பலஸ்தீன், காஸாவின் அல்-அஹ்லி அரபு வைத்தியசாலை மீதான தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது

ACJU/NGS/2023/253

2023.10.18 / 1445.04.02

 

காஸாவின் அல்-அஹ்லி அரபு வைத்தியசாலை மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான குண்டுவெடிப்பு, உலக சமூகத்தை திகிலடையச் செய்திருக்கிறது. நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் இதில் பலியாகியுள்ளனர். சுகாதார, மருத்துவ சொத்துக்கள் மீதான இத்தகைய மிலேச்சத்தனமான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும்.

குறித்த பகுதிகளில் அப்பாவி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் என அனைவரும் எவ்வித ஈவிரக்கமுமின்றி தாக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

நியாயப்படுத்த முடியாத அப்பாவி பொதுமக்கள் மீதான இக்கொடூரத் தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது.

இத்தகைய கொடூரமான போர்க்குற்றங்கள் சர்வதேச சட்டங்களின் கீழ் கடுமையாகக் கையாளப்பட்டு நடுநிலையான முறையில் நீதி வழங்கப்பட வேண்டும்.

இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிட்டு, நெருக்கடி நிலையை உடனடியாகத் தணித்து அப்பாவி உயிர்கள் மேலும் பலியாவது தடுக்கப்பட வேண்டும் என ஜம்இய்யா வேண்டுகோள் விடுக்கிறது.

குறிப்பாக அங்கிருக்கின்ற இலங்கைத் தொழிலாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றி அவர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதியிலுள்ள அதிகாரிகளிடம் ஜம்இய்யா வேண்டுகோள் விடுக்கிறது.

மேலும் குறித்த பகுதியில் சிக்கித் தவிக்கும் அப்பாவி பொதுமக்களை பாதுகாப்பாகவும் உடனடியாகவும் வெளியேற்றுவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்படுவதோடு குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

அல்லாஹு தஆலா அப்பாவி பொதுமக்களைப் பாதுகாத்து, உலகில் அமைதியையும் நீதியையும் நிலைநாட்டுவானாக!

 

அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *