ACJU/NGS/2022/049
2022.03.01
பாகுபாடுகள் ஒழிப்பு தினம் (Zero Discrimination Day) மார்ச் 1ஆம் நாளாகிய இத்தினத்தில் நினைவு கூறப்படுவதோடு எவ்வித பாகுபாடுகளும் அற்ற, நீதி மற்றும் நியாயத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட, சமாதானம் மற்றும் சமூக நீதி நிறைந்த பூமியாக இப்பூமி அமைய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்திக்கின்றது. முதலில் நோய் தொற்றாளர்களுக்கு எதிராக கடைப்பிடிக்கப்படும் பாகுபாடுகளை ஒழிப்பதற்காக இத்தினம் ஸ்தாபிக்கப்பட்டாலும் தற்போது இன, மத, மொழி, நிற போன்ற அனைத்து அடையாளங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாகுபாடுகளுக்கு எதிராகவும் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ‘உலக சமூக நீதி நாள்’ என இத்தினம் உலக சமூக நீதி ஆர்வாலர்களால் நினைவு கூறப்படுவது இதன் சிறப்பம்சமாகும். இத்தினம் 2014ஆம் ஆண்டு முதல் நினைவுபடுத்தப்பட்டு வருகின்றது.
இன, மத, மொழி, நிற மற்றும் தேசம் போன்ற எல்லா விதமான பாகுபாடுகளையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. மனிதர்களுக்கு மாத்திரமன்றி ஏனைய படைப்புகளுக்கு மத்தியில் உள்ள பன்மைத்துவத்தை அல்லாஹ்வுடைய ஓர் அத்தாட்சியாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
‘மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன’. (சூரா அர்ரூம்: 22)
‘மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (சூரா அல்ஹுஜுராத்: 13)
அத்துடன், எல்லோருடனும் நீதி, நியாயம் மற்றும் கருணையுடன் நடந்துகொள்ளுமாறு இஸ்லாம் ஏவுகின்றது.
‘நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்’. (சூரா அந்நஹ்ல்: 90)
இலங்கையிலும் உலக பாகுபாடுகள் ஒழிப்புதினம் நினைவுகூறப்படுகின்றது. கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கைத் தேசம் வயது, பாலினம், உடற்தோற்றம் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவை தொடர்பான பாகுபாடுகளில் இருந்து இலங்கை மக்கள் ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டும் என்ற கருப்பொருளுடன் இத்தினம் நினைவு கூறப்பட்டது.
பாகுபாடுகள் காரணமாக மானிடர்களுக்கிடையே எழுப்பப்பட்டிருந்த தடுப்பச்சுவர்களை தகர்த்தெறிவதற்கு உதித்த இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றை இத்தினத்தில் நாம் ஒவ்வொருவரும் ஞாபகப்படுத்திக் கொள்வதோடு இஸ்லாம் வழிகாட்டும் விட்டுக்கொடுப்பு மற்றும் சகிப்புத்தன்மையுடன் நடந்து, பாகுபாடுகளற்ற நீதி நியாயமான ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு நம் அனைவருக்கும் அருள் புரிய அல்லாஹ்விடம் நாம் பிரார்த்திக்கின்றோம்.
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா