உளநலம் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்

ACJU/NGS/2022/347

2022.10.10 (1444.03.13)

உளஆரோக்கியம் என்பது உளவியல் ரீதியான நல்வாழ்வாகும். ‘நலம்’ அல்லது ‘சுகம்’ என்ற சொல், மனிதன் தன் உடல் சார்ந்த நோய் நிலைமைகளிலிருந்து விடுபடுவதை மாத்திரம் குறிப்பதில்லை. மாறாக ஒருவர் தனது உடல், உள, சமூக, ஆன்மிக நன்நிலைகளில் அடையக்கூடிய அதி உயர்ந்த நிலையாகும்.

எனவே உடல் ஆரோக்கியத்தைப் போலவே எமது உள ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். ஏனெனில் உளரீதியான பாதிப்புகளும் நெருக்கீடுகளும் வாழ்க்கையின் சீரான ஓட்டத்தையும் இயங்கியலையும் வெகுவாகப் பாதித்துவிடும். உளரீதியான நோய் நிலைமைகள் நாளடைவில் அசாதாரண நடத்தைகளை தோற்றுவிக்கும்; என்பது உளவியல் உண்மையாகும்.

எனவேதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்றாடம் காலையிலும் மாலையிலும் கவலை மற்றும் சஞ்சலங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்கள்.

இஸ்லாம், மனிதனின் ஆன்மிக ஈடுபாட்டையே உள அமைதியின் அடிப்படையாகக் கருதுகிறது.

‘அறிந்து கொள்ளுங்கள்! இறைநினைவால்தான் உள்ளங்கள் அமைதியடைகின்றன’ என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. (ஸுறா அர்ரஃத்: 28)

மேலும் ‘மனித உள்ளத்தின் மீதும் அதனை வடிவமைத்தவன் மீதும் சத்தியமாக. அதற்கு அவன் பாவங்களையும் நன்மைகளையும் அறிந்துகொள்ளும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறான். எவன் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டானோ அவன், நிச்சயமாக வெற்றியடைந்து விட்டான். இன்னும், எவன் அதனை (பாவத்தைக்கொண்டு) களங்கப்படுத்திவிட்டானோ, அவன் திட்டமாக நஷ்டமடைந்து விட்டான்.’ என அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் குறிப்பிடுகிறான். (ஸுறா அஷ்ஷம்ஸ்: 7-10)

எனவே எமது உள்ளத்தை எப்போதும் இறைநினைவுகளாலும் நேர்மறையான, அழகிய எண்ணங்களாலும் நிரப்புவது அவசியமாகும். மனித மனம் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால்தான் குடும்பம், தொழில், மற்றும் சமூகம் சார்ந்த அன்றாடக் கடமைகளையும் பொறுப்புகளையும் கச்சிதமாக நிறைவேற்ற முடியும். மாறாக உள்ளம் பாதிப்படைந்தால் எமது அன்றாட நடவடிக்கைகளும் பாதிப்படைந்து இயல்பு வாழ்க்கையும் செயலிழந்துவிடும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘அறிந்துகொள்ளுங்கள்! உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது சீரடைந்தால் முழு உடலும் சீரடைந்து விடும். அது சீர்கெட்டு விட்டால் முழு உடலும் சீர்கெட்டு விடும். அதுதான் உள்ளமாகும்.’ (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹுல் முஸ்லிம்)

எனவே செயல்கள் சீரமைக்கப்படுவதன் முதற்படி, உள்ளம் உயிர்ப்பிக்கப்படுவதாகும். உள்ளம் சீராகவும் உயிரோட்டமாகவும் இருக்கும்போதுதான் எதனையும் அது இலகுவாக உள்வாங்கிக் கொள்ளும். இதனால்தான் இஸ்லாத்தின் பார்வையில் உறுப்புகளின் நற்செயல்களை விடவும் உள்ளத்தின் நற்செயல்களுக்கு நன்மைகள் அதிகமாகக் கிடைக்கின்றன. எனவேதான் ஈமானும் இக்லாஸும் தக்வாவும் மிக உயர்ந்த அமல்களாகக் கருதப்படுகின்றன.

உளநலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் ஐ.நா சபை ஒக்டோபர் 10ஆம் திகதியை ‘சர்வதேச மனநல தினமாக’ பிரகடனப்படுத்தியிருக்கிறது.

குடும்பம், நண்பர்கள், வேலைத்தளப் பணியாளர்கள் என அன்றாடம் நாம் சந்திக்கும் உறவுகளின் மனநல ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமாகும்.

அல்லாஹு தஆலா எம்மனைவரையும் உளநெருக்கீடுகளிலிருந்து பாதுகாப்பதோடு நிம்மதியும் மனமகிழ்ச்சிகரமான வாழ்வை அருளவேண்டும் என்றும் ஏதோவொரு வகையில் மனநலம் பாதிக்கப்பட்டு, உளப்பிரச்சினைகளால் போராடிக்கொண்டிருப்பவர்கள் விரைவில் சுகம் பெறவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறோம்.

 

அஷ்-ஷைக் எச். உமர்தீன்
பதில் தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *