தொழிலாளர்கள் – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

ACJU/RPL/2024/15/24
2024.05.01 (1445.10.22)

தொழில் பற்றிய இஸ்லாமிய பார்வை:

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகவும் கௌரவமாக வாழ்வதற்காகவும் தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதனை இஸ்லாம் வரவேற்கிறது.

 

தொழிலை ஆர்வமூட்டும் அல்-குர்ஆன்:

“(ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (மஸ்ஜிதிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய (வாழ்வாதார) அருளைத் தேடிக் கொள்ளுங்கள்!” (62:10)

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழில் வழிகாட்டல்:

‘உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு தமது முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்(றுப் பிழைப்)பதானது, மக்களிடம் யாசகம் கேட்பதைவிடச் சிறந்ததாகும்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸுபைர் பின் அல்-அவ்வாம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் புகாரி : 1471)

 

தொழிலாளர்கள் பற்றிய இஸ்லாமிய நோக்கு:

தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய அத்தனை உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

 

தொழிலாளர்களும் தொழில் வழங்குனர்களும்:

01. தொழிலாளர்களுடன் கண்ணியமாக நடந்துகொள்ளல்.

02. பணியாளர்களால் சுமக்கமுடியாத வேலைகளைச் சுமத்தாதிருத்தல்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சமயம் அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து, தம் சகோதரரைத் தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் அவர்களின் சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு நீங்கள் கொடுத்தால் அவர்களுக்கு நீங்களும் சேர்ந்து உதவியாக இருந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி : 30) இந்த ஹதீஸிற்கு இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் விளக்கம் கூறுகையில் உங்கள் அதிகாரத்தின் கீழ் உள்ளவர்களில் உங்களது பணியாளர்கள், கூலியாளர்களும் அடங்குவர் எனக் கூறுகின்றார்கள்.

وَيَلْتَحِقُ بِالرَّقِيقِ مَنْ فِي مَعْنَاهُمْ مِنْ أَجِيرٍ وَغَيْرِهِ (فتح الباري لابن حجر, قَوْلُهُ بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَبِيدُ إِخْوَانُكُمْ فَأَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ)

3. உரிய நேரத்துக்கு ஊதியம் வழங்குதல்

‘வியர்வை உலர்வதற்கு முன்னர் பணியாளரின் கூலியைக் கொடுத்து விடுங்கள்!’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள் (ஸுனன் இப்னு மாஜஹ் : 2443) அதாவது, செய்த வேலைக்கு ஏற்ற கூலியை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொடுப்பதில் காலம் தாழ்த்துவதோ இழுத்தடிப்பதோ கூடாது.

”மறுமைநாளில் மூவருக்கு எதிராக நான் வாதாடுவேன்” என்று அல்லாஹ் கூறுகின்றான். அவர்களில் ஒருவன் ஒரு கூலியாளிடம் நன்றாக வேலை வாங்கிக்கொண்டு அவனது கூலியைக் கொடுக்காமல் இருந்தவன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் புகாரி : 2227)

எனவே தொழிலாளர்களின் சம்பளம் அல்லது கொடுப்பனவு விடயத்தில் காலதாமதம் செய்வதோ அல்லது அதனைக் குறைத்துக் கொடுப்பதோ இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத விடயங்களாகும். மறுமைநாளில் இது குறித்து நிச்சயம் விசாரிக்கப்படும்.

 

தொழிலாளர்கள் மீதான கடமைகளும் பொறுப்புக்களும்:

தமது உரிமைகள் குறித்து குரல்கொடுக்கும் தொழிலாளர்கள் தமது உரிமைகள் எவ்வளவு முக்கியமானவையோ அதே போன்று தமது பொறுப்புகள், கடமைகளும் முக்கியமானவை என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும் என்பது இஸ்லாமிய வழிகாட்டலாகும். அந்த வகையில் தொழிலாளர்களின் மீதுள்ள கடமைகள், தொழில் வழங்குனர்களின் உரிமைகள் குறித்தும் இத்தினத்தில் நோக்குவதும் அவசியமாகும்.

1. தூய்மையான எண்ணத்துடன் தொழில் புரிதல்.

பிறரிடம் கையேந்தாது தான் உழைத்து வாழ வேண்டும் என்ற நோக்கில் ஒருவர் ஹலாலான (அனுமதிக்கப்பட்ட) உழைப்பில் ஈடுபட்டால் அவர் அல்லாஹ்வின் பாதையில் இருக்கிறார் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

2. செய்யும் தொழிலை ஓர் இபாதத்தாகக் (வணக்கமாக) கருதுதல்.

ஒரு முஸ்லிம் வாழ்வின் அனைத்து விடயங்களையும் இபாதத்துக்களாக ஆக்கிக் கொள்வதையே இஸ்லாம் ஆர்வமூட்டியுள்ளது. அவ்வாறே தொழில் செய்கின்ற போதும் ஒரு முஸ்லிம் தான் இபாதத்தில் இருக்கின்றேன் என்ற உணர்வுடன் செயற்படல் வேண்டும்.

3. நம்பிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படல்.

தொழிலாளர் தன்னுடைய தொழில் சார்ந்த பொறுப்புகள் பற்றியும் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வுடனும் நம்பிக்கையுடனும் தொழிலில் ஈடுபட வேண்டும். அத்துடன் தியாகம், அர்ப்பணம், நேரம் தவறாமை என்பவற்றோடு, பொருளீட்டலில் இஸ்லாம் வகுத்துள்ள வரையறைகளுக்குள் நின்று கடமை புரிய வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் ஒரு நல்ல குடும்பம், சமூகம், நாடு என முழு உலகமும் வளம்பெறக் காரணமாக அமையும்.

4. தொழில் பற்றிய அறிவைப் பெற்றிருத்தல்.

தொழிலாளர் தனக்கு வழங்கப்பட்ட தொழில் தொடர்பான பூரண அறிவைப் பெற்றிருத்தல் வேண்டும். யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னை பூமியின் களஞ்சியத்திற்கு பொறுப்பாக்குமாறு கேட்டபோது நான் பாதுகாப்பவனாகவும், நன்கறிந்தவனாகவும் உள்ளேன் என்று கூறியது இங்கு குறிப்படத்தக்கதாகும். எனவே செய்யும் தொழிலை அறிந்து செய்யவேண்டும்.

5. நிறைவுடன் நேர்த்தியாகச் செய்தல்.

எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதனை அழகாக, திறம்பட, நேர்த்தியாகச் செய்ய வேண்டும். ‘ஒருவர் ஒரு வேலையைச் செய்தால் அதனைத் திறம்படச் செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ் விரும்புகிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.’ (ஷுஅபுல் ஈமான்: 4930)

 

ஐ.நா சபையின் சர்வதேச தொழிலாளர் தினம்:

அந்தந்த நாடுகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தம்மை அர்ப்பணித்து செயலாற்றும் தொழிலாளர்களின் பங்களிப்பை கௌரவித்து அவர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் அங்கீகரிக்கும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 01 ஆம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் ஐ.நா சபையினால் அனுஷ்டிக்கப்படுகிறது.

14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொழிலாளி மற்றும் முதலாளியின் கடமைகள், உரிமைகள், மற்றும் அவர்களுக்கிடையேயான உறவுகள் பற்றிய அடிப்படைகளை இஸ்லாம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டால் தொழிலாளர் உரிமைகள் சரியாக பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே எமது பணியாளர்கள், தொழிலாளர்களுடன் அன்பாகவும் கரிசணையோடும் பழகுவதோடு அவர்களுடன் மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்வோம். அதேபோன்று தொழிலாளர்களும் தமது பணியை, கடமையை நிறைவாகவும் தாம் பெறுகின்ற ஊதியத்துக்கு உண்மையாகவும் நிறைவேற்றிட வேண்டும்.

கடமைகளை செய்வதனூடாக உரிமைகளை பெற்றுக்கொள்வோம்.

அல்லாஹு தஆலா எம்மனைவருக்கும் இஸ்லாமிய விழுமியங்களுடன் வாழ்ந்து, மனிதர்களோடு உண்டான உறவுகளைச் சீர்படுத்திட நல்லருள் புரிவானாக!

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் நாகூர் ளரீஃப்
செயலாளர் – ஆய்வு மற்றும் வெளியீட்டுக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *