ACJU/FRL/2022/37-384
ஹிஜ்ரி : 1444.03.27 (2022.10.24)
சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவற்றை மறையக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தருமம் செய்யுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி – 1044)
சூரியன் அல்லது சந்திரன் முழுமையாக அல்லது அவற்றில் ஒரு பகுதி மறைவதைக் காணும் போதுதான் கிரகணத் தொழுகை சுன்னத்தாகும். கிரகணம் ஏற்பட்டுள்ளது என உறுதியானதன் பின்னர் கிரகணத் தொழுகையை அதனது முறைப்பிரகாரம் தொழ ஆரம்பிக்கும் போது மீதமாக இருக்கும் நேரம் அதனைப் பூர்த்தி செய்யப் போதாதெனில் கிரகணத் தொழுகையை அதனது முறைப்பிரகாரம் தொழ ஆரம்பிக்காமல் ளுஹ்ருடைய ஸுன்னத்தான இரண்டு ரக்அத்களைப் போன்று இரண்டு ரக்அத்களைத் தொழுதுகொள்ளல் வேண்டும்.
எதிர்வரும் 25.10.2022 செவ்வாய்க் கிழமை இன்ஷா அல்லாஹ் பகுதி சூரிய கிரகணம் (Partial Solar Eclipse) ஏற்படவுள்ளதாக வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறித்த கிரகணம் இலங்கை நேரப்படி அன்றைய தினம் பி.ப. 02:28 முதல் மாலை 06:32 வரை ஏற்படவுள்ளதாகவும் அது இலங்கைக்கு மாலை 05:43 மணி முதல் மாலை 05:51 மணி வரைக்குமான காலப் பகுதிக்குள் ஏற்படவுள்ளதாகவும் அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்குக் கிரகணம் ஏற்படும் போது சூரியன் அடிவானத்திற்கு அருகில் இருப்பதாலும், சூரிய அஸ்தமனம் 05:52 மணிக்கு இருப்பதாலும் இந்த கிரகணம் இலங்கைக்கு அரிதாகவே தெரியும் எனவும் வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வானியல் அறிக்கைகளின் படி குறித்த கிரகணம் எமது நாட்டில் ஏற்பட்டு 08 நிமிடங்களில் சூரிய மறைவும் ஏற்படுகின்றது என்பதால் கிரகணத் தொழுகையை அதன் முறைப்பிரகாரம் தொழுது கொள்ளப் போதுமான நேரம் இல்லை. ஆகவே கிரகணம் ஏற்பட்டமை உறுதியானால் பொதுவான ஸுன்னத்தான இரண்டு ரக்அத்துகளைப் போன்று இரண்டு ரக்அத்களைத் தொழுதுகொள்வதுடன் துஆ, இஸ்திஃபார் மற்றும் ஸதகா போன்ற விடயங்களில் ஈடுபடுவது பொருத்தமாகும்.
அஷ்ஷைக் எச். உமர்தீன்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம்.டி.எம். ஸல்மான்
பதில் செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா