ACJU/NGS/2023/279
2023.12.09 (1445.05.24)
இஸ்லாம் மனிதனின் ஈருலக வாழ்வையும் மேம்படுத்த அருளப்பட்ட புனிதமான மார்க்கமாகும். இஸ்லாத்தின் அடிப்படை நோக்கங்களாக மார்க்கத்தை பாதுகாத்தல், மனித உயிரைப் பாதுகாத்தல், அறிவு மற்றும் சிந்தனையை பாதுகாத்தல், பரம்பரையை பாதுகாத்தல், பொருளாதாரத்தை பாதுகாத்தல் போன்றன காணப்படுகின்றன.
ஒரு தேசத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும் சட்ட ஒழுங்குகளைப் பின்பற்றி தங்களது அதிகாரங்களை, கடமைகளை நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும், நிறைவேற்றுவது அத்தேசத்தின் பலத்தையும் வலிமையையும் கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றுவதுடன் பொருளாதாரத்தையும் பாதுகாப்பதற்கு காரணமாக அமைகின்றது.
ஊழல் பற்றிய அறிமுகம்
இஸ்லாம் தடுத்து, எச்சரித்துள்ள குற்றங்களில் மிகப் பிரதானமான ஒன்றுதான் ஊழல் மோசடியாகும். ஊழல் என்பது குறிப்பிட்ட ஒருவர் பதவி வழியில் அல்லது பொது அங்கீகாரத்தின் பேரில் தனக்குக் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட இலாபம் அல்லது நன்மை கருதி சட்டத்துக்கும் சம்பிரதாயத்துக்கும் எதிராகச் செயற்படுதல் என வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது.
அதாவது இலஞ்சம், மோசடி, பலாத்காரம், தீர்மானம் எடுக்கும் உரிமையை தவறாகப் பிரயோகித்தல், அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் அல்லது அரசியல் நியமனங்களின்போது நண்பர்கள், உறவினர்கள் என்ற அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகள், அநீதியான அறவீடுகள், பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தல், சட்டவிரோதமான கொடைகள் ஆகிய அனைத்தும் ஊழல் என்ற பதத்துக்குள் அடங்குகின்றன.
ஊழல் தொடர்பாக எச்சரிக்கும் அல்-குர்ஆன் வசனம்
ஊழல் தொடர்பாக அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில், “நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருளை தவறான முறையில் உண்ணாதீர்கள்! மேலும் பிற மனிதர்களுடைய பொருட்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதமான முறையில் உண்பதற்காக (இலஞ்சம் கொடுக்க) அது தவறு என நீங்கள் அறிந்து கொண்டே அதிகாரிகளை அணுகாதீர்கள்!” எனக் எச்சரித்து கூறுகின்றான். (ஸூறா அல்-பகரா : 188)
ஊழல் தொடர்பாக எச்சரிக்கும் ஹதீஸ்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், “ஒரு விடயத்தில் தீர்ப்புப் பெறுவதற்காக இலஞ்சம் கொடுப்பவனையும் இலஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக!” எனக்கூறினார்கள். (அஹ்மத் : 9023)
மற்றுமோர் சந்தர்ப்பத்தில் அதிகாரத்தில் உள்ளவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அன்பளிப்பு பெறுவதையும் எச்சரித்துக் கூறினார்கள். இப்னுல் உத்தபிய்யா (அல்லது இப்னுல் லுத்தபிய்யா) என்பவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்துக்கொண்டு) வந்தபோது, “இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று சொன்னார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்துத் திரும்பி) வந்து, “இது உமக்குரியது இது எனக்குரியது” என்று கூறுகிறாரே! அவர் (மட்டும்) தம் தந்தை அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து பார்க்கட்டுமே! அவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று தெரியும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அவர் கொண்டு வரும் (அன்பளிப்பு) எதுவாயினும் அதைத் தமது கழுத்தில் சுமந்தபடிதான் மறுமை நாளில் வருவார். அந்த அன்பளிப்பு ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக்கொண்டிருக்கும்; அது மாடாயிருந்தால் அல்லது ஆடாயிருந்தால் கத்திக்கொண்டிருக்கும்.” என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரி : 7174)
ஊழல் மோசடியினால் ஏற்படும் சீர்கேடுகள்
ஊழல் என்பது சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்ற புற்றுநோயாகும். தனிநபர்கள், சமூகம் எனப் பரவி இறுதியில் நாட்டின் அபிவிருத்தியையும் தேசிய வளத்தையும் அது செல்லரித்துவிடும். சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் ஏற்படுதல், குற்றச் செயல்கள் அதிகரித்தல், அரச சேவை வழங்கல்கள் சீர்குலைதல், நாடு பொருளாதார ரீதியாக நலிவடைந்து வறுமை நிலைக்கு உள்ளாதல், பொருட்களின் விலை அதிகரித்தல், மனித உரிமைகள் மீறப்படுதல், சமூக அநீதி தோன்றுதல், மக்களின் அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்குக் கூட அரசுக்கு முடியாது போதல், வெளிநாட்டு முதலீடுகளின் வருகை நிறுத்தப்படல் போன்ற எண்ணற்ற, அபாயகரமான எதிர்விளைவுகளை ஒரு நாடு சந்திப்பதற்கு ஊழலே பிரதான காரணியாகும்.
இலஞ்ச, ஊழல் மோசடிகளின் இவ்வனைத்து விளைவுகளையும் அண்மைக்காலமாக எமது நாடு அனுபவித்து வருவதை எவரும் மறுப்பதற்கில்லை. எனவே இனியும் இலஞ்சம், ஊழல், மோசடிக்கு இடமளிக்காதிருப்போம். அவற்றை நியாயப்படுத்துவோர் மற்றும் தனிப்பட்ட, சுய இலாபங்களுக்காக இக்குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுடன் துணை நிற்காதிருப்போம்.
ஐ.நா சபை ஊழல் எதிர்ப்பு தினத்தை பிரகடனப்படுத்தியதன் நோக்கம்
ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கிலும் ஊழல் எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
எனவே ஊழலற்ற நீதி, நேர்மை, சமத்துவம், பொதுநலம் ஆகிய அடித்தளங்களின் மீது அமையும் ஒரு ஜனநாயக அரசியலுக்கு ஆதரவளிப்போம். ஊழலற்ற நீதியும், நேர்மையும் நிலை நாட்டப்படுகின்ற தேசமாக எமது நாட்டை மாற்றியமைக்க எல்லோருமாக கைகோர்த்து செயற்படுவோம். அத்துடன் ஊழல் செயற்பாடுகள், ஊழல் மோசடிகள், இலஞ்சம், ஆகியவைகளை பூண்டோடு இல்லாதொழிக்க எமது சமூகத்திற்கு அது தொடர்பான அறிவூட்டல்களை, விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்துவது உலமாக்கள், மஸ்ஜித் நிர்வாகிகள் பொறுப்பு வாய்ந்தவர்கள் அனைவர்களினதும் தலையாய கடமையாகும்.
நிம்மதியும் நீதியும் கோலோச்சுகின்ற வளம் பொருந்திய நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அல்லாஹு தஆலா எம்மனைவருக்கும் நல்லருள் பாலிப்பானாக!
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா