தொழிலாளர்கள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்

ACJU/NGS/2023/130

2023.05.01 (1444.10.10)

 

உலகத்தை அல்லாஹு தஆலா உழைப்பினால் இயக்கிக் கொண்டிருக்கிறான். தொழில் செய்வதும் பொருளீட்டுவதும் மானுட வாழ்வின் இன்றியமையாத ஓர் அங்கமாகும். ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காகவும் கண்ணியமான, கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்காகவும் தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதனை இஸ்லாம் வரவேற்கிறது, வலியுறுத்தியிருக்கிறது. ஒரு வேலையும் செய்யாமல் பிறரை அண்டி வாழ்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

தொழில் வழங்குனர்களுக்கும் அவர்களுக்குக் கீழ் வேலை செய்யும் அல்லது அவர்களது பணியிடங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்குமிடையிலான உறவு ஆரோக்கியமாகவும் மனிதாபிமான அடிப்படையிலும் பேணப்படுவது அவசியமாகும்.

ஒருவரிடமிருந்து நாம் உழைப்பைப் பெற்றுக்கொள்ளும் போது அதற்குரிய கூலியை கொடுத்துவிடுவது எம்மீது கடமையாக மாறிவிடுகிறது. தமது ஆட்டு மந்தைகளுக்கு நீர் புகட்டியதற்காக மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஷுஐப் நபியவர்களின் மகள்மார்களில் ஒருவர் வந்து இவ்வாறு கூறுகிறார். ‘…எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்…’ (ஸுறா கஸஸ்: 25) என்று அல்குர்ஆன் அச்சம்பவத்தை அழகாக பதிவு செய்துள்ளது.

‘பணியாளரை நியமிப்பவர் அவருக்கான கூலியை நிர்ணயம் செய்து தெரிவித்து விடட்டும்.’ (நூல்: பைஹகி) என்றும் ‘கூலியாளரின் வியர்வை காய்வதற்கு முன்னர் அவரின் கூலியை கொடுத்து விடுங்கள்.’ (நூல்: இப்னுமாஜா) என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபதேசம் செய்துள்ளார்கள்.

எனவே தொழிலாளர்களின் சம்பளம் அல்லது கூலி விடயத்தில் காலதாமதம் செய்வதோ அல்லது அதனை குறைத்துக் கொடுப்பதோ அல்லது அதில் கஞ்சத்தனம் காட்டுவதோ அவர்களுடன் அநியாயமாகவும் மனசாட்சியின்றியும் நடந்து கொள்வதோ அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதோ இஸ்லாத்தில் பாரதூரமான பாவங்களாகும். மறுமை நாளில் இதுகுறித்து நாம் நிச்சயம் விசாரிக்கப்படுவோம்.

பணியாளர்கள் விடயத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு அறிவுரை கூறினார்கள். ‘…அவர்கள் உங்களின் சகோதரர்கள் ஆவர். எனவே எவரின் ஆதிக்கத்தின் கீழ் அவரின் சகோதரர் இருக்கின்றாரோ அவர் தன் சகோதரருக்கு தான் உண்பதிலிருந்து உண்ணத் தரட்டும். தான் உடுத்துவதிலிருந்து உடுக்கத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப்பளுவை அவர்களின் மீது சுமத்தாதீர்கள். அப்படி சுமத்தினால் அதை நிறைவேற்றிட நீங்களும் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.’ (நூல்: புகாரி)

தமக்குக் கீழ் வேலை செய்யும் பணியாளர்களை தமது சகோதரர்களாகக் கருதி பழகுமாறு வழிகாட்டியிருப்பது இஸ்லாத்துக்கே உரிய தனிச்சிறப்பாகும்.

அந்தந்த நாடுகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தொழிலாளர்களின் பங்களிப்பை கௌரவித்து அவர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் அங்கீகரிக்கும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 01 ஆம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் ஐ.நா சபையினால் அனுஷ்டிக்கப்படுகிறது.

14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொழிலாளி – முதலாளியின் கடமைகள், உரிமைகள், மற்றும் உறவுகள் பற்றிய அடிப்படைகளை இஸ்லாம் தெளிவுபடுத்தியுள்ளது. இஸ்லாத்தின் இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டால் தொழிலாளர் உரிமைப் பேரணிகளுக்கோ ஆர்ப்பாட்டங்களுக்கோ அவசியம் எழாது.

எனவே எமது பணியாளர்கள், தொழிலாளர்களுடன் அன்பாகவும் கரிசணையோடும் பழகுவதோடு அவர்களுடன் மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்வோம். அதேபோன்று தொழிலாளர்களும் தமது பணியை, கடமையை நிறைவாகவும் தாம் பெறுகின்ற ஊதியத்துக்கு உண்மையாகவும் நிறைவேற்றிட வேண்டும். கடமைகளை செய்வதனூடாக உரிமைகளை பெற்றுக்கொள்வோம்.

அல்லாஹு தஆலா எம்மனைவரது எண்ணங்களையும் தூய்மைப்படுத்தி தக்வாவோடு வாழ்ந்து மரணிக்க நல்லருள் புரிவானாக.

 

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *