‘சிறந்த பிரஜைகளை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் தல்கஸ்பிட்டிய பிரதேசத்தில் நடாத்தப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான செயலமர்வுகள்

2024.08.30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழுவின் வழிகாட்டலில், ஜம்இய்யாவின் தல்கஸ்பிட்டிய கிளையின் ஏற்பாட்டில் ‘சிறந்த பிரஜைகளை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளினான மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோருக்கான வழிகாட்டல் செயலமர்வுகள் தல்கஸ்பிட்டிய பிரதேசத்தை மையப்படுத்தி நடாத்தப்பட்டன.

அதனடிப்படையில், கே/ மாவ/ தல்கஸ்பிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆண் மாணவர்களுக்கான செயலமர்வு ஜம்இய்யாவின் கல்விக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். நாழிம் மற்றும் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் ஆகியோரினால் நடாத்தப்பட்டது. இதில் 45க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.

மேலும், அப்பாடசாலையின் மாணவிகளுக்கான செயலமர்வு ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் உறுப்பினர் அஷ்-ஷைக் ஸபருல்லாஹ் அவர்களினால் நடாத்தப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து பயன்பெற்றனர்.

பாடசாலைகளை மையப்படுத்திய செயலமர்வுகளை அடுத்து மாணவர்களின் பெற்றோர்கள், ஊரில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேசத்தின் வாலிபர்கள் ஆகியோருக்கான வழிகாட்டல் செயலமர்வுகள் அஷ்-ஷைக் நுஸ்ரத் அவர்களால் தனித் தனி அமர்வுகளாக நடாத்தப்பட்டன.

இவற்றில், பெற்றோர்களுக்கான நிகழ்வில் சுமார் 210க்கு மேற்பட்டவர்களும், பிரதேசத்தில் உள்ள அமைப்புக்களுக்கான நிகழ்வில் 30 பிரதிநிதிகளும், வாலிபர்களுக்கான நிகழ்வில் சுமார் 90 வாலிபர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

ஒட்டுமொத்தமாக தல்கஸ்பிட்டிய பிரதேசத்தினை மையப்படுத்தி நடாத்தப்பட்ட குறித்த செயலமர்வுகளில் மாணவர்கள், பெற்றோர்கள், வாலிபர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என சுமார் 415க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

அத்தோடு, அன்றைய வெள்ளிக்கிழமை ‘சிறந்த பிரஜைகளை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளில் தல்கஸ்பிட்டிய பகுதியிலுள்ள மஸ்ஜிதுகளில் ஜுமுஆ உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

அதனடிப்படையில், தல்கஸ்பிட்டிய அல்-முனீரா ஜுமுஆ மஸ்ஜிதில் ஜம்இய்யாவின் ஆலிம்கள் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர் அவர்களும், தல்கஸ்பிட்டிய ஜுமுஆ மஸ்ஜிதில் இளைஞர் விவகாரக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் அவர்களும், மாவத்தகொட ஜுமுஆ மஸ்ஜிதில் அஷ்-ஷைக் ஸபருல்லாஹ் அவர்களும் குத்பா உரைகளை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

 

 

– ACJU Media –

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *