‘பலஸ்தீனர்களின் நீதிக்காக ஒன்றுபடுவோம்’ – உலக முஸ்லிம் லீக் ஏற்பாட்டில் மலேசியாவில் நடைபெற்ற முதல் அமர்வான சர்வதேச மார்க்க அறிஞர்களுக்கான மாநாட்டில் ஜம்இய்யாவின் தலைவர் வலியுறுத்து

உலக முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்திருந்த சர்வ மத தலைவர்களுக்குமான சர்வதேச மாநாடு 2024.05.07ஆம் திகதி மலேசியாவில் நடைபெற்றது.

குறித்த இம்மாநாட்டில் சர்வ மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இம்மாநாட்டில் மலேசியாவின் அதிமேன்மைக்குரிய துணைப் பிரதமர் கலாநிதி அஹ்மத் சாஹித் பின் ஹாமிதி, மலேசிய கலாச்சார அமைச்சர் கலாநிதி ஹாஜ் முஹ்த் நயீம் பின் ஹாஜி முக்தார் மற்றும் உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் கலாநிதி முஹம்மத் பின் அப்துல் கரீம் அல் ஈஸா ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.

இதில் உரையாற்றிய ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையின் அவசியம் மற்றும் மதீனா சாசனம் உலகுக்கு அறிமுகம் செய்யும் அமைதியான வாழ்வியல் முறைமை என்பன குறித்து விரிவாகவும் தெளிவாகவும் சபையில் கருத்துக்களை முன்வைத்தார்.

சர்வதேச மத தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் குழுமியிருந்த குறித்த சபையில் பலஸ்தீன முஸ்லிம்களுடைய வாழ்வுரிமைப் போராட்டம் மற்றும் அவர்கள் அனுபவிக்கும் வன்கொடுமைகள் தொடர்பில் சுட்டிக்காட்டியதோடு அவர்களது நீதிக்காக ஒன்றிணையுமாறும் ஜம்இய்யாவின் தலைவர் வலியுறுத்தினார்.

மேலும் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகள் மற்றும் அத்துமீறல்களை நிறுத்தவும் அவர்களுக்கான உரிமைகளை வழங்கவும், அம்மக்களுக்கான நீதியினை பெற்றுக்கொடுக்க விரைந்து செயற்படுமாறும் அவரால் சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனையடுத்து இலங்கையின் பூர்வீகம் பற்றி தலைவர் அவர்களால் உரைநிகழ்த்தப்பட்டதோடு உலக சமாதானத்தை கட்டி எழுப்புவதற்கான வழிமுறைகள் பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த மாநாட்டில் இலங்கை சார்பாக பலரும் கலந்து கொண்டிருந்ததோடு ஜம்இய்யாவின் உதவி பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

– ACJU Media –

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *