எகிப்து நாட்டின் தலைநகரம் கைரோவில் ஃபத்வா சம்பந்தமான சர்வதேச மாநாடு நடைபெற்றது. அக்டோபர் 18, 19 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சர்வதேச ரீதியில் 90 நாடுகளின் பிரமுகர்கள் பங்கு பற்றினார்கள். அந்த மாநாட்டில் இலங்கை சார்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஃபத்வா குழு செயலாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் அவர்களும் பங்கு பற்றி சிறப்பித்தார்கள்.
18 ஆம் திகதி நடைபெற்ற முதலாம் நாள் மாநாட்டில் ஆரம்ப உரை வழமைக்கு மாற்றமாக நீண்ட நேரம் நிகழ்த்தப்பட்டது. பின்னர் சர்வதேச பிரமுகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து ஆக்கபூர்வமான உரைகளை நிகழ்த்தினார்கள்.
முதலாவதாக எகிப்து நாட்டின் முஃப்தியும், சர்வதேச ஃபத்வா கமிட்டியின் தலைவருமான சங்கைக்குரிய கலாநிதி ஷவ்கி அல்லாம் அவர்கள் தமது கருத்துக்களை முன் வைத்தார்கள். அதன் பின்னர் எகிப்து நாட்டின் பிரதமருக்கு பதிலாக, எகிப்து நாட்டின் அவ்காஃபின் அமைச்சர் சங்கைக்குரிய கலாநிதி முஹம்மத் முக்தார் ஜும்ஆ அவர்கள் கருத்துக்களை முன் வைத்தார்கள்.
அஸ்ஹர் ஷரீபின் துணைச் செயலாளர் கண்ணியத்துக்குரிய கலாநிதி முஹம்மத் ளுவைனீ அவர்கள் ஷைகுல் அஸ்ஹருக்குப் பதிலாக உரையாற்றினார்கள். எகிப்தின் கிறிஸ்தவ ஆலயங்களின் சார்பாக கிறிஸ்தவ பாதிரி அன்பா அர்மியா அவர்களும் கருத்துக்களை முன் வைத்தார்கள். பலஸ்தீன் நாட்டின் காழில் குழாத் (தலைமைக் காழி) அவர்கள் கண்ணியத்துக்குரிய கலாநிதி மஹ்மூத் ஸித்கீ ஹபாஷ் அவர்கள் பலஸ்தீனத்தைப் பற்றி ஆற்றிய உணர்வு பூர்வமான உரை எல்லோரின் கவனங்களையும் ஈர்த்தது. அவ்வாறே லெபனான், ஐக்கிய அரபு அமீரகம், அல்ஜீரியா போன்ற நாடுகளின் பிரமுகர்களும் உரைகளை நிகழ்த்தினார்கள். இந்த மகாநாட்டில் உலக முஸ்லிம்களுக்கும், பொதுவாக மனித இனத்துக்கும் பல பிரயோஜனமான கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது எல்லோரின் மனங்களையும் குளிர வைத்தது.
மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வு அக்டோபர் 19 ஆம் திகதி நடைபெற்றது. “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டிற்கான ஃபத்வா வழங்குவதில் பண்பாட்டு நெறி ஒன்றை உருவாக்குதல்” எனும் தொனிப் பொருளில் அன்றைய பணிமனை இடம்பெற்றது. அந்தத் தலைப்பில் சர்வதேச ரீதியான ஆய்வாளர்கள் பலரும் தங்களது கருத்துக்களை முன் வைத்தார்கள். மாநாட்டில் இலங்கை சார்பாக பங்கு பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ தலைவர் அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வா குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் அவர்களும் தங்களுடைய ஆய்வு கருத்துக்களை சபையில் முன் வைத்து உரையாற்றினார்கள்.
இரண்டாம் நாள் இறுதியில் முடிவுரை நிகழ்த்தப்பட்டது. அதில் 14 தீர்மானங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன. எட்டப்பட்ட 14 தீர்மானங்களில் 7 தீர்மானங்கள் பலஸ்தீனம் சம்பந்தமானதாகவே இருந்தன.
சுமார் 90 நாடுகளிலிருந்து பங்கு பற்றிய பெரும் முஃப்திமார்கள், ஆலிம்கள், அமைச்சர்கள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள், பொருளாதார நிபுணர்கள், சமூகத் தலைவர்கள், சூழல், நுண்ணறிவு போன்று பல கலைகளில் தேர்ச்சி பெற்ற துறை சார்ந்தோர் முன்னிலையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் சாரம்சம் பின்வருமாறு:
• பலஸ்தீன் மற்றும் பைத்துல் முகத்தஸ் விவகாரம் முஸ்லிம்களின் உள்ளத்தில் ஆழப்பதிந்த உணர்வு ரீதியானதாகும். அந்தப் பூமி அதன் சொந்தக்காரர்களிடத்தில் மீட்டிக் கொடுக்கப்பட வேண்டும்.
• உலகின் ஏனைய பிரதேசங்களில் மனிதர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை அமைதியாகவும், நிம்மதியாகவும் கழிப்பது போன்று பலஸ்தீன் மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும்.
• பலஸ்தீன் விவகாரத்தில் ஆலிம்கள் பங்கு மிக மகத்தானது.
• பலஸ்தீனின் சுபீட்சத்திற்காக அரசாங்கங்கள் உத்தியோகபூர்வமாக உதவி செய்ய வேண்டும்.
• பலஸ்தீன மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகள் மதங்கள் ரீதியாக முரணானது; மனிதாபிமானத்துக்கு மாற்றமானது; சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது.
• எகிப்து நாட்டின் அரசாங்கம், பலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
• சர்வதேச அமைப்புகளும் நிறுவனங்களும் சமகால சவால்களுக்கு முகம் கொடுக்க ஏற்றால் போல் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
• சிறுபான்மை முஸ்லிம்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.
• தீவிரவாதம், வன்முறைகள், நாஸ்திகம் சம்பந்தமாக வெளியிடும் ஃபத்துவாக்கள் பற்றிய கவனம் செலுத்துதல், நவீன உலகின் தேவைகளுக்கேற்ப விதமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக ஃபத்வாக்கள் வழங்குவதின் முக்கியத்துவம், இனங்களுக்கிடையில் சகவாழ்வைம், ஒற்றுமையையும் ஏற்படுவதற்காக முயற்சித்தல், உலகளாவிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஆதரிப்பதன் அவசியம்.
போன்ற 14 தலைப்புகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை கண்ணியத்துக்குரிய முஃப்தித் தியார் கலாநிதி ஷவ்கீ அல்லாம் அவர்கள் முன்மொழிந்தார்கள்.
மாநாடு முடிவடைந்த பின்னர் முஃப்தித் தியார் (எகிப்தின் பிரதம முஃப்தி) அவர்களுடன் சந்தித்து உரையாட இருப்பதாக அவர்களின் செயலாளர் அவர்களிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பாக வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. இலங்கை நாட்டையும் அதன் முஸ்லிம்களையும் குறிப்பாக ஜம்இய்யத்துல் உலமாவையும் கண்ணியப்படுத்தும் முகமாக கண்ணியத்துக்குரிய முஃப்தித் தியார் அவர்கள் அக்டோபர் 21ஆம் திகதி ஜம்இய்யாவின் பிரமுகர்கள் இருந்த ஹோட்டலுக்கே வருகை தந்து பிரத்தியேகமான ஒரு இடத்தில் சந்தித்தார்கள். கண்ணியத்துக்குரிய முஃப்தித் தியார் அவர்களுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ தலைவர் அஷ்-ஷைக் முஃப்தி ரிஸ்வி அவர்களும், ஜம்இய்யாவின் ஃபத்வா குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் இல்யாஸ் அவர்களும் சுமார் ஒரு மணித்தியாலம் கலந்துரையாடினார்கள். அதில் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்துக்கும், இலங்கை முஸ்லிம்களுக்கும் குறிப்பாக ஜம்இய்யாவுக்கும் மத்தியில் உறவுகளை வலுப்படுத்துவது பற்றியும் இன்னும் பல விடயங்களும் சினேகபூர்வமான முறையில் கலந்துரையாடப்பட்டது. அவ்வுரையாடலில் இலங்கைக்கு வருகை தருமாறும் முஃப்தித் தியார்; அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
-ACJU MEDIA-