டெங்கு நோயிலிருந்து எச்சரிக்கையாக இருப்போம்

2017.03.24 / 1438.06.24

டெங்கு நோயிலிருந்து எச்சரிக்கையாக இருப்போம்!

நாட்டில் பல பாகங்களில் தற்போது டெங்கு நோயினால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக கிண்ணியா, மூதூர், தோப்பூர் போன்ற பகுதிகளில் பலர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக் கணக்கானோர் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பல இடங்களிலும் இந்நோய் பரவி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எம்மையும் எமது சுற்றுச் சூழலையும் சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும். சுத்தம் ஈமானின் பாதியாகும் என்பது நபி மொழியாகும்.
டெங்கு நோய் ஒழிப்புக்காக பல திட்டங்கள் பலராலும் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வேளையில் ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள், பொது அமைப்புக்கள், பள்ளிவாசல் நிருவாகிகள் அனைவரும் சுற்றுச் சூழலையும் பொது இடங்ளையும் சுத்தம் செய்யும் சிரமதானப் பணிகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுமாறும், டெங்கு ஒழிப்புக்காக வரக் கூடிய அரச உத்தியோகத்தர்களுக்கு கூடிய ஒத்துழைப்பை வழங்கி செயற்பட வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது.

அத்துடன் இந்தக் கொடிய நோயிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு ஸதகா கொடுப்பது, துஆக்கள் கேட்பது போன்ற விசேஷ அமல்களில் ஈடுபடுமாறும், குறிப்பாக நாட்டு மக்கள் அனைவரதும் ஆரோக்கியமான வாழ்வுக்காக அல்லாஹ்விடம் அதிகமாக பிரார்த்தனை செய்வதில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு முஸ்லிம்களை மிகவும் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மனைவரையும் கொடிய நோய்களில் இருந்து பாதுகாத்து நல்லாரோக்கியமாக வாழ அருள் புரிவானாக.

 

அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்
செயலாளர் – சமூக சேவைப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *