ACJU/NGS/2023/120
2023.04.07 (1444.09.15)
சுகாதாரம் அல்லது சுத்தம் என்பது ஆரோக்கிய நல்வாழ்வு கருதி ஒரு சமூகத்தால் பேணப்படும் பழக்கவழக்கங்கள் ஆகும். உடல் மற்றும் உளரீதியாக ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது ஒவ்வொருவரினதும் அடிப்படையானதோர் எதிர்பார்ப்பாகும். அவ்வாறான நோயற்ற, ஆரோக்கிய நல்வாழ்விற்கு வழியமைப்பதே சுகாதாரம் என அடையாளப்படுத்தப்படுகிறது.
சுகாதாரத்தைப் பேணி ஆரோக்கியமாக வாழ்வதனை இஸ்லாம் அதிகம் வலியுறுத்தியிருக்கிறது. அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். ‘…பாவங்களை விட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான். இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கிறான்.’ (ஸுரா பகரா: 222)
ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நபித்தோழரைப் பார்த்து, ‘…உமது உடலுக்கு செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன. உமது கண்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன.’ (நூல்: புகாரி) என்று ஓய்வையும் ஆரோக்கியத்தையும் வலியுறுத்தினார்கள்.
மனிதனுக்கு அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட மிகப்பெரும் அருட்கொடைகளில் ஒன்றாக ஆரோக்கியத்தை இஸ்லாம் கருதுகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘இரண்டு அருட்கொடைகளின் விடயத்தில் மனிதர்களில் பலர் கவனயீனமாக இருக்கின்றனர். அவை ஆரோக்கியமும் ஓய்வும் ஆகும்.’ (நூல்: புகாரி)
மேலும் ஆரோக்கியம் என்பது மறுமையில் அல்லாஹு தஆலாவிடத்தில் வகைசொல்ல வேண்டிய அமானிதம் ஆகும். ‘ஒவ்வோர் அடியானும் நியாயத்தீர்ப்பு நாளில், …தனது ஆரோக்கியத்தை எவ்வாறு பயன்படுத்தினாய் என்று கேட்கப்பட்டு அதற்கு பதில் கூறும் வரை இறுதித் தீர்ப்பு நாளில் அவர்களது நிலையிலிருந்து எவரும் நகர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.’ (நூல்: திர்மிதி) என இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நோயற்ற வாழ்வு ஒரு மனிதனின் அனைத்து உடல், உள செயற்பாடுகளுக்குமான உந்துகோளாக அமைகின்றது. இதனாலேயே இஸ்லாம் மனிதனின் அன்றாட நடவடிக்கைகளில் தூய்மையை வலியுறுத்தி ஆரோக்கிய நல்வாழ்விற்கு வழிகாட்டியுள்ளது.
‘சுத்தம் ஈமானின் பாதியாகும்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: முஸ்லிம்) அந்தவகையில் தொழுகை மற்றும் வணக்க வழிபாடுகள் அல்லாஹு தஆலாவிடத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான அடிப்படை நிபந்தனைகளில் ஒன்றாக இஸ்லாம் சுத்தத்தை வலியுறுத்தியிருக்கிறது. தன்னுடைய உடல், உடை, இடம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய அனைத்தும் சுத்தமாக இருப்பதினூடாகவே ஒருவர் முழுமையான சுத்தத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று இஸ்லாம் தூய்மை குறித்து நுணுக்கமாகவும் விரிவாகவும் தெளிவுபடுத்தியிருக்கிறது.
அதேபோன்று ஹலாலான (ஆகுமாக்கப்பட்ட) உணவு மற்றும் பாணங்களை மாத்திரம் உட்கொள்ளல், விபச்சாரம், ஒருபாலுறவு, போதைபொருள் பாவனை குறித்த இஸ்லாத்தின் தடை உத்தரவுகள், அங்கத்தூய்மை (வுழூ), குளிப்பு, உடல் உறுப்புகளை சுத்தம் செய்தல், நகம் வெட்டல் தொடர்பான சட்டங்கள், வாய் மற்றும் பல் சுத்தத்தை பேணுதல், சிறந்த உடற்பயிற்சியை கடைபிடித்தல் குறித்த மார்க்கத்தின் வழிகாட்டல்கள் போன்றன இஸ்லாம் மனிதனின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தியிருப்பதற்கான தெளிவான சான்றுகள் ஆகும்.
ஒவ்வொரு வருடமும் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நல்வாழ்வை கருப்பொருளாகக் கொண்டு ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி உலக சுகாதார தினம் ஐ.நா சபையினால் அனுஷ்டிக்கப்படுகிறது.
நாம் ஒவ்வொருவரும் எமது உடல், உள ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் பிறரது உடல், உள ஆரோக்கியம் கெடாத வகையிலும் எமது அன்றாட செயற்பாடுகளை ஒழுங்கமைத்துக் கொள்வோம். அல்லாஹு தஆலா எம்மனைவருக்கும் நோய்நொடிகளற்ற, ஆரோக்கியமான சுகவாழ்வை அருள்வானாக என பிரார்த்தனை செய்கிறோம்.
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா