2023.10.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் கடமை புரிகின்ற உத்தியோகத்தர்களுக்கான விஷேட செயலமர்வொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதனை இந்தியாவிலிருந்து வருகை தந்த சென்னை, ஜாமிஆ இல்மிய்யா அறிவியல் மற்றும் ஆய்வு அரபிக் கல்லூரியின் நிறுவனர் அல்-ஹாபிள் மௌலானா டாக்டர் கலீல் அஹ்மது (முனீரி, மஸாஹிரி) அவர்கள் நடாத்தினார்கள். அவருடைய ‘ஒருங்கிணைந்த நிலையான வளர்ச்சித் திட்டம் : 2020 – 2030’ (Intergrated Sustainable Development Plan) எனும் ஆய்வினை மையப்படுத்தி இச்செயலமர்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சமூக வளர்ச்சியின் அடிப்படைக் காரணிகளை குறிப்பிட்டுப் பேசிய அவர் ஆன்மிகம், சமூக அரசியல், பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றின் மேம்பாட்டை மையப்படுத்தியதாக எமது வேலைத்திட்டங்களை அமைத்துக் கொள்வதனூடாகவே சமூகத்தின் வளர்ச்சியை முழுமையாக சாத்தியப்படுத்தலாம் என்று வலியுறுத்தினார்.
இறுதியாக ஜம்இய்யாவின் உப குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் கலந்துரையாடப்பட்டு அவற்றை எதிர்காலங்களில் மென்மேலும் வினைத்திறனாகவும் சிறப்பாகவும் செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் கள அனுபவங்களின் அடிப்படையிலான வழிகாட்டல்களையும் மௌலானா டாக்டர் கலீல் அஹ்மது அவர்கள் ஜம்இய்யாவின் உத்தியோகத்தர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள்.
இவ்வமர்வில் ஜம்இய்யாவின் தலைமையகம் சார்பாக தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, உப தலைவர்களுள் ஒருவரான அஷ்ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக், பதில் பொதுச்செயலாளர் அஷ்ஷைக் ஏ.ஸீ.எம். பாழில் ஹுமைதி, நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் மற்றும் அஷ்ஷைக் ரிபாஹ் ஹஸன் ஆகியோர் கலந்துகொண்டனர்.