அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடந்த ஒன்பது தசாப்தங்களுக்கும் மேலாக சமய, சமூக விவகாரங்களில் காத்திரமான பங்களிப்பினைச் செய்து வருவதுடன், பொதுவான சமூகப் பிரச்சினைகளின் போது, ஏனைய முஸ்லிம் சிவில் அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றமை யாவரும் அறிந்ததே.
முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சமகால பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவதற்காக இரு மாதத்திற்கொருமுறை முஸ்லிம் அமைப்புக்களுடன் கூட்டங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பல வருடங்களாக நடாத்தி வருகின்றது.
அவ்வடிப்படையில் தற்போதைய சூழலில் முஸ்லிம் சமூகம் முகங்கொடுக்கும் பல சவால்களை கலந்துரையாடுவதற்காக கடந்த 2021.07.07 ஆம் திகதி ஏனைய முஸ்லிம் சிவில் அமைப்புக்களுடன் ஒரு விஷேட கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தது.
அதன் அறிமுக உரையினை ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களும் தலைமை உரையினை ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி முஃப்தி அவர்களும் நிகழ்த்தினார்கள்.
இலங்கை பிரஜைகள் என்ற அடிப்படையில் ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயக விழுமியங்களைப் பேணி, முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்களை கலந்துரையாடி, அவற்றை சரியாக முகங்கொடுத்து, முறையான தீர்வுகளைப் பெறுதல் என்பதுவே இக்கலந்துரையாடலின் மூல இலக்காக இருந்தது.
அதில் குறிப்பாக பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
1. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வெளியிடப்பட்ட தீவிரமயமாக்கலைத் தடுத்தல் சம்பந்தமான வர்த்தமானி சம்பந்தமாக.
2. இலங்கையில் காணப்படும் அல்குர்ஆன் மொழிபெய்ர்ப்புக்கள் சம்பந்தமான விடயங்களுக்கு தீர்வு காணல்.
3. அரபு மத்ரஸாக்கள் தொடர்பான சவால்களுக்கு தீர்வு காணல்.
4. சிறார்களின் அல்குர்ஆன் பள்ளிக்கூடங்கள் தொடர்பான விடயங்களுக்கு தீர்வு காணல்.
5. முஸ்லிம் தனியார் சட்டம் சம்பந்தமான விடயங்கள் போன்றன அதில் கலந்துரையாடலுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த ஐந்து தலைப்புகள் சம்பந்தமாக பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு, பல்வேறுபட்ட கருத்துக்களும் அபிப்பிராயங்களும் முன்வைக்கப்பட்டு, சில தீர்மானங்கள் எட்டப்பட்டன.
சுமார் 24 முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் சார்பாக 50க்கும் அதிகமான சமூக ஆர்வாளர்கள் அதில் கலந்து கொண்டனர். தேசத்தின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பவையாகவும் அதற்கு பங்களிப்புச் செய்யக்கூடியவையாகவுமே அக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட அனைத்து விடயங்களும் அமைந்திருந்தன.
சில அமைப்புக்கள் மீது சிலர் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதனால் மிகவும் நிதானமாகவும் தூரநோக்குடனும் எமது கருத்துக்களும் அபிப்பிராயங்களும் அமைதல் வேண்டும் என்பதில் அதிகூடிய கவனம் செலுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஓர் அம்சமாகும்.
அத்துடன் ஞானசார தேரர் அவர்கள் முஸ்லிம்களையும் முஸ்லிம் அமைப்புகளையும் தொடர்ந்தும் சாடி வருவதும், முஸ்லிம்கள் மீது 2013 ஆம் ஆண்டிலிருந்து பல அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து பௌத்த சகோதரர்களின் உள்ளத்தில் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்பை தொடர்ந்து பல வருடங்களாக ஏற்படுத்தி வருவது பற்றியும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை இத்தேரர் தொடர்ந்தும் விமர்சித்து வருவதால், சமூகத்திற்கு ஆன்மீக மற்றும் சமூக ரீதியான வழிகாட்டல்களை வழங்கும் முக்கிய அமைப்பான ஜம்இய்யா இவ்விடயத்தில் முன்னணியில் ஈடுபடாது, ஏனையோருக்கு இவ்விடயத்தில் வழிகாட்ட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
இறுதியாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி முஃப்தி அவர்கள்:
நாம் இங்கு முக்கியத்துவம் வாய்ந்த சில விடயங்களை இனங்கண்டு அவற்றின் அடிப்படையில் ஒன்றுபட்டு உழைத்தல் பெரிதும் பயனளிக்கும் என்று நம்புகின்றேன். அவையாவன:
- இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாமல் இலங்கை முஸ்லிம்கள் அதற்கு எவ்வாறு பங்காற்றுவது என்பது தொடர்பாக கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
- மாற்றுமத சகோதரர்களுக்கு மத்தியில் காணப்படும் இஸ்லாம் பற்றிய அச்சத்தையும் சந்தேகங்களையும் அகற்ற முயற்சி செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்.
- சகோதரத்துவ சமூகங்களுடன் நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் பேணி, சகவாழ்வினைக் கட்டியெழுப்புதல் சம்பந்தமாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
- அத்துடன், எமது சமூகத்துக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள், சவால்களை அரசாங்கத்துடன் முறையாக கலந்துரையாடி தீர்வுகளைக காண்பதற்காக முயலுதல் வேண்டும் என்பனவாகும்.
அத்துடன், இங்கு சமுகமளித்திருக்கும் அமைப்புகள் முன்னைய காலங்களில் செயலாற்றியதனைப் போன்று தொடர்ந்து செயலாற்ற வேண்டும்.
குறிப்பாக, ஒவ்வொரு அமைப்பும் தமது வகிபாகத்தின் அடிப்படையில் முஸ்லிம் தனியார் சட்டம், தீவிரமயமாக்கலைத் தடுத்தல், அல்குர்ஆன் பள்ளிகூடங்கள் மற்றும் அறபு மத்ரஸாக்கள் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு விவகாரம் போன்றவற்றை முன்னெடுத்துச் செல்ல கைகோர்த்துப் பணியாற்ற வேண்டும் என்ற கருத்தினையும் முன்வைத்த போது, அக்கருத்து அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா