அல்இஸ்ரா வல்மிஃராஜ்

ACJU/NGS/2022/048

2022.02.28 (1443.07.26)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வாழ்வில் சந்தித்த மிகக் கவலையான நிகழ்வுகளான அவர்களது அன்பு மனைவி கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் இழப்பு மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களை வளர்த்து பராமரித்து தஃவாப் பணியில் அவர்களுக்கு பக்க பலமாக இருந்த தனது தந்தையின் சகோதரரான அபூதாலிப் அவர்களின் இழப்பு ஆகியவைகளும் இடம்பெற்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அல்இஸ்ரா வல்மிஃராஜ் நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

இந்த அற்புத நிகழ்வு நடந்த காலம் குறித்து மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இருந்த போதிலும், சில மார்க்க அறிஞர்கள் இந்நிகழ்வு ரஜப் மாதத்தின் இருபத்தேழாம் இரவு நிகழ்ந்ததாகக் கூறுகின்றனர். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டே உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் இந்நிகழ்வு நினைவுபடுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

அல்இஸ்ரா வல்மிஃராஜ் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதங்களில் ஒன்றாகும்.

அல்இஸ்ரா: ‘அஸ்ரா’ என்றால் இரவுப் பயணம் செய்தல் என்பது அர்த்தமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஒரு நாள் இரவு மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து ஜெரூஸலத்திலுள்ள ‘மஸ்ஜிதுல் அக்ஸா’ விற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதுவே ‘அல்இஸ்ரா’ என்று கூறப்படுகின்றது.

‘(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறச் சூழலைப் பாக்கியம் பொருந்தியதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் அழைத்துச் சென்றவன் தூய்மையானவன். நமது அத்தாட்சிகளிலிருந்து அவருக்கு நாம் காண்பிக்கவே (இவ்வாறு செய்தோம்) நிச்சயமாக அவன் செவியுறுபவன், பார்ப்பவன்.’ (17:1)

அல்மிஃராஜ்: ‘மிஃராஜ்’ என்றால் உயர ஏறிச் செல்வதைக் குறிக்கும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து ஏழு வானங்களையும் தாண்டி ‘ஸித்ரதுல் முன்தஹா’ வரை விண்வெளிப் பயணம் செய்தார்கள். இதுவே மிஃராஜ் என்று கூறப்படுகின்றது. இவ்விரண்டும் அல்குர்ஆனின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

‘ஸித்ரத்துல் முன்தஹா’ எனும் இடத்தில் இவர் மீண்டும் ஒரு தடவை (ஜிப்ரீல் ஆகிய) அவரைக் கண்டார். அங்குதான் ‘ஜன்னத்துல் மஃவா’ (எனும் சுவர்க்கம்) இருக்கின்றது. (53: 13-15)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸித்;ரதுல் முன்தஹா என்ற இடத்தில் வைத்து ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்தது தொடர்பாக மேற்குறித்த வசனம் பேசுகின்றது. எனவே, இந்த வசனம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் சென்றதை உறுதிப்படுத்துகின்றது.

மேலும் அல்இஸ்ரா வல்மிஃராஜுடைய நிகழ்;;வைப் பற்றி பல ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவஞ்சி சில ஹதீஸ்கள் இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

‘நான் மக்காவில் இருந்த போது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அதன் வழியாக) ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) இறங்கினார்கள். அவர்கள் என்னுடைய நெஞ்சைப் பிளந்து ‘ஸம்ஸம்’ தண்ணீரால் கழுவினார்கள். பின்னர், ஈமான் மற்றும் ஞானத்தால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டி விட்டு அதை மூடி விட்டார்கள்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி: 349)

எனவே, அல்இஸ்ரா வல்மிஃராஜ் ஆகிய இரண்டுமே அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.

அல்இஸ்ரா வல்மிஃராஜ் மூலம் பெறப்படும் படிப்பினைகளை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்.

• அல்லாஹுதஆலா மிக வல்லமையுள்ளவன்: படைப்பினங்களுக்குள்ள எந்த விதிகளும் படைப்பாளனுக்கு இல்லை. அவன் தான் விரும்பியதை செய்யும் ஆற்றல் மிக்கவனாவான்.

• நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்தஸ்தையும், அல்லாஹ்வின் நெருக்கத்தையும் உறுதிபடுத்தல்: அல்இஸ்ரா வல்மிஃராஜ் நிகழ்வாகிறது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்துவதற்காகவும், அவர்களின் உள்ளத்திற்கு உறுதியையும் ஆறுதலையும் அளிப்பதற்காகவும் ஏற்படுத்திய ஒன்றாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலக்குகள், முன்னைய நபிமார்கள், சுவனம், நரகம் என பல விடயங்கள் பற்றி போதிக்கின்றார்கள். அவர்கள் போதிக்கும் விடயங்களை அவர்களுக்குக் காட்ட வேண்டுமென அல்லாஹு தஆலா விரும்பினான். இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஈடு இணையற்ற உறுதியையும், தஃவாக் களத்தில் உற்சாகத்தையும் அளிக்க வல்லதாகும். மேற்குறிப்பிட்ட 17 ஆம் அத்தியாயத்தின் முதலாம் வசனத்தில் எங்கள் அத்தாட்சிகளை அவருக்குக் காட்டுவதற்காக இந்நிகழ்வு நடந்ததாகக் அல்லாஹு தஆலா குறிப்பிடுகின்றான்.

• ஈமானைப் பரிசீலித்தல்: அல்லாஹ்வையும் அவனது தூதரையும் உண்மையாகவும் உறுதியாகவும் நம்புபவர்கள் யார் என இந்நிகழ்வு மூலம் பரீட்சிக்கப்பட்டது. ஏனேனில், அல்லாஹ்வின் ஆற்றலை முழுமையாக நம்பியவர்களால் மாத்திரமே இந்த அற்புதமான செய்திகளை நம்பமுடியும். ‘நாம் உமக்குக் காட்டிய காட்சியை மக்களுக்கு ஒரு சோதனைக்காகவேயன்றி காட்டவில்லை’ (17:60) என அல்லாஹு தஆலா கூறுகின்றான்.

• அல்இஸ்ரா மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா: அல்இஸ்ரா வல்மிஃராஜ் பற்றி நினைவு கூறப்படும் போதெல்லாம் பலஸ்தீன் பற்றியும் மஸ்ஜிதுல் அக்ஸா பற்றியும் நினைவு கூறப்படுகின்றது. ஏனேனில், அல்இஸ்ரா என்று கூறப்படும் இராப் பயணம் என்பது, மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து முஸ்லிம்களின் முதல் கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டு செல்லப்பட்டதாகும். பின்னர், அங்கிருந்து அல்லாஹ்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விண்ணுலகப் பயணத்தை மேற்கொள்ள வைத்தான். எனவே, ஜெரூஸலத்திலுள்ள முஸ்லிம்களின் முதல் கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸாவின் முக்கியத்துவத்தை இதனூடாக அல்லாஹு தஆலா வலியுறுத்துகின்றான்.

• அல்மிஃராஜும் தொழுகையும்: மிஃராஜ் நிகழ்வின் போதுதான் தொழுகை கடமையாக்கப்பட்டது. இதன் மூலம் தொழுகையின் முக்கியத்துவம் எமக்கு உணர்த்தப்படுகின்றது. மேலும், ‘தொழுகை என்பது முஃமினீன் (இறைவிசுவாசியின்) மிஃராஜாகும்’ என்ற ஹதீஸ் இதற்கு ஆதாரமாக இருக்கின்றது.

அல்இஸ்ரா வல்மிஃராஜ் நிகழ்வை இவ்வருடம் நினைவு கூறும் இச்சந்தர்ப்பத்தில், உலகில் நீதியும் சமாதானமும் நிகழ வேண்டுமென்றும், அல்லாஹ்வின் கட்டளையையும் நபியவர்களின் சுன்னாக்களையும் நமது வாழ்வில் பின்பற்ற வேண்டமென்றும், அதனூடாக மனித சமூகத்திற்கு நலவுகளை ஏற்படுத்தி அல்லாஹ்வின் பொருத்தத்தை நாம் அனைவரும் பெற வேண்டுமென்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *