(2023.10.25) 1445.04.09
சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவற்றை மறையக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தர்மம் செய்யுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி – 1044)
சூரியன் அல்லது சந்திரன் முழுமையாக அல்லது அவற்றில் ஒரு பகுதி மறைவதைக் காணும் போதுதான் கிரகணத் தொழுகை, துஆ, இஸ்திஃபார் மற்றும் ஸதகா போன்ற இபாதத்துகள் சுன்னத்தாகும். கிரகணம் ஏற்பட்டுள்ளது என உறுதியானதன் பின்னர் கிரகணத் தொழுகையை அதனது முறைப்பிரகாரம் தொழ ஆரம்பிக்கும் போது மீதமாக இருக்கும் நேரம் அதனைப் பூர்த்தி செய்யப் போதாதெனில் கிரகணத் தொழுகையை அதனது முறைப்பிரகாரம் தொழ ஆரம்பிக்காமல் ளுஹ்ருடைய ஸுன்னத்தான இரண்டு ரக்அத்துகளைப் போன்று இரண்டு ரக்அத்களைத் தொழுதுகொள்ளல் வேண்டும்.
இலங்கையில் பகுதி சந்திர கிரகணமானது எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி இரவு 11:31 மணிக்கு ஆரம்பித்து 29 ஆம் திகதி அதிகாலை 03:56 மணிக்கு முடிவடையும் என வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதன்படி பகுதி கிரகணம் பூர்த்தியாக விளங்கக்கூடிய நேரமாகிய ஒக்டோபர் 29 ஆம் திகதி அதிகாலை 01:05 முதல் அதிகாலை 02:22 வரையான காலப்பகுதிக்குள் பகுதி சந்திர கிரகணம் ஏற்படுவதைக் காணும் போது அல்லது ஏற்பட்டமை உறுதியாகும் போது கிரகணத் தொழுகை, துஆ, இஸ்திஃபார் மற்றும் ஸதகா போன்ற ஸுன்னத்தான இபாதத்துகளில் தமது பகுதி மக்களை ஈடுபடுத்தும் விடயத்தில் மஸ்ஜித் இமாம்கள், அப்பகுதி ஆலிம்கள், மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கவனம் செலுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு கேட்டுக் கொள்கின்றது.
அஷ்ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான்
செயலாளர் – பிறைக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா