நாட்டில் COVID 19 எனும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது சம்பந்தமாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தல்கள்

15.03.2020

19.07.1441

 

நாட்டில் COVID 19 எனும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது சம்பந்தமாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தல்கள்

1-            ஜுமுஆ மற்றும் ஜவேளைத் தொழுகை உட்பட அனைத்து ஒன்று கூடல்களையும் மஸ்ஜித் மற்றும் பொது இடங்களில் தவிர்ந்துகொள்ளல்.

2-            உரிய நேரத்திற்கு ஒவ்வொரு மஸ்ஜிதிலும் அதான் சொல்ல வேண்டும். அதானின் முடிவில் “ஸல்லூ பீ ரிஹாலிகும்” (நீங்கள் இருக்கும் இடங்களில் தொழுதுகொள்ளுங்கள்) (ஸஹீஹு முஸ்லிம் – 697) என்று அறிவித்தல்.

3-            மஸ்ஜிதில் இருக்கும் இமாம் மற்றும் முஅத்தின் போன்றவர்கள் மஸ்ஜிதிலேயே ஜமாஅத்தாகத் தொழுதுகொள்ளல்.

4-            வீட்டில் உள்ளவர்கள் ஐவேளைத் தொழுகைகளை உரிய நேரத்தில் ஜமாஅத்தாகத் தொழுதல். முன் பின் சுன்னத்தான தொழுகைகள் மற்றும் ஏனைய தஹஜ்ஜுத், ழுஹா, சதகா, நோன்பு போன்ற நபிலான வணக்கங்களில் கூடிய கவனம் செலுத்துவதோடு பாவமான காரியங்களிலிருந்து விலகி நிற்றல்.

5-            பிள்ளைகள் விடுமுறையில் இருப்பதனால், அவர்கள் சுற்றுலா செல்லுதல், பாதையில் கூடி விளையாடுதல் போன்ற விடயங்களைத் தவிர்த்து, குர்ஆன் ஓதுதல், துஆ, மற்றும் கற்றல், கற்பித்தல் போன்ற நல்ல விடயங்களில் ஈடுபடுத்துவதில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்தல்.

6-            ஒருவர் மற்றவரை சந்தித்தால் ஸலாம் கூறுவதும் முஸாபஹா செய்வதும் சுன்னத்தாகும். எனினும், COVID 19 என்ற நோய் கைகள் மூலம் அதிகமாகப் பரவ வாய்ப்புள்ளது என்று வைத்திய நிபுணர்கள் கருதுவதால், ஒருவர் மற்றவரை சந்திக்கும் பொழுது முஸாபஹா செய்வதைத் தவிர்த்து ஸலாம் சொல்வதுடன் போதுமாக்கிக் கொள்ளுதல்.

7-            ஜனாஸாவின் கடமைகளை மார்க்க விதி முறைகளைப் பேணி நிறைவேற்றுவது எம்மீதுள்ள கடமையாகும். இக்கால சூழ்நிலையை கவனத்திற்கொண்டு அடக்கம் செய்யும் விடயத்தில் ஜனாஸாவிற்கு செய்ய வேண்டிய முக்கிய கடமைகளுடன் சுருக்கிக்கொள்ளல்.

8-            COVID 19  என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரமாக சுகம் கிடைக்க பிரார்த்திப்பதுடன், அவர்களுடன் கனிவோடு நடந்துகொள்வதும், எம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதும் எமது கடமையாகும்.

9-            இக்கொடிய நோய் இந்நாட்டை விட்டும், உலக நாடுகளை விட்டும் முழுதாக நீங்க அனைவரும் அல்லாஹ்விடம் மன்றாடுதல்.

10-          சமூக வலைத்தளங்களில் மார்க்கத்திற்கு முரணான மற்றும் ஊர்ஜிதமற்ற தகவல்களைப் பரப்புவதைத் தவிர்த்தல்.

குறிப்பு: தேசிய சுகாதார துறையின் வேண்டுகோளுக்கிணங்கவும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை கவனத்திற் கொண்டும், சர்வதேச உலமாக்களினதும், உலமா அமைப்புக்களினதும் தீர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டும் மேற்படி அறிவுறுத்தல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கின்றது.

 

அல்லாஹ்வே எமக்குப் போதுமானவன். அவனே எமக்கு சிறந்த பாதுகாவலன்.

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாரக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *