சுகாதாரம் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்

2024.04.07 (1445.09.27)

சுகாதாரம் ஓர் அறிமுகம்

சுகாதாரம் அல்லது சுத்தம் என்பது ஆரோக்கிய நல்வாழ்வு கருதி எல்லோராலும் பேணப்படும் ஓர் அம்சமாகும். உடல், உள ரீதியில் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது ஒவ்வொருவரினதும் அடிப்படையானதோர் எதிர்பார்ப்பாகும். அவ்வாறான நோயற்ற, ஆரோக்கிய நல்வாழ்விற்கு வழியமைப்பதே சுகாதாரம் என அடையாளப்படுத்தப்படுகிறது.

 

சுகாதாரம் பற்றிய இஸ்லாமியப் பார்வை

வணக்க வழிபாடுகள் முதல் அனைத்து கட்டங்களிலும் சுகாதாரம் பேணி ஆரோக்கியமாக வாழ்வதனை இஸ்லாம் அதிகம் வலியுறுத்துகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரோக்கியத்தை விரும்பக்கூடியவர்களாகவும் அதிகமதிகம் அதனைக் கேட்டு துஆச் செய்பவர்களாகவும் திகழ்ந்தார்கள்.

 

சுகாதாரம் தொடர்பாக வலியுறுத்தும் அல்-குர்ஆன் வசனங்கள்

وَثِيَابَكَ فَطَهِّرْ (74:4)

“உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக!” (74:4)

அல்லாஹ் நபியவர்களுக்கு நபித்துவத்தை அருளிய ஆரம்ப வேளைகளில் கூறிய கட்டளைகளில் சுகாதரமும் மிக முக்கியமான ஒன்றாகும் என்பதை இத்திருவசனம் எடுத்துக்காட்டுகிறது.

 

அல்லாஹ் நேசிக்கும் சுகாதார மனிதர்கள்

اِنَّ اللّٰهَ يُحِبُّ التَّوَّابِيْنَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ‏ (2:222)

“பாவங்களை விட்டு மீள்பவர்களையும் இன்னும் தூய்மையாக இருப்போரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்.” (அல்-பகரா : 222)

 

ஆரோக்கியம் அல்லாஹ்வின் அருட்கொடையாகும்

மனிதனுக்கு அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட மிகப்பெரும் அருட்கொடைகளில் ஒன்றாக ஆரோக்கியத்தை இஸ்லாம் கருதுகிறது. இதனைப் பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது:

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالفَرَاغُ (صحيح البخاري: 6412)

‘இரண்டு அருட்கொடைகளின் விடயத்தில் மனிதர்களில் பலர் கவனயீனமாக இருக்கின்றனர். அவை ஆரோக்கியமும் ஓய்வும் ஆகும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி: : 6412)

 

ஆரோக்கியம் பேணும் இஸ்லாம்

இஸ்லாம் மனிதனின் அன்றாட வாழ்வில் அனைத்து நடவடிக்கைகளின் போதும் ஆரோக்கியத்தை வழிகாட்டியுள்ளது.

‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் ‘சுத்தம் ஈமானின் பாதியாகும்.’
(ஸஹீஹு முஸ்லிம்: 223)1

தொழுகையில் நுழைய முன்னர் உடை, உடல், இடம் ஆகியன சுத்தமாக இருத்தல் வேண்டும் என்பது அதன் நிபந்தனைகளில் ஒன்றாகும். அதனை அழகுபடுத்துவதற்காக மிஸ்வாக் – பற்சுகாதாரம் பேணுவது அதிமுக்கிய ஸுன்னத் ஆகும்.

அத்துடன், தலைமுடிகளைச் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்தல், வாயைக் கொப்பளித்தல், நகம் வெட்டுதல், அக்குள் முடியை எடுத்தல், மறைவான பகுதியில் உள்ள முடிகளை அகற்றல், தாடியை அழகுபடுத்தல், நறுமணங்களைப் பயன்படுத்தல் உள்ளிட்டவைகளையும் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பின்வரும் ஹதீஸ் விபரிக்கின்றது.

عن أبي هريرة رضي الله أن رسول الله صلى الله عليه وسلم قال : الفطرة خمس أو خمس من الفطرة : الختان، والاستحداد، ونتف الإبط، وتقليم الأظفار، وقص الشارب. (صحيح البخاري: 5889)

விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைவது, அக்குள் முடி களை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகியவை இயற்கை மரபுகளில் அடங்கும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி: 5889)

 

சுகாதாரத்தை வலியுறுத்தும் ஹதீஸ்கள்

عن عَبْدُ الله بْنُ عَمْرِو بْنِ العَاصِ – رضي الله عنهم – قَالَ لِي رَسُولُ الله – صلى الله عليه وسلم -: (يَا عَبْدَ الله أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ اللَّيْلَ؟) فَقُلْتُ: بَلَى يَا رَسُولَ الله قَالَ: (فَلاَ تَفْعَلْ صُمْ وَأَفْطِرْ وَقُمْ وَنَمْ فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًا (صحيح البخاري: 6139)

ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நபித்தோழரைப் பார்த்து, “உமது உடலுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி : 6139)

மேற்குறித்த ஹதீஸில் நபியவர்கள் ஒவ்வொருவரும் தமது உடம்புக்கு கொடுக்க வேண்டிய உரிமைகளைக் கொடுத்து உடல் உறுப்புக்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்கள்.
இது தவிர ஹலாலான (ஆகுமாக்கப்பட்ட) உணவு, பானங்களை மாத்திரம் உட்கொள்ளல், சிறந்த உடற்பயிற்சியைக் கடைபிடித்தல் தொடர்பான மார்க்கத்தின் வழிகாட்டல்கள் போன்றன இஸ்லாம் மனிதனின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தியிருப்பதற்கான தெளிவான சான்றுகள் ஆகும்.
மேலும் இஸ்லாம் அதன் அடிப்படை நோக்கமான ஒவ்வொருடைய மார்க்கம், உயிர், மானம், அறிவு, செல்வம், வம்சம், ஆகியவைகள் பாதுகாக்கப்படுவதுடன் அதற்கு முரணானவற்றை முற்றாகத் தடுத்துள்ளது.

 

உலக சுகாதார தினம் ஐ.நா சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நல்வாழ்வை கருப்பொருளாகக் கொண்டு ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி உலக சுகாதார தினம் ஐ.நா சபையினால் அனுஷ்டிக்கப்படுகிறது.

நாம் ஒவ்வொருவரும் எமது உடல், உள ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் பிறரது உடல், உள ஆரோக்கியத்துக்கு தீங்கு ஏற்படாத வகையிலும் எமது அன்றாட செயற்பாடுகளை ஒழுங்கமைத்துக் கொள்வோம். குறிப்பாக இப்தார் ஏற்பாடுகளை சுற்றுச் சூழல்கள் மாசுபாடத வகையிலும் பிறருக்கு இடையூறு ஏற்பாடத வன்னவும் செய்து கொள்வோம்.

அல்லாஹு தஆலா இந்த ரமழானில் எம்மனைவருக்கும் ஆரோக்கியமான சுகவாழ்வை தந்தருள்வானாக!

 

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

—————————————————————————–

[01] عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ، وَسُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَآَنِ – أَوْ تَمْلَأُ – مَا بَيْنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، وَالصَّلَاةُ نُورٌ، وَالصَّدَقَةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاءٌ، وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ، كُلُّ النَّاسِ يَغْدُو فَبَايِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا” (صحيح مسلم : 223)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *