ACJU/NGS/2023/142
2023.05.23 (1444.11.02)
இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை எழுதவிருக்கின்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்தனை செய்கிறது.
தமது கல்விப் பயணத்தில் முக்கியமானதொரு பரீட்சையை எதிர்கொள்கின்ற இம்மாணவச் செல்வங்களுக்கு அல்லாஹு தஆலா உடல், உள ரீதியான ஆரோக்கியத்தையும் பரீட்சையை திறம்பட எதிர்கொள்வதற்கான தைரியத்தையும் நம்பிக்கையையும் வழங்குவானாக!
மேலும் ஆன்மிக, ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய சூழலில் தம்மை எப்போதும் பிணைத்துக் கொள்வதற்கும் தமது குடும்பம், சமூகம், நாடு மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் பிரயோசனமான மற்றும் தமது இயல்புக்குத் தோதுவான, பயனுள்ள துறைகளை தெரிவு செய்து உயர்கல்வி மற்றும் தொழில் துறைகளில் கால்பதிப்பதற்கும் ஆரோக்கியமான எதிர்கால நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் அந்தந்த மாவட்ட, பிரதேசக் கிளைகள், பள்ளிவாயல்கள், ஊர்த்தலைவர்கள், நிறுவனங்கள் போதுமான வழிகாட்டல்களை தொடர்ச்சியாக வழங்குமாறு ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.
அத்துடன் பகல் 02:00 மணிக்கு பரீட்சை ஆரம்பிப்பதாலும் 30 நிமிடங்களுக்கு முன்னர் பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்துக்கு சமுகமளிக்க வேண்டியிருப்பதாலும் மேலும் பகலுணவு, ஏனைய தேவைகளுக்கான காலநேரத்தை கருத்தில் கொண்டும் பரீட்சைக் காலங்களில் ஜுமுஆ பிரசங்கங்களை சுருக்கமாக, நேரத்தை ஒழுங்குபடுத்தி அமைத்துக் கொள்ளுமாறு கதீப்மார்களை வேண்டிக் கொள்கிறது.
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா