இளைஞர்கள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்.

ACJU/NGS/2023/195
2023.08.12 (1445.01.24)

இளமைப்பருவம் என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் இன்றியமையாத ஒரு காலகட்டமாக திகழ்கிறது. இளமைப் பருவம்தான் மனிதனுடைய வாழ்வை திசைமாற்றக்கூடிய மையப்புள்ளி. துடிப்புள்ள, எதையும் சாதிக்கும் ஆற்றல் கொண்ட இப்பருவத்தை ஒரு இளைஞன் நல்வழியில் செலவிட்டால் அவனுடைய மீதமுள்ள வாழ்வும் அர்த்தமுள்ளதாக மாறும். மாற்றமாக தீய வழிகளில் தன் இளமையை செலவிட்டால் மீதமுள்ள முழுவாழ்வும் சீர்கெட்டு அர்த்தமற்றதாகிவிடுகிறது.

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்லாத்தினை துணிந்து பிரச்சாரம் செய்தபோது ஓர் இளைஞராகவே திகழ்ந்திருக்கிறார்கள். அப்பருவத்தில் ஒரு தனிமனிதனாக இருந்து இஸ்லாத்திற்காக அவர்கள் செய்த அர்ப்பணிப்புக்களை அல்லாஹு தஆலா ஒரு சமுதாயத்தினது அர்ப்பணிப்பிற்கு ஒப்பானதாக அல்குர்ஆனிலே குறிப்பிடுகின்றான்.

“இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார்.” (சூரா அந்நஹ்ல் : 120)

நிழலே இல்லாத மறுமை நாளில் அல்லாஹு தஆலா 07 சாராருக்கு தனது அர்ஷுடைய நிழலை வழங்குவான். அந்த ஏழு சாராரில் இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட, இறைவணக்கத்தில் தன் இளமையை கழித்த இளைஞர்களும் அடங்குவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இளமைப்பருவத்தின் சிறப்பினை பற்றி எமக்கு குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். (நூல் : ஸஹீஹ் முஸ்லிம் – 1869)

மார்க்கம், சமூகம், உலகம் ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் அர்ப்பணிப்பு மிக முக்கியமானதாகும். இளைஞர்களை இனங்கண்டு அவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்கின்றபொழுது அவர்களது எதிர்காலம் மிகவும் பிரயோசனமுள்ளதாக மாற்றம் பெறுகிறது. இஸ்லாத்தை கட்டிக்காக்க பாடுபட்ட நபிமார்கள், நபியவர்களுடன் தோள்நின்ற ஸஹாபாக்கள், இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் என வரலாற்றை புரட்டிப்பார்க்கின்ற பொழுது அநேகமானவர்கள் இளம் வயதினையுடையவர்களாகவே திகழ்ந்திருக்கிறார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இளைஞர்களோடு மிக அந்நியோன்னியமாக பழகக்கூடியவர்களாக திகழ்ந்திருக்கிறார்கள். அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, ஸைத் இப்னு ஹாரிஸா ரழியல்லாஹுஅன்ஹு, முஆஸ் இப்னு ஜபல் ரழியல்லாஹுஅன்ஹு, அபூ ஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹுஅன்ஹு போன்ற இன்னும் ஏராளமான ஸஹாபாக்களை அதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

எவ்வாறு உண்ண வேண்டும், பருகவேண்டும் என்பதிலிருந்து தொடங்கி பிறருடன் நடந்துகொள்ளும் விதம், சமூக உணர்வு, தேசப்பற்று, புரிந்துணர்வு போன்ற விடயங்களையும்தாண்டி எவ்வாறு ஆட்சி செய்வது என்பது வரையிலான அத்தனை விடயங்களையும் ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் அருகிலிருந்தே கற்றுக்கொண்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் அவ்வாறாகவே இளைஞர்களை நெறிப்படுத்தினார்கள்.

இளைஞர்கள் ஒழுக்கம் மிக்கவர்களாக மிளிரவேண்டும். திருமணம் முடிக்க சக்திபெற்ற இளைஞர்களை திருமணம் செய்து கொள்ளுமாறும், அது வரவேற்கத்தக்கது என்றும் இஸ்லாம் இளைஞர்களுக்கு ஆர்வமூட்டியிருக்கிறது. காரணம் திருமணம் அவர்களை பாவமான, வீணான விடயங்களைவிட்டும் காக்கும் கேடயமாக காணப்படுகிறது என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள்.

பொதுவாகவும், இஸ்லாம் இளைஞர்களுக்கு வழங்கியிருக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் இளைஞர்கள் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டியவர்களாவர். ஆகையால் அனைத்து சமூகக்கட்டமைப்புக்களிலும் உள்ள மூத்தவர்கள், புத்திஜீவிகள், துறைசார்ந்த அறிஞர்கள் இளைஞர்களை சமூகப்பணிகளில் ஈடுபடுத்த முன்வரவேண்டும்.

அதே அடிப்படையில் ஆகஸ்ட் 12 ஆம் திகதியை சர்வதேச இளைஞர்கள் தினமாக ஐ.நா சபை பிரகடனப்படுத்தியிருக்கிறது. சர்வதேச ரீதியில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களுக்கெதிரான அடக்குமுறைகள், துஷ்பிரயோகங்களுக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே ஐ.நா இந்த தினத்தை பிரகடனப்படுத்தியிருக்கிறது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இளைஞர் விவகாரப்பிரிவு என்ற ஒரு தனிப்பிரிவை அமைத்து இளைஞர்களுக்கான மார்க்க மற்றும் கல்வி வழிகாட்டல் நிகழ்வுகளை அடிக்கடி நடாத்திவருகிறது. அதுமாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் ‘ஆரோக்கிய நல்வாழ்வு’, ‘நற்பிரஜை உருவாக்கல்’, ‘போதையொழிப்பு’, ‘தொழில் வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவ பயிற்சி’ ஆகிய தொணிப்பொருள்களின் கீழ் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்துவருகின்றமையும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகும். இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைப்புக்களை நல்குமாறு ஜம்இய்யா அனைவரையும் அன்போடு அழைக்கிறது.

எனவே எதிர்கால உலகை, சந்ததியினரை நிர்வகிக்கக்கூடிய எமது இளைஞர்கள் மார்க்கத்தில் உறுதியுள்ளவர்களாகவும், அதேசமயம் கல்வியிலும் சிறந்து விளங்கி அனைத்துத்துறைகளிலும் சாதிக்கக்கூடியவர்களாகவும் திகழ அல்லாஹு தஆலா அருள் புரிவதோடு அதற்கான தேகாரோக்கியத்தையும், நல்ல சிந்தனையையும் வழங்குவானாக என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கிறது.

 

அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *