2024.10.07ஆம் திகதி, பலஸ்தீன்-காஸா பகுதியில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலையின் ஒரு வருட பூர்த்தியை நினைவுகூரும் முகமாக இலங்கைக்கான பலஸ்தீன் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் விஷேட அதிதியாக கலந்துகொண்டார்கள்.
இந்நிகழ்வில், பலஸ்தீன விவகாரம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்திய ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அவர்கள் அங்கு நிகழ்த்தப்பட்டுவரும் இனப்படுகொலைகள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கெதிரான ஜம்இய்யாவின் முயற்சிகளையும் சுட்டிக்காட்டினார்கள்.
பலஸ்தீன் விவகாரத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொண்டுள்ள நிலைப்பாடுகள் மற்றும் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து பலஸ்தீன தூதரக அதிகாரிகளினால் வெகுவாகப் பாராட்டப்பட்டதோடு நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களினால் பலஸ்தீனில் படுகொலை செய்யப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்காக விஷேட பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு அங்கு வெகுசீக்கிரம் நிலைமைகள் சீரடைந்து அமைதி நிலவவும் பிரார்த்திக்கப்பட்டது.
மேலும், பலஸ்தீன விவகாரத்தில் நீதிகோரி முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து வேட்டையிலும் ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அவர்கள் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
– ACJU Media –