ACJU/NGS/2023/133
2023.05.15 (1444.10.24)
இரத்தபந்த உறவுகளையும் திருமண உறவின் வழியான சொந்தங்களையும் பால்குடி உறவுகளையும் உள்ளடக்கிய அழகியதொரு கட்டமைப்பை அல்லாஹு தஆலா எமக்கு அருளாக வழங்கியுள்ளான். தாய்-தந்தை, பிள்ளைகள், பேரன், பேர்த்திகள், சகோதர சகோதரிகள், கணவன்-மனைவி மற்றும் ஏனைய சொந்தங்களால் ஆன வலைபின்னலை குடும்பம் என்போம்.
சமூகக் கட்டுருவாக்கலின் ஆரம்ப அடிப்படை அலகு குடும்பமாகும். மேலும் திருமணமே ஒரு குடும்பத்தின் ஆரம்பமாகும். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் முடித்து ஹலாலாக இணைவதனூடாக அங்கே அழகியதொரு குடும்பம் மலர்கிறது. அந்தவகையில் மனித இனத்தின் நீட்சிக்கு அல்லாஹு தஆலா குடும்ப உறவை அடிப்படையாக ஆக்கியிருக்கின்றான்.
அல்லாஹு தஆலா ஆதம், ஹவ்வா (அலைஹிமஸ்ஸலாம்) என்ற சோடியைக் கொண்டு மனித இனத்தை இந்த உலகில் வியாபிக்கச் செய்தான். குடும்பத்தின் துவக்கத்தை அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு விளங்கப்படுத்துகிறான். ‘அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே உங்கள் மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான். உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும் பேரன் பேர்த்திகளையும் ஏற்படுத்தி, தூய்மையானவற்றிலிருந்து உங்களுக்கு ஆகாரமும் அளிக்கிறான்…’ (அந்நஹ்ல்: 72)
இவ்வாறு கணவன்-மனைவி உறவினூடாக தோற்றுவிக்கப்படுகின்ற குடும்ப வாழ்வில் அல்லாஹு தஆலா உயர்ந்த இலக்குகளையும் நோக்கங்களையும் வைத்திருக்கின்றான். தனிமனிதனுக்கு குடும்பம் எந்தளவு அவசியமானது என்பதையும் குடும்பக் கட்டமைப்பு எந்தளவு சீராகவும் பேணுதலாகவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் இஸ்லாம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.
குடும்ப வாழ்க்கையை இஸ்லாம் இறைவணக்கமாக (இபாதத்) அடையாளப்படுத்தியிருக்கிறது. தன்னுடைய கற்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒருவர் திருமணம் செய்து செய்து ஹலாலாக தனது வாழ்க்கைத் துணையுடன் இணைவது முதல் கணவன்-மனைவிக்குரிய பரஸ்பர கடமைகள், தாய்-தந்தைக்கு பணிவிடை செய்தல், குடும்ப உறவுகளை சேர்ந்து நடத்தல், ஒழுக்கமும் கல்வியும் இணைந்த ஸாலிஹான பிள்ளை வளர்ப்பு என்று குடும்ப வாழ்க்கையோடு தொடர்புபட்ட அத்தனை செயற்பாடுகளையும் இஸ்லாம் உயர்ந்த நற்கூலிகளை பெற்றுத்தரவல்ல மார்க்கக் கடமைகளாக ஆக்கியிருக்கிறது.
மேலும் அன்பு, பாசம், அரவணைப்பு, மனஆறுதல் போன்ற அடிப்படை உளரீதியான தேவைகளை அல்லாஹு தஆலா குடும்ப வாழ்க்கையிலேயே வைத்திருக்கின்றான். ‘நீங்கள் மனநிம்மதி பெறவேண்டும் என்பதற்காக உங்களிலிருந்தே உங்களுக்கான துணையை அவன் படைத்திருப்பதும் உங்களிடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளதாகும்…’ (அர்ரூம்: 21) என்று குடும்ப வாழ்க்கையின் தத்துவத்தை அல்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
குடும்பக் கட்டமைப்பின் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 15 ஆம் திகதி சர்வதேச குடும்ப தினம் ஐ.நா சபையினால் அனுஷ்டிக்கப்படுகிறது.
ஒரு சமூகத்தின் பண்பாடு சார்ந்த வெற்றியும் தோல்வியும் அதன் குடும்பங்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. எனவே எமது குடும்பங்கள் அல்குர்ஆன் ஸுன்னா மற்றும் எமது முன்னோர்களான நல்லடியார்களின் வழிகாட்டல்களை இறுகப்பற்றி ஈமானியப் பெறுமானங்களோடு கட்டமைக்கப்படும்போது முன்மாதிரிமிக்க, சிறந்ததொரு சமூக உருவாக்கத்தை நாம் சாத்தியப்படுத்தலாம்.
கணவன்-மனைவி உறவு மற்றும் ஏனைய குடும்ப உறவுகளுக்குள்ளால் மாற்றுக் கருத்துகளும் கசப்பான உணர்வுகளும் தோன்றுவது இயல்பானது. அவை தொடரும் போது குடும்பத்தின் சீர்மையை, அமைதியை அது பாதித்துவிடுகிறது. ஆகவே எமது குடும்ப உறவுகளுக்கு மத்தியில் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு, மன்னிப்பு ஆகிய பண்புகளை கடைபிடிப்பதனூடாக உறவுச்சிக்கல்களை வெற்றிகொள்வோம். ஒற்றுமையையும் குடும்ப உறவுகளிடையே பரஸ்பர புரிதலையும் ஏற்படுத்தி நிம்மதியான குடும்ப, வீட்டுச் சூழலை ஏற்படுத்துவோம். ஒவ்வொருவரும் தமது உரிமைகளில் கவனம் செலுத்துவதற்கு முன்னர் தத்தமது கடமைகளை சரிவர நிறைவேற்றுவோம்.
குடும்பக் கட்டமைப்பை சீர்குலைக்கின்ற சிந்தனா சக்திகளிலிருந்து அல்லாஹு தஆலா எமது குடும்பங்களை பாதுகாப்பதோடு,
وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا
‘எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்கு கண்குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக’ (புர்கான்: 74) என்றும்,
رَبِّ اجْعَلْنِىْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِىْ ۖ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ
‘(என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும் என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!’ (இப்றாஹீம்: 40) என்றும் பிரார்த்தனை செய்கிறோம்.
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா