ஆசிரியர்கள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்

ACJU/NGS/2023/243

2023.10.05 (1445.03.19)

ஆசிரியப்பணி என்பது மனித சமூகத்தை மேன்மையடையச் செய்யும் ஓர் உன்னத பணி. ஒரு சமூகம் கல்வியின் மூலம் தான் சிறப்படைகிறது. அந்தக் கல்விக்கு வித்திடுபவர்கள் ஆசிரியர்கள். ஆக ஆசிரியப்பணி என்பது வெறுமனே ஒரு தொழில் மாத்திரம் அல்ல. மாறாக அது ஓர் அறப்பணி. ஒரு சமூகத்தை மேம்படுத்துகின்ற, வளப்படுத்துகின்ற மகத்துவம் நிறைந்த பணி.

சிறந்த ஆசிரியர் கல்வியை ஊட்டுபவராக மட்டுமன்றி ஒரு நல்ல ஆலோசகராக, முன்மாதிரிமிக்கவராக, ஊக்குவிப்பவராக, உதவுபவராக திகழவேண்டும். ஆசிரியர்கள் பொறுப்புடன் செயலாற்றும் போதுதான் சிறந்த மாணவர்களை உருவாக்கமுடியும். அதுவே ஒழுக்கமுள்ள ஒரு சிறந்த சமூகத்தை தோற்றுவிக்கும்.

அல்லாஹு தஆலா இந்த உலகிற்கு நபிமார்களை அனுப்பியது மனித சமூகத்திற்கு நல்லவற்றை போதித்து அவர்களை நெறிப்படுத்தி, சீரான வழியில் செலுத்துவதற்காகவே என்று அல்-குர்ஆனிலே பல இடங்களில் குறிப்பிடுகின்றான்.

“(நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை…” (ஸூறா அல்-அன்ஆம் : 48)

அல்லாஹு தஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் மக்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் ஓர் ஆசிரியராகவே அல்-குர்ஆனில் சிலாகித்துப் பேசியிருக்கிறான். (பார்க்க – ஸூறா அல்-ஜுமுஆ : 02)

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட எல்லா நிலைகளிலும் ஓர் சிறந்த ஆசிரியராகவே வாழ்ந்திருக்கிறார்கள். மாத்திரமன்றி அல்லாஹஹு தஆலா தன்னை ஓர் ஆசிரியராகவே அனுப்பியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

“அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ, எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்.” (நூல் – ஸஹீஹ் முஸ்லிம் : 2946)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “இது பற்றி அறிவிக்கட்டுமா?”, “தெரிந்து கொள்கிறீர்களா?” போன்ற கேள்விகளைத் தொடுத்து சபையில் இருப்போரை உற்சாகப்படுத்தியும், சுவாரஷ்யமாகவும் கற்பிக்கக் கூடிய திறன் கொண்டவர்களாக திகழ்ந்திருக்கிறார்கள். நபியவர்களின் கற்பித்தல் ஒரு சிறுவரை எந்தளவு ஆர்வப்படுத்தி, சிந்திக்கவைத்திருக்கிறது என்பதனை அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த சம்பவத்தின் மூலமாக புரிந்து கொள்ளலாம்.

“இறைநம்பிக்கையாளரின் நிலை பசுமையான ஒரு மரத்தைப் போன்றதாகும். அதன் இலை உதிர்வதில்லை; (அதன் இலைகள் ஒன்றோடொன்று) உராய்வதில்லை” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். அப்போது மக்கள், “அது இன்ன மரம்; அது இன்ன மரம்” என்று கூறினர். அது பேரீச்ச மரம்தான் என்று நான் கூற நினைத்தேன். நான் இளவயதுக்காரனாக இருந்ததால் வெட்கப்பட்(டுக் கொண்டு சொல்லாமல் இருந்து விட்)டேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அது பேரீச்ச மரம்” என்று சொன்னார்கள். (நூல் – புஹாரி : 6122)

கற்பித்தலுக்கு காலம், இடம், சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்பன மிக அவசியமானதாகும். மாணவர்களின் மனநிலைகளை, உணர்வுகளை புரிந்து அதற்கேற்ற வகையில் கற்பிப்போரே சிறந்த ஆசிரியர்கள் என கருதப்படுகின்றனர். அதாவது ஒரு விடயத்தை புரிந்து கொள்ளத்தக்க சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி கற்பிக்கின்றபோது இலகுவாக அது பதியவைக்கப்படுகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அப்படியான ஓர் ஆசானாகவே விளங்கியிருக்கிறார்கள்.

பொதுவாக சிறுவர்களுக்கு பயணம் செய்வது மிகப் பிடித்தமான ஒன்று. அப்படி சாதகமான ஒரு சந்தர்ப்பத்தில் சிறுவனாக இருந்தபொழுது தனக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்பித்த விடயம் பற்றி அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

‘ஒரு நாள் நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் என்னிடம் “சிறுவனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன்” என்று சொன்னார்கள்: “நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள்! அவன் உன்னைப் பாதுகாப்பான். நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள்! அவனை உனக்கு முன் கண்டுகொள்வாய். நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! உதவி தேடினால் அல்லாஹ்விடமே தேடு! அறிந்து கொள்! ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் உனக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் அவர்களால் செய்திட முடியாது. இன்னும் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது தீங்கிழைக்க முயன்றாலும் அல்லாஹ் உனக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தத் தீங்கையும் அவர்களால் செய்திட முடியாது. பேனாக்கள் உயர்த்தப்பட்டுவிட்டன. ஏடுகள் காய்ந்துவிட்டன.’ (நூல் – திர்மிதி : 2516)

கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேடல் உள்ளவர்களாக, புதிதாக ஒவ்வொரு விடயத்தையும் கற்றுக்கொள்ளக் கூடியவர்களாக திகழ்வதோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த அழகிய முன்மாதிரிகளை கடைப்பிடித்து ஒழுகவேண்டும். தேடல் உள்ள ஆசிரியர்களினாலேயே திறமையும், விவேகமுமுள்ள மாணவர் சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

“அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக!” என்று அல்லாஹு தஆலா அல்-குர்ஆனிலே கேட்கின்றான். (பார்க்க – ஸூறா அஸ்-ஸுமர் : 09) ஆக இஸ்லாம் அறிவுள்ளோரை, அறிவை போதிப்பவர்களை சிறப்பித்திருக்கிறது.

ஓர் ஆசிரியராக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறுவர்கள், இளைஞர்கள், வயோதிகர்கள், ஆண்கள், பெண்கள் என சமூகத்தை ஒன்றுபடுத்தி அனைவருக்கும் ஏற்றவகையில் அறிவினைப் போதிக்கக்கூடியவர்களாக திகழ்ந்திருக்கிறார்கள்.

தனது முறையான கற்பித்தலின் விளைவாக அறியாமைக்காலத்திலே குலம், கோத்திரங்களாக பிரிந்து சண்டைகளில் ஈடுபட்டு, மூடப் பழக்கவழக்கங்களில் மூழ்கி, ஒழுக்க சீர்கேடுகளோடு வாழ்ந்துகொண்டிருந்த ஒரு சமூகத்தை மனித புனிதர்களாக்கி, அவர்களை ஒழுக்க சீலர்களாக, உலகமே கண்டு வியந்த உத்தமர்களாக பெரும் பெரும் சாம்ராஜ்யங்களை ஆளும் திறன்கொண்டவர்களாக மாற்றிக்காட்டினார்கள்.

‘தானும் கற்று அந்த கல்வியினை பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவர்’ என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்பிப்பவர்களுடைய சிறப்பை குறிப்பிட்டிருக்கிறார்கள். (பார்க்க – நூல் புஹாரி : 5027)

ஆசிரியர்களை கௌரவப்படுத்தியும், அவர்களது பணியை ஊக்குவிக்கவும் ஐ.நா சபையானது அக்டோபர் 05 ஆம் திகதியை சர்வதேச ஆசிரியர் தினமாக பிரகடனப்படுத்தியிருக்கிறது.

உலகில் கல்வியை நிலைநாட்ட கற்பித்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அல்லாஹு தஆலா அவர்களுடைய அறிவினை மென்மேலும் விருத்தி செய்வதோடு அவர்களது அறப்பணிக்கான சிறந்த கூலிகளை இம்மையிலும் மறுமையிலும் வழங்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிராத்திக்கிறது.

 

அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாழில் ஹுமைதி
பதில் பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *