2023.12.15ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழுவினால், ஜம்இய்யாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் சிறந்த பிரஜைகளை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான பல செயலமர்வுகள் நிந்தவூர் பிரதேசத்தினை மையப்படுத்தி நடாத்தப்பட்டன.
அதன்படி நிந்தவூர் கமு/ அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மற்றும் கமு/ அல்-மஷ்ஹர் மகளிர் பாடசாலை ஆகியவற்றை மையப்படுத்தி நடாத்தப்பட்ட மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வுகள் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக்குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் மற்றும் பிரஜைகள் விவகாரப்பிரிவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத், அஷ்-ஷைக் ஸிராஜ், அஷ்-ஷைக் இஹ்ஸான் ஆகியோரால் நடாத்தப்பட்டன. இந்நிகழ்வுகளில் முறையே சுமார் 230 மற்றும் 380 மாணவ மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இதனையடுத்து அஷ்-ஷைக் ஸிராஜ் அவர்களினால் நிந்தவூர் கமு/ மதீன் மகா வித்தியாலயத்திலும், அஷ்-ஷைக் இஹ்ஸான் அவர்களினால் நிந்தவூர் கமு/ அறபா வித்தியாலயத்திலும் பெற்றோருக்கான வழிகாட்டல் நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. இந்நிகழ்வுகளில் இரு பாடசாலைகளிலும் முறையே 30 மற்றும் 35 பெற்றோர்கள் பங்குபற்றினர்.
இறுதி நிகழ்வாக நிந்தவூர் பிரதேசத்தினை மையப்படுத்திய இளைஞர்களுக்கான மார்க்க வழிகாட்டல் செயலமர்வு நிந்தவூர் பெரிய ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது. இதில் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக்குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், பிரஜைகள் விவகாரப்பிரிவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் மற்றும் அஷ்-ஷைக் முஃப்தி நஜ்முதீன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் குறித்த பிரதேசத்தின் சுமார் 180 இளைஞர்கள் பங்குபற்றியிருந்தனர்.
மேலும் குறித்த நிகழ்வுகளில் வளவாளர்களாக கலந்து கொண்ட உலமாக்களால் நிந்தவூரில் உள்ள ஜுமுஆ பள்ளிவாயல்களில் அன்றைய வெள்ளிக்கிழமை குத்பா உரைகளும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-ACJU Media-