அல்ஹாஜ் அல்ஹாபிழ் அஸ்மி சாலிஹ் (الله يرحمه) அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

ACJU/NGS/2023/146

2023.05.25 (1444.11.04)

 

கொழும்பு மாவட்டத்தின் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட அறிவிப்பாளரும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி தொகுப்பாளருமான அல்ஹாஜ் அல்ஹாபிழ் அஸ்மி சாலிஹ் (الله يرحمه) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அன்னார், 2023.05.24 ஆம் திகதி தனது 51 ஆவது வயதில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அறிவிப்பாளர், ஒலி வழங்குனர், நாடறிந்த பேச்சாளர், உளவள ஆலோசகர், எழுத்தாளர் என்று பன்முக ஆளுமையுள்ள அன்னார் நல்லுள்ளம் கொண்ட சமூக சேவையாளரும் ஆவார். மேலும் கடந்த சில மாதங்களாக அமல் சர்வதேச பாடசாலையில் பகுதிநேர மனிதவள முகாமைத்துவ ஆலோசகராகவும் கடமை புரிந்துள்ளார்.

அத்துடன் அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் காணொளிகளுக்கு குரல் பதிவுகளை வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்லாஹு தஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களை பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله

(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே. அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும் அவரையும் மன்னித்தருள்வாயாக.)

 

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *