அறத்தின் வழியிலான வாழ்க்கைமுறை எனலாம்.

சாந்தியின் மார்க்கமாகிய இஸ்லாமும் இதனைத்தான் வலியுறுத்தி நிற்கிறது. பிறருக்கு நன்மை செய்யும் படியும், எளியவர்களுக்கு உதவும் படியும், அயலவர்களை நேசித்து நடந்து கொள்ளுமாறும், பெற்றோரை துளியளவு கூட நோவினை செய்யக்கூடாது என்றும் பொருள்படக்கூடிய வகையில் அல்லாஹுதஆலா அல்குர்ஆனிலே ஏராளமான இடங்களில் எமக்கு போதனை செய்கிறான்.

“..இன்னும் நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள்..” (ஸூறா அல்மாயிதா : 02)

இஸ்லாம் மனிதர்கள் செய்யவேண்டிய கடமைகளை இரண்டாக வகுத்திருக்கிறது. ஒன்று ஷஹுகூகுல்லாஹ். மற்றையது ஷஹுகூகுல் இபாத் ஆகும். அதாவது மனிதன் இறைவனுக்கு செய்யவேண்டிய கடமைகள், மனிதன் பிறமனிதர்களுக்கும் ஏனைய உயிர்களுக்கும் செய்யவேண்டிய கடமைகள் என இரண்டாக இஸ்லாம் வகுத்திருக்கிறது. ஆக பிறருக்கு நலவுகள் செய்வதை, உதவி ஒத்தாசைகளில் ஈடுபடுவதை இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாக ஆக்கியிருக்கிறது.

உண்மையில் அல்லாஹுதஆலா மனிதர்களை ஒருவர் மீது ஒருவர் தேவையுடையவர்களாகவே படைத்திருப்பதாக அல்குர்ஆனிலே குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றான். இவ்வாறான ஓர் ஏற்பாட்டை அவன் ஏற்படுத்தியிருப்பதற்குக் காரணம், வசதியுள்ளவர்கள் தமக்கு கீழிருப்போருக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளிலிருந்து கொடுத்துதவ வேண்டும் என்பதற்காகவாகும். (பார்க்க – ஸூறா அந்நஹ்ல் : 72)

நபித்தோழர்களில் ஒருகுழு அபீசீனியாவை நோக்கி இஸ்லாமிய வரலாற்றில் முதலாவது ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டார்கள். அந்நாட்டு மன்னரான நஜ்ஜாஷி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது போதனைகள் பற்றி வினவியதற்கு ஜஃபர் இப்னு அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அளித்த பதில் முழுக்க முழுக்க இஸ்லாத்தில் போதிக்கப்பட்ட அறத்தை விளக்குவதாகவே இருந்தது.

“நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உண்மையை மட்டும் பேச வேண்டும் என்று ஏவினார்கள். அமானிதத்தைக் காப்பாற்றச் சொன்னார்கள். சொந்தபந்தங்களைச் சேர்த்து வாழவேண்டும், அண்டை வீட்டாருடன் நெருக்கத்தை பேணவேண்டும், இறைவனால் தடை செய்யப்பட்டதைத் தவிர்க்க வேண்டும், உயிரைக் கொலை செய்யக் கூடாது, அசிங்கமான காரியத்தைத் செய்யக்கூடாது, பொய் சொல்லக் கூடாது என்று எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் அனாதைகளின் சொத்துக்களைச் சாப்பிடக் கூடாது, பெண்கள் மீது அவதூறு சொல்லக் கூடாது என்றும் தொழுகையை கடைப்பிடிக்குமாறும் ஸகாத்தும் கொடுத்து நோன்பு நோற்குமாறும் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள்” என்ற ஜஃபர் ரழியல்லாஹு அவர்களின் விளக்கத்தை கேட்டு அன்றைய அபிசீனிய அரச சபையே மெய்சிலிர்த்தது. அதுவே நஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்கவும் காரணமாக அமைந்தது. (பார்க்க – நூல் அஹ்மத் : 1649)

உண்மையில் நாம் வாழும் சூழலில் அதிகமான மனிதர்கள் அடிப்படை வாழ்வாதார வசதிகள் கூட இல்லாதவர்களாகவே காணப்படுகின்றனர். அண்மைக்காலமாக நிலவும் பொருளாதார நெருக்கடிகளினால் அன்றாடம் மூன்று வேளை உணவு உட்கொள்வதற்குக்கூட பலர் சிரமப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையில் உள்ளவர்களுக்கு இன, மத வேறுபாடுகள் பாராது எம்மிடம் இருப்பவற்றைக் கொடுத்து உதவுவதுதான் இஸ்லாம் போதிக்கும் அறமாகும்.

இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் இரண்டாவது ஆட்சியாளரான கலீபா உமர் இப்னு கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது ஆட்சிக்கு கட்டுப்பட்ட இடங்களின் நிலைமைகளை இரகசியமாக ஆராய்ந்து, அங்கு சிரமப்படுவோரின் துயர்துடைக்க தானே பொருட்களை சுமந்து சென்று கொடுத்துதவியிருக்கிறார்கள்.

இவ்வாறு இஸ்லாம் அனைத்திலும் அறத்தையே வலியுறுத்தி நிற்கிறது. சர்வதேச ரீதியிலும், தேசிய ரீதியிலும் பல தொண்டு நிறுவனங்கள் தேவையுள்ள மக்களுக்கான அறப்பணிகளை மேற்கொண்டுவருகின்றன. நாமும் குழுவாகவும், தனியாகவும் இவ்வாறான நற்பணிகளில் எம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். இளைஞர்கள் இந்த விடயங்களில் ஈடுபாடு காட்டுவது காலத்தின் கட்டாயமாகும்.

தேவையுடையவர்களுக்கு உதவுவதற்காக, அவர்களது வறுமையை போக்குவதற்காக தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், சமூகப்பணியாளர்களுக்கு சர்வதேச ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஐ.நா சபை செப்டம்பர் 05 ஆம் திகதியினை சர்வதேச தொண்டு தினமாக அறிவித்திருக்கிறது.

நாம் எமக்கு எதுவெல்லாம் கிடைக்கவேண்டும் என்று ஆசை கொள்கிறோமோ அவ்வாறே பிறருக்கும் கிடைக்க வேண்டும் என எண்ணாதவரை எமது இறைநம்பிக்கை பூரணமடையமாட்டாது என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் போதனை செய்திருக்கிறார்கள். (நூல்: ஸஹீஹுல் புஹாரி – 13)

ஆக பல்லின சமூகங்கள் வாழும் இலங்கைத் திருநாட்டில் வாழக்கூடிய நாம் பிறசமுதாய மக்களோடு இஸ்லாம் கூறும் அறநெறிகளை பேணி நடக்கவேண்டும். அவர்களது உரிமைகள், சுதந்திரம், கலாச்சாரம் ஆகியவற்றை நாம் மதித்து, உதவி ஒத்தாசைகளை மேற்கொண்டு வாழ இத்தினத்தில் நாம் திடவுறுதி பூணவேண்டும்.

அல்லாஹுதஆலா இந்த உலகத்தில் தேவையுள்ள மக்களுக்காக தொண்டாற்றும் அனைத்து தரப்பினருக்கும் இம்மையிலும் மறுமையிலும் நற்பேறு வழங்குவதோடு எம்மையும் இவ்வறப்பணியில் ஈடுபடுத்தி பிறரது துயர்துடைக்கும் மக்களாக ஆக்கி அருள்புரிவானாக!

 

 

அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *