சுகாதார வாழ்க்கை – இஸ்லாமிய கண்ணோட்டம்

ACJU/NGS/2022/086

2022.04.07 (1443.09.05)

 

சுகாதாரத்தை பாதுகாப்பதன் தேவைப்பாட்டை அதிகம் வலியுறுத்தும் மார்க்கமாக இஸ்லாம் விளங்குகிறது. மனிதனுக்கு அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட மிகப் பெரிய அருட்கொடைகளில் ஒன்றாக ஆரோக்கியத்தை இஸ்லாம் கருதுகிறது. உண்மையில், இது ஈமானிற்கு பிறகு மிகப்பெரிய அருட்கொடையாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இரண்டு அருட்கொடைகளில் மனிதர்கள் பலர் கவனயீனமாக உள்ளனர்: ஆரோக்கியம் மற்றும் ஓய்வு’ (புகாரி). அல்லாஹ் சுகாதாரமான வாழ்வை நமக்களித்தமையிட்டு நாம் அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

 

நல்ல ஆரோக்கியத்தை கொண்டு நாம் எதை செய்தோம் என்பதை அல்லாஹ்வுக்கு மறுமை நாளில் பதில் கூற வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒவ்வொரு அடியாரும் நியாயத்தீர்ப்பு நாளில் ‘அவர் தனது வாழ்க்கையை எவ்வாறு கழித்தார், எவ்வாறு தனது அறிவைப் பயன்படுத்தினார், எவ்வாறு தனது பணத்தைச் சம்பாதித்துச் செலவிட்டார், தனது ஆரோக்கியத்தைப் பயன்படுத்தினார்’ என்று கேட்கப்பட்டு அதற்கு பதில் கூறும் வரை, இறுதித் தீர்ப்பு நாளில் அவர்களது நிலையிலிருந்து யாரும் நகர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.’ (திர்மிதி)

 

இந்த அருட்கொடையை பாதுகாப்பது மற்றும் தவறான பயன்பாட்டின் மூலம் எந்தவொரு பாதிப்பும் வரவிடாமல் காப்பாற்றுவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். அல்லாஹ் தஆலா இவ்வாறு கூறுகிறான்: ‘எந்த மக்களும் தங்கள் நிலைமையை மாற்றிக்கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றி விடுவதில்லை. நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும் மிக்க அறிந்தவனாகவும் இருக்கின்றான்.’ (8:53) பிழையான உணவு பழக்கங்கள், சீரற்ற நாளாந்த செயற்பாடுகள், குறைவான தூக்கம் மற்றும் இஸ்லாம் வன்மையாக தடுக்கும் போதை பொருள் பாவனை போன்றவை மனிதனின் உடலாரோக்கியத்தை அழித்துவிடும் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

 

அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவில் ஒவ்வொரு முஸ்லிமும் தனது ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் அவரது ஒவ்வொரு உறுப்புகளையும் எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதைக் கற்பிக்கும் போதனைகள் ஏராளமாக தரப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமானதாக ‘வுழு’ எனும் சுத்தம் செய்தலை மற்றும் ‘குஸ்ல்’எனும் குளிப்பை குறிப்பிட முடியும். தொழுகை மற்றும் இன்னோறன்ன இபாதத்களுக்கான முக்கிய நிபந்தனையாக இது காணப்படுகிறது. பல் துளக்குதல், கைகளை அடிக்கடி கழுவுதல், நகங்களை வெட்டிக்கொள்ளல், குறிப்பிட்ட முடிகளை அகற்றல் மற்றும் கத்னா செய்தல் போன்றவை நம் சுகாதாரத்தை மேம்படுத்தும் விடயங்களாக இஸ்லாம் நமக்கு ஏவுகிறது.

 

நம் சுகாதாரத்தை சரியான முறையில் பாதுகாப்பதும் திருமனத்தின் ஒரு முக்கிய நோக்கமாக காணப்படுகிறது. ஐவெளை தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்பது கூட நம் சுகாதாரத்தை மேம்படுத்துவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்பித்து தந்துள்ளார்கள். இஸ்லாம் சுகாதார வாழ்விற்கான எத்தனையோ வழிமுறைகளை முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி முழு மனித சமூகத்திற்கும் பிரயோசனம் அழிக்கும் வகையில் கற்றுத்தந்துள்ளது. நாம் அதை விட்டு பாராமுகமாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

 

1948 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு (றுர்ழு) நிறுவப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் திகதி உலக சுகாதார தினம் நினைவுகூறப்படுகிறது. இந்த திகதிற்காக ஒவ்வொரு ஆண்டும், உலக சுகாதார அமைப்பு சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு கருப்பொருளை தேர்ந்தெடுப்பதோடு, 2022 உலக சுகாதார தினத்தின் கருப்பொருளாக’நமது கிரகம், நமது ஆரோக்கியம்’எனும் தலைப்பை தெரிவுசெய்துள்ளது.

 

இஸ்லாம் கற்றுத்தந்துள்ள சுகாதார வாழ்விற்கான வழிமுறைகளை நாம் சரியான முறையில் பின்பற்றி, நம் தேசம் ஆரோக்கிய தேசமாக மலர எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலா அருள் புரிவானாக!

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *