ACJU/NGS/2022/038
2022.02.21 (1443.07.19)
கம்பஹா மாவட்டம், உடுகொட ருக்கஹாவில பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 12 புதுக்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட நம் நாட்டின் மூத்த ஆலிம்களில் ஒருவரான அஷ்ஷைக் எம்.இஸட்.எம். ஹுஸைன் (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. கொழும்பு 12 யில் அமைந்துள்ள அல் இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது முதல் அதன் அதிபராக பணிபுரிந்து வந்த அன்னார், இன்று (2022.02.21) தனது 77 ஆவது வயதில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
பாணந்துறை தீனிய்யா அரபுக் கல்லூரியில் மார்க்கக் கல்வியைக் கற்று வெளியேறிய அவர்கள், அதே கல்லூரியில் சுமார் 05 வருடங்கள் உஸ்தாதாக சேவையாற்றினார்கள். பின்னர், 1975 ஆம் ஆண்டு காலி கிந்தோட்டை பகுதியில் அல்குல்லிய்யத்துல் அரூஸிய்யா என்ற பெயரில் மத்ரஸா ஒன்றை ஆரம்பித்து சுமார் 08 வருடங்கள் அதனை நிர்வகித்து வந்துள்ளார்கள். 1988 ஆம் ஆண்டு மௌலவி எஸ். நியாஸ் முஹம்மத் (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களுடன் இணைந்து இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரியை ஸ்தாபித்து ஆலிம்களையும், ஹாபிள்களையும் உருவாக்குவதில் பாரிய பங்களிப்பை இந்நாட்டுக்குச் செய்துள்ளார்கள். இவர்களிடம் மார்க்கக் கல்வியை கற்றவர்கள் நாடளாவிய ரீதியில் பல்வேறு அரபுக் கல்லூரிகளை நிறுவி அவற்றின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களை பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.
أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله
(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே. அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக.)
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா