ACJU/NGS/2022/400
2022.12.18 (1444.05.23)
அரபு மொழி என்பது செமித்திய மொழிக் குடும்பத்தின் பிரதானமான மொழிகளில் ஒன்றாகும். இது கி.பி. 6 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளில் அரேபிய தீபகற்பத்தில் வாழ்ந்த நாடோடி பழங்குடி மக்களால் பேசப்பட்ட ஒரு சிறுபான்மை மொழியாகும்.
இஸ்லாத்தின் வருகையுடன் மத்திய கிழக்கு மக்களின் பேச்சு மொழியாகக் காணப்பட்ட அரபு மொழியானது சர்வதேச மொழியாக செல்வாக்குப் பெற்றது. இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆனும் ஸுன்னாவும் அரபு மொழியில் இறக்கியருளப்பட்டமையானது அதன் அந்தஸ்தை உலக அளவில் பறைசாற்றியது. மேலும் அரபு மொழியானது சொற்செரிவும் பொருள் வளமும் கொண்ட செழுமை மிக்க மொழியாகும்.
அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். ‘நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதனை அரபு மொழியிலான குர்ஆனாக நாமே இறக்கி வைத்தோம்’ (ஸுறா யூஸுப் : 03)
அறிவுக் கலாசாரத்தை ஊக்குவிப்பதிலும் அறிவியலையும் தத்துவ சித்தாந்தங்களையும் முழு உலகிற்கும் பரவச்செய்வதிலும் அரபு மொழியின் பங்கு காத்திரமானது. அதேபோன்று உலகெங்கிலுமுள்ள சமூகப் பரம்பல்களுக்கு மத்தியில் ஒரு கலாசார இணைப்பொன்றையும் அது ஏற்படுத்தியது.
வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி, அரபு மொழிக்கும் இலங்கைத் திருநாட்டுக்குமிடையிலான தொடர்பு, கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களையும் கடந்த நிலையில் பண்டைய அரேபிய வர்த்தகர்கள் இலங்கையுடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்த நாளிலிருந்து இத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
பதினெட்டாம் நூற்றாண்டளவில் தென்னிலங்கையில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்களின் தலைமையில் அரபு மொழியிலான இஸ்லாமிய சமயக் கல்விப் போதனைகள் மத்ரஸா மட்டத்தில் துவக்கிவைக்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அரபு மொழிகள் தினம் ஐ.நா சபையினால் அனுஷ்டிக்கப்படுகிறது. அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ ஆறு மொழிகளில் அரபு மொழியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பாக முஸ்லிம்கள் அல்குர்ஆனையும் ஹதீஸையும் புரிந்து கொள்வதற்கும் தொழுகைகளை உயிரோட்டமாக அமைத்துக் கொள்வதற்கும் அன்றாட திக்ர், அவ்ராதுகள் மற்றும் சந்தர்ப்ப துஆக்களை பொருளுணர்ந்து ஓதுவதற்கும் அரபு மொழியைக் கற்றுக் கொள்வது அவசியமாகிறது.
இன்றைய அரபுலகம் பொருளாதாரம், கலாசாரம் மற்றும் பண்பாட்டு ரீதியாக முன்னேறுவதை உலகம் கண்கூடாகக் காண்கிறது. எமது நாட்டிலும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாத துறைசார்ந்தவர்கள் அரபு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு முனைவதனூடாக அரபுலகின் சிந்தனைக் கருவூலங்களைப் படித்து எமது நாட்டின் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்ய முடியும். மேலும் இஸ்லாத்தின் விழுமியங்கள் மற்றும் போதனைகளை அதன் மூலமொழியிலிருந்து நேரடியாக விளங்கிக் கொள்வதற்கு இது நல்லதொரு வாய்ப்பாக அமையும்.
எனவே அரபு மொழியைக் கற்பதனூடாக சர்வதேச சிந்தனைப் பாரம்பரியங்களை விளங்கி அவரவர் துறைசார்ந்து நாட்டுக்குப் பங்களிப்புச் செய்ய ஆதரவு வைப்போம். மேலும் சர்வதேச அரபு மொழிக்கான தினமான இந்நாளை நினைவுகூரும் அதேவேளை மொழி, மத, கலாச்சார பன்முகத்தன்மையை மதித்து செயல்படுவதனூடாக மானுடத்துக்குப் பங்காற்றுவோம்.
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா