தமிழ்நாடு ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர் மௌலானா முப்தி முஹம்மத் றூஹுல் ஹக் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்துக்கு வருகை – ஜம்இய்யாவின் தலைவர் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து கௌரவிப்பு –

2023.10.02 ஆம் திகதி இந்தியாவின் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜாமிஆ அன்வாருல் உலூம் அறபுக் கல்லூரியின் முதல்வரும் தமிழ்நாடு ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவருமான மௌலானா முப்தி முஹம்மத் றூஹுல் ஹக் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்துக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு, உலகளாவிய ரீதியில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுவதில் பங்களிப்புச் செய்தமைக்காக அண்மையில் ரஸ்யாவின் தத்ரிஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற சர்வதேச இஸ்லாமிய மாநாடொன்றில் ‘ரோஸா மிரா’ (The Rose Of The World) பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். றிஸ்வி அவர்களை சந்தித்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் அமைப்புகள் சார்பாகவும் பொன்னாடை அணிவித்து, கண்ணியப்படுத்தி தமது வாழ்த்து மடலை சமர்ப்பித்தார்கள்.

நிகழ்வின் ஆரம்பமாக ஜம்இய்யாவின் பொதுச்செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் உரையைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மௌலானா முப்தி முஹம்மத் றூஹுல் ஹக் அவர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களுக்கு தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்கள். ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட ‘சமூக ஒற்றுமை காலத்தின் தேவை’, ‘தீவிரவாதம் வேண்டாம்’, ‘சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்’, ‘மன்ஹஜ்’ போன்ற வெளியீடுகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர்கள், குறித்த பணியானது வரவேற்கத்தக்கது என்றும் இதனை இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைமுறைப்படுத்த தாம் கடமைப்பட்டுள்ளதாகவும் கூறினார்கள். குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் முன்னெடுக்கப்படும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் செயல்திட்டமானது, தமிழ்நாட்டுக்கு சிறந்த முன்மாதிரியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்கள்.

மேலும் அனைவரும் தத்தமது பொறுப்புகளையும் கடமைகளையும் உறுதியான எண்ணங்களோடும் பன்மடங்கு ஈடுபாட்டோடும் திடமாக திட்டங்களை வகுத்து நிறைவேற்றிட கடமைப்பட்டுள்ளோம் என்றும் எமது தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளும் கொள்கை ரீதியிலான பிடிவாதங்களும் குறுகிய மனப்பான்மையும் சமூகத்தை ஒருபோதும் பிளவுபடுத்திவிடக்கூடாது என்றும் நாம் அனைவரும் அன்பு, நேசம், மனிதாபிமானம் மற்றும் சகோதர வாஞ்சை அடிப்படையில் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவில் கடந்த மூன்றரை தசாப்தங்களுக்கும் மேலாக சேவையாற்றி வரும் மூத்த உறுப்பினரும் தற்போதைய உப தலைவர்களுள் ஒருவருமான அஷ்ஷைக் ஏ.எல்.எம். கலீல் அவர்களும் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் சூழ மௌலானா அவர்களால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக ஏற்புரை வழங்கிய ஜம்இய்யாவின் தலைவர் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், மௌலானா அவர்களின் வருகைக்கு தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டதோடு ஒவ்வொருவரும் தமக்கும் மௌலானா அவர்களுக்குமிடையிலான உறவை நினைவுபடுத்தி அவர்களுக்காக துஆ பிரார்த்தனையும் செய்தனர்.

இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச்செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் கலாநிதி ஏ.ஏ. அஸ்வர், உப தலைவர்களான அஷ்ஷைக் ஏ.எல்.எம். கலீல் மற்றும் அஷ்ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக், உப செயலாளர்களுள் ஒருவரான அஷ்ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், பிறைக் குழுவின் செயலாளர் அஷ்ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், ஃபத்வாக் குழுவின் செயலாளர் அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ், ஆலிம்கள் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்ஷைக் எஸ்.எல். நவ்பர், இளைஞர் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்ஷைக் ரிபாஹ் ஹஸன் மற்றும் உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஊடகப் பிரிவு – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *