எழுத்தறிவு ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

ACJU/NGS/2023/208
2023.09.08 (1445.02.22)

 

எழுத்தறிவு என்பது ஒரு மனிதன் பெற்றிருக்கவேண்டிய அறிவுகளில் முதன்மையானது எனலாம். வாசிப்புள்ள மனிதனே பூரணமடைகிறான் என்பது உலகில் அனைவரும் ஏற்றுக்கொண்ட பொதுமொழி. அந்த வாசிப்பிற்கு நூறு சதவீதம் தேவையானது எழுத்தறிவுதான். அதன் காரணமாக இஸ்லாம் கல்வியினை தேடிக் கற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியிருக்கிறது.

எழுத்தறிவின் வளர்ச்சியினை உறுதிசெய்யக் கூடிய முக்கிய காரணிகளில் ஒன்றாக வாசிப்பு நோக்கப்படுகிறது. அல்குர்ஆனில் முதன் முதலாக அருளப்பெற்ற இறை வசனங்கள் கூட வாசிப்பீராக, படிப்பீராக என்ற வார்த்தைகளைக் கொண்டுதான் ஆரம்பமாகின்றன.

“(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக! (அட்டைப்பூச்சி போன்று ஒட்டிக்கொண்டிருக்கும் கரு) ‘அலக்’ என்ற நிலையிலிருந்து மனிதனை அவன் படைத்தான். ஓதுவீராக! உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான்.’ (ஸூறா அல்-அலக் : 1 – 4)

அல்லாஹுதஆலா மனிதனை தனித்துவமிக்க சிறந்த படைப்பாகவும், அழகிய அமைப்பிலும் படைத்திருப்பதாக அல்குர்ஆனில் சிலாகித்துப் பேசியிருக்கிறான். உண்மையில் மனிதன் எழுத்தறிவின் மூலம் தான் தனது அறிவை பெருக்கவும், கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் செய்கிறான்.

அல்லாஹு தஆலாவிடமிருந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவ்வப்போது வஹீ எனும் இறை செய்திகள் அறிவிக்கப்பட்டன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவற்றை எழுதிப் பாதுகாக்க ஒரு பிரத்தியேக எழுத்தாளர்கள் குழு நியமிக்கப்பட்டிருந்தார்கள். அலி இப்னு அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹு, முஆவியா ரழியல்லாஹு அன்ஹு, உபை இப்னு கஃப் ரழியல்லாஹு அன்ஹு, ஸைத் இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு போன்ற ஸஹாபாக்கள் அக்குழுவினரில் இடம்பெற்றவர்களாவர். இப்பணியில் ஈடுபட்ட நபித்தோழர்கள் ‘குத்தாபுல் வஹீ’ (இறை செய்திகளை எழுதுபவர்கள்) என சிறப்பித்து அழைக்கப்பட்டனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது காலத்தில் எவ்வாறு வஹீயை எழுதுபவர்கள் இருந்தார்களோ அதேபோன்று நபிமொழிகளை எழுதக்கூடியவர்களும் இருந்தார்கள். எழுத்து மூலம் ஹதீஸ்களை ஆவணப்படுத்தி, அவற்றை மனனமிட்டு, அவற்றைக்கொண்டு அமல்களும் செய்தார்கள். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது மரணத்தின் பின்னரும் அதே நடைமுறைகளை கையாண்டு நபிமொழிகளை பேணிப் பாதுகாத்தார்கள். இவ்வாறாக இஸ்லாத்தின் மூலாதாரங்களை எழுதி நூலுருப்படுத்தி பாதுகாக்க நபித்தோழர்கள் அயராது உழைத்திருக்கிறார்கள். அவர்களது அர்ப்பணிப்பின் மூலமாகத்தான் இன்று அல்குர்ஆனும், ஹதீஸ்களும் எமக்கு இலகுவாக கிடைத்திருக்கின்றன. அந்தவகையில் எழுத்தறிவு இஸ்லாத்தின் வளர்ச்சியில் எந்தளவு தாக்கம் செலுத்தியிருக்கிறது என்பதை எம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது.

ஆகையால் ஒவ்வொரு மனிதனும் எழுதவும் வாசிக்கவும் தெரிந்தவனாக திகழவேண்டும். தாம் பெற்ற எழுத்தறிவை பிறருக்கும் போதிக்கவேண்டும். காரணம் எழுத்தறிவே அனைத்தையும் கற்பதற்கான அடிப்படை. அதனால் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கல்வியினை தேடிக் கற்றுக்கொள்வது சுவனத்திற்கான வழி என்பதாக எமக்கு ஆர்வமூட்டியிருக்கிறார்கள்.

‘யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான்.’ (நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 5231)

அன்றைய ஜாஹிலிய்ய சமூகத்தில் எழுத்தாளர்களும் கவிஞர்களும் நிறைந்திருந்தார்கள். இம்ரஉல் கைஸ், லபீத் இப்னு ரபீஆ, சுஹைர் இப்னு அபீ ஸலமா போன்ற புகழ்பெற்ற கவிஞர்களின் ‘ஸப்உல் முஅல்லகாத்’ எனப்படும் கவிதைகளும் செய்யுள்களும் கஃபாவின் சுவர்களில் தொங்கவிடப்பட்டிருந்தன என்று வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. கவிதைகளில், இலக்கியங்களில் பேர்பெற்றிருந்த அந்த சமூகத்தில்தான் அவற்றையெல்லாம் மிகைத்து நிற்கும் படியாக மிக உயர்ந்த மொழிநடையுடனும் சிறந்த இலக்கணத்தோடும் கருத்தாழமிக்க சொற்களையும் கொண்டமைந்ததாக அல்குர்ஆன் அருளப்பெற்றது.

மேலும் ‘எழுதுகோலின் மீதும் அதனைக்கொண்டு எழுதுபவை மீதும் சத்தியமாக!’ (ஸுறா அல்கலம் : 1) என அல்லாஹ் அல்குர்ஆனில் சத்தியம் செய்கிறான். அதேபோன்று ஆராயுமாறும் சிந்திக்குமாறும் மனிதனைத் தூண்டுகின்ற வசனங்கள் அல்குர்ஆனில் ஏராளமான இடங்களில் இடம்பெற்றுள்ளன. இப்போதனைகளை உள்வாங்கி எழுத்தறிவின் முக்கியத்துவத்தினை நாம் உணர்ந்து செயற்படவேண்டும்.

உலகிலுள்ள இளம் தலைமுறையினரில் 86.3 சதவீதத்தினர் எழுத்தறிவுள்ளவர்களாக காணப்படுகின்றனர். இலங்கைக் குடிமக்களில் 92 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு எழுத்தறிவு இருப்பதாக புள்ளிவிபரத்தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் வறுமையினால் கல்வியினை தொடர முடியாமல் படிப்பை கைவிடுகின்ற நிலைமைகளும் ஆங்காங்கே நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலைமைகள் நீங்கி, உலகில் அனைவரும் எழுத்தறிவு பெறவேண்டும் என்பதை விழிப்புணர்வூட்டியும் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் எழுத்தறிவின்மையை ஒழிக்கும் நோக்கிலும் ஐ.நா சபை செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதியை சர்வதேச எழுத்தறிவு தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

எனவே அடிப்படைக் கல்வியினைக் கூட பெற முடியாமல் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு நாம் எம்மாலான உதவிகளை மேற்கொள்ளவேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இயலாதநிலையில் உள்ளவர்களுக்கு கல்வி வழங்கி அவர்களது வாழ்வை முன்னேற்றி வைப்பவருக்கு இருவிதக் கூலிகள் கிடைப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். (பார்க்க – ஸஹீஹுல் புஹாரி : 2544) அந்தவகையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் கல்விக்கென ஒரு தனிக்குழுவை அமைத்து கல்வியினை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

எழுத்துப்பணியில் ஈடுபடக்கூடிய அனைத்து எழுத்தாளர்களும் பொறுப்புணர்வுடன் அமானிதங்களை பேணி, சமுதாயத்தினதும் நாட்டினதும் நலன்கருதி தமது பணியினை மேற்கொள்ள அல்லாஹுதஆலா அருள்பாலிப்பதோடு சமூகத்தினது கல்வி முன்னேற்றத்திற்காக பங்களிப்பு செய்யக்கூடிய மக்களாக நம் அனைவரையும் ஆக்கியருளவேண்டுமெனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கிறது.

 

 

அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *