ACJU/NGS/2023/123
2023.04.12
தமது தாய் நாட்டில் நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் பயங்கரவாத மற்றும் தீவிரவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணை நின்றதில்லை. மாறாக நாட்டின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் அபிவிருத்திக்கும் அவர்கள் பெரிதும் பங்காற்றி வந்திருக்கின்றார்கள் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது.
‘ஓர் உயிரை பாதுகாப்பது முழு மனித சமுதாயத்தையும் பாதுகாப்பதாகும்’ என்ற அல்குர்ஆனின் போதனை இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும். சமீபத்திய ஆண்டுகளில், பல மத, சமூக அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தீவிரமயமாக்கல், தீவிரவாதம் மற்றும் பல்வேறு வகையான வன்முறைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையை நியாயப்படுத்த தனிநபர்கள் மதம், சமூக அநீதி, நிதி நெருக்கடிகள், இனம் போன்றவற்றைப் பயன்படுத்தினர்.
நமது நாட்டில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலர் சிக்கிக் கொண்டது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதே உண்மையாகும். எனவேதான் குறித்த தாக்குதலில் ஈடுபட்டவர்களின் உடல்கள் முஸ்லிம்களின் அடக்கஸ்தலங்களில் கூட அடக்கம் செய்யப்படவில்லை.
இந்த மனோரீதியான உளவியல் ரீதியான மற்றும் ஆன்மீக ரீதியான கோளாறுகளை சீராக்கும் பணியில் ஜம்இய்யா தன்னை ஈடுபடுத்தியதுடன் இப்பணியில் தன்னார்வலர்கள் மற்றும் மனநல நிபுணர்களின் ஆதரவு விலைமதிப்பற்றது என்பதையும் கூறிக்கொள்ள வேண்டும்.
தீவிரவாத மற்றும் பயங்கரவாத நடிவடிக்கைகளை எதிர்ப்பதிலும் நிராகரிப்பதிலும் ஜம்இய்யா மிகவும் கரிசணையோடு செயற்பட்டு வருகின்றது. 2015 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஐ.எஸ். தீவிரவாத சிந்தனை சூடு பிடித்த போது இஸ்லாத்துக்கும் ஐ.எஸ். தீவிரவாதத்துக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்ற இஸ்லாத்தின் நிலைப்பாட்டை ஜம்இய்யா தெளிவுபடுத்தி ஒரு பிரகடனத்தையும் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து மஸ்ஜித்களில் ஜுமுஆ பேருரைகள், வழிகாட்டல் நிகழ்ச்சிகள் மூலமாக இலங்கை வாழ் முஸ்லிம்களை தெளிவூட்டி இச்சிந்தனையிலிருந்து பாதுகாக்க தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டது. அத்துடன் ‘தீவிரவாதம் வேண்டாம்’ என்ற சிறுநூலையும் வெளியிட்டது. நாடளாவிய ரீதியில் ஆங்காங்கே நல்லிணக்க மையங்களை உருவாக்கி சகவாழ்வை கட்டியெழுப்ப முயற்சிகளையும் முடுக்கிவிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மிகக் கொடூரமானது. இது தொடர்பில் துரிதமான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டுமென உரிய அதிகாரிகளை ஜம்இய்யா வேண்டிக்கொள்வதுடன் தாக்குதலுக்குட்பட்ட குடும்பத்தினரின் மன ஆறுதலுக்காக பிரார்த்திக்கின்றது.
எமது நாட்டை சுபீட்சமும் அபிவிருத்தியும் மிக்க தேசமாக கட்டியெழுப்ப பாடுபடுவது ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும். இதற்காக பல்லின சமூகமாக வாழும் நாம் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டியது அடிப்படையாகும். எனவே எமக்கு மத்தியில் ஒற்றுமையையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதுடன் அதில் களங்கத்தையேற்படுத்தும் சதிகளில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென ஜம்இய்யா அனைவரையும் வினயமாக கேட்டுக் கொள்கின்றது.
‘தீவிரவாதம் வேண்டாம்’ என்ற ஜம்இய்யாவின் நூலை அனைவரும் வாசிப்பதுடன் தீவிர சிந்தனைகளிலிருந்தும் மதவாத, இனவாத போக்குகளிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட ஒரு நாட்டை கட்டியெழுப்பும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டுமெனவும் ஜம்இய்யா மக்களை வேண்டிக் கொள்கின்றது.
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா