2021.08.12
இலங்கையிலுள்ள அமரபுர நிகாயாவின் மகா நாயக்க தேரராக செயற்பட்ட மதிப்புக்குரிய கொடுகொட தம்மாவன்ஸ மகா நாயக்கவின் மறைவிற்குப் பின் கல்யானிவாச பாசறையின் தலைவரும், கலபலுவாவ கோதம விஹாரையின் பிரதானியுமான மதிப்புக்குரிய அக்க மகா பண்டித தொடம்பஹல ஷந்த்ரஸ்ரீரி அபிமான அவர்கள் இலங்கை அமரபுர நிகாயாவின் மகா நாயக்க தேரராக சென்ற மாதம் நியமிக்கப்பட்டார்கள்.
இந்நியமனமானது இலங்கையிலுள்ள பௌத்தர்களின் பார்வையில் மிக முக்கிய நியமனமாக கருதப்படுவதால் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்ஷைக் எச். உமர்தீன் அவர்களின் தலைமையில் உதவி செயலாளர்களில் ஒருவரான அஷ்ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், நிறைவேற்றுக் குழு உறுப்பினரான அஷ்ஷைக் எம்.எப்.எம். ஃபரூத், கொழும்பு கிழக்கு கிளையின் பொருளாளர் அஷ் ஷேக் பிர்தௌஸ் மன்பயி அவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் ஒரு குழு ராஜகிரியில் அமைந்துள்ள விகாரையில் 2021.08.11 ஆம் திகதி அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இச்சந்திப்பின் போது நாட்டில் சமூக நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை கட்டியெழுப்புவது சம்பந்தமாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா