ACJU/RP/2024/03/12
2024.03.01 (1445.08.19)
பாகுபாடு பற்றிய அறிமுகம்
சமூக வாழ்வியலில் தனிநபர்கள் அல்லது குறித்ததொரு குழுவை அநியாயமாக நடாத்துதல் பாகுபாடு (Discrimination) என அழைக்கப்படுகிறது. வித்தியாசம் காட்டுதல், பாரபட்சமாக நடந்து கொள்ளுதல், பேதம் பாராட்டல் போன்ற ஒத்த கருத்துக்களை இப்பதம் சுட்டுகிறது.
எந்தவொரு பாகுபாடும் அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணானதாகும். சட்டத்தின் முன் சமத்துவத்தையும் நியாயத்தையும் அது பறித்து விடுகிறது.
பாகுபாடுகள் நிலவும் விடயங்கள்
உலகளாவிய ரீதியில் சமூகம், பொருளாதாரம், இனம், மதம், தேசியம், அரசியல், கருத்தியல், இயலாமை மற்றும் குறைபாடுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களிடையேயும் சமூகங்களுக்கு மத்தியிலும் காலாகாலமாக பாகுபாடுகள் நிலவி வருகின்றன.
இஸ்லாத்தில் மனிதனின் மாண்பு
இஸ்லாத்தின் பார்வையில் மனிதன் அல்லாஹு தஆலாவின் கண்ணியமான படைப்பாவான். அல்-குர்ஆன் அதனை பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
وَلَـقَدْ كَرَّمْنَا بَنِىْۤ اٰدَمَ وَحَمَلْنٰهُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيْلًا (17:70)
“நிச்சயமாக நாம் ஆதமுடைய சந்ததியை கண்ணியப்படுத்தினோம். இன்னும் கடலிலும் கரையிலும் அவர்களை சுமந்து அவர்களுக்காக நல்ல உணவையும் பொருட்களையும் அளித்து நாம் படைத்துள்ள படைப்புகள் பலவற்றையும் விட அவர்களை தகுதியால் மேன்மைப்படுத்தினோம்.” (ஸூறா இஸ்ரா: 70)
இஸ்லாத்தில் பாகுபாடு ஒழிப்பு
மனிதர்கள் அனைவரும் சமம் என்றும் அவர்களிடையே உயர்வு, தாழ்வும் பாகுபாடும் இருக்கக்கூடாது என்றும் மார்க்கம் வலியுறுத்தியிருக்கிறது.
பாகுபாடு ஒழிப்பு பற்றிய அல்-குர்ஆன் வசனம்
يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَتْقٰٮكُمْ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ (49:13)
“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர் உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். ஆகவே உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர் தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்.'(ஸூறா ஹுஜுராத்: 13) என்று அல்-குர்ஆன் குறிப்பிடுகின்றது.
பாகுபாடு ஒழிப்பு பற்றிய ஹதீஸ்
عَنْ أَبِي نَضْرَةَ، حَدَّثَنِي مَنْ سَمِعَ خُطْبَةَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَسَطِ أَيَّامِ التَّشْرِيقِ فَقَالَ: ” يَا أَيُّهَا النَّاسُ، أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ، وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ، أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى عَجَمِيٍّ ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ، وَلَا أَحْمَرَ عَلَى أَسْوَدَ، وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ، إِلَّا بِالتَّقْوَى (أحمد : 23489)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘மனிதர்களே! அறிந்து கொள்ளுங்கள். உங்களது இரட்சகன் ஒருவன். மேலும் நிச்சயமாக உங்களது தகப்பனும் ஒருவர். அறிந்து கொள்ளுங்கள்! அரபியை விட (அரபியல்லாத) அஜமிக்கோ, (அரபியல்லாத) அஜமியை விட அரபிக்கோ கறுப்பரை விட வெள்ளையருக்கோ, வெள்ளையரை விட கறுப்பருக்கோ எவ்வித சிறப்பும் இல்லை, தக்வாவைக் கொண்டே தவிர.” (அஹ்மத்: 23489)
பாகுபாடு ஒழிப்பு தொடர்பாக நபியவர்களின் முன்மாதிரி
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்கள் அனைவருடனும் எவ்வித பாகுபாடுமின்றிப் பழகக்கூடியவர்களாக இருந்தார்கள். அவ்வாறே மக்களிடையே பாகுபாட்டை ஒழிக்கக் கூடியவர்களாகவும் திகழ்ந்தார்கள். இதற்கு பின்வரும் சம்பவம் சான்றான உள்ளது.
عَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ “اسْتَخْلَفَ ابْنَ أُمِّ مَكْتُومٍ يَؤُمُّ النَّاسَ وَهُوَ أَعْمَى” ( سنن أبي داود : 595)
“இப்னு உம்மி மக்தூம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அவர் பார்வையற்றவராக இருந்த நிலையிலும் மக்களுக்குத் தொழுகை நடத்துவதற்குத் நியமித்தார்கள்”. (அபூதாவூத்: 595) அவ்வாறே பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை முஅத்தினாக நியமித்தார்கள்.
பாகுபாடுகள் ஒழிப்பு தினத்தை ஐ.நா சபை பிரகடனப்படுத்தல்
அனைத்து விதமான பாகுபாடுகளையும் எதிர்த்து சமத்துவத்தை நிலைநாட்டும் நோக்கில் மார்ச் மாதம் 01 ஆம் திகதி பாகுபாடுகள் ஒழிப்பு தினம் ஐ.நா சபையினால் பிரகடனப்படுத்தப்படுகிறது. மனிதன் என்ற அடிப்படையில் சமூக மட்டத்தில் ஒவ்வொருவரும் எவ்வித வேறுபாடுகளுமின்றி சமமாக மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்குரிய உரிமையும் சுதந்திரமும் கண்ணியமும் அங்கே முழுமையாக வழங்கப்பட வேண்டும். மனிதமும் சமத்துவமும் கொண்ட அழகியதொரு தேசத்தைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.
மார்க்கத்தின் தனித்துவங்களைப் பேணி நடப்பதோடு மனிதர்கள் அனைவரிடமும் பாகுபாடின்றிப் பழகுவோம். இஸ்லாம் வலியுறுத்தியிருக்கின்ற சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு போன்ற மானுட, பண்பாட்டுப் பெறுமானங்களை எமது குடும்பம், சமூகம், பிரதேசம், நாடு என அனைத்து மட்டங்களிலும் கடைபிடித்து சிறந்ததொரு சமூகமாக வாழ்வோமாக. அல்லாஹு தஆலா எமது எண்ணங்களையும் செயல்களையும் தூய்மைப்படுத்தி எல்லா நிலைகளிலும் மானுடம் பேணி, சகோதர வாஞ்சையுடன் வாழ நல்லருள் பாலிப்பானாக.
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா