பலஸ்தீன சுதந்திரத்திற்காகப் போராடும் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவர் அஷ்-ஷஹீத் கலாநிதி இஸ்மாஈல் ஹனிய்யா رحمه الله تعالى அவர்களது மறைவையிட்டு ACJU விடுக்கும் அனுதாபச் செய்தி

ACJU/NGS/2024/358
2024.08.02 (1446.01.26)

 

1963ஆம் ஆண்டு காஸாவில் பிறந்த கலாநிதி இஸ்மாஈல் ஹனிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பலஸ்தீன் சுதந்திரத்திற்காகப் போராடும் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் ஆவார். மிகச்சிறந்த இராஜதந்திரியான அவர் தனது பிறந்தகமான பலஸ்தீனின் சுதந்திரத்திற்காகப் போராடும் அமைப்பின் அதிமுக்கிய பதவிகளை வகித்த, அதன் அரசியல் பிரிவுத் தலைவரும் ஆவார்.

2006 முதல் 2007 வரையிலான காலப்பகுதியில் ஜனநாயக ரீதியல் தெரிவுசெய்யப்பட்டு பலஸ்தீன் பிரதமராகவும் பின்னர் 2014 வரையில் காஸா பகுதியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசாங்கத்தின் பிரதமராகவும் தொடர்ந்து பணியாற்றினார். தனது இளமைப்பருவம் முதல் தனது தேசம், சமூகம் என்பதற்காக அர்ப்பணித்தார்.

தனது தேசத்தின் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் குடும்பத்தில் பலரையும் மிலேச்சத்தனமான தாக்குதலில் இழந்து, ஈற்றில் அவரும் அவ்வாறானதொரு தாக்குதலில் ஈரானில் வைத்து வீர மரணமடைந்தார்.

(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

எதிர்பாராத விதத்திலான அவரது திடீர் இழப்பு, அரபு மற்றும் இஸ்லாமிய உலக முஸ்லிம்களையும் ஜனநாயக விரும்பிகளையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அன்னாரது பேரிழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், பலஸ்தீன் மக்கள், போராட்ட அமைப்பின் தலைமையகம் மற்றும் சர்வதேச முஸ்லிம் உம்மாஹ்விற்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை ஆலிம்கள், இலங்கை முஸ்லிம்கள் சார்பில் அதன் ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்வதுடன் இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்களையும் வன்மையாகக் கண்டிக்கிறது.

அத்துடன், இலங்கைக்கான மேன்மைதங்கிய ஜனாதிபதி, எதிர்கட்சித் தலைவர் மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இத்தாக்குதலைக் கண்டித்துள்ளமையை வரவேற்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரையும் அவருடன் படுகொலை செய்யப்பட்ட மெய்ப் பாதுகாவலரான வஸீம் அபூ-ஷஃபான் அவர்களையும் ஷஹீதுகளுடன் சேர்த்து, உயர்ந்த பதவிகளை சுவனத்தில் வழங்குவானக!

அவர்களது நற்காரியங்களை ஏற்று, குற்றங்களை மன்னித்து அவர்களது பேரிழப்பால் துயருற்றிருக்கும் குடும்பம், நாட்டு மக்கள், அபிமானிகள் அனைவருக்கும் பொறுமையையும் ஆறுதலையும் அருள்வானாக!

பலஸ்தீன் மக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கான அவர்களது நியாயமான அனைத்து எதிர்பார்ப்புகளும் கிட்டுவதற்கும் அல்லாஹ் பேருதவிகள் செய்திடுவானாக!

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *