மத நிந்தனையை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கிறது

ACJU/NGS/2023/245

2023.10.04 (1445.03.18)

 

உலகிலுள்ள 200 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தங்களது உயிரிலும் மேலாக நேசிக்கும் இறுதித்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நிந்திக்கும் விதமாக கடந்த 2023.09.29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்திக்க தொட்டவத்த என்பவரால் வெளியிடப்பட்ட காணொளியை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது.

எமது நாடு பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரினதும் கண்டனத்துக்கு காரணமாக அமையும் இத்தகைய காணொளியை வெளியிடுவது ஒருபோதும் அறிவுடைமையாகாது என்றும் இதுபோன்ற இழிசெயல்கள் எமது நாட்டுக்கும் மக்களுக்கும் சர்வதேச மட்டத்தில் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதையும் ஜம்இய்யா சுட்டிக்காட்ட விரும்புகிறது.

இக்காணொளி வெளியானது முதல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உரிய அதிகாரிகளை சந்தித்து அதற்கான நடவடிக்கைகளை செய்து வருகிறது. நாட்டின் ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் என்பவற்றுக்கு முறைப்பாட்டுக் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளதுடன் இதுதொடர்பாக உரிய அதிகாரிகள் பொருத்தமான தீர்மானங்களை எடுப்பார்கள் என ஜம்இய்யா இலங்கைவாழ் முஸ்லிம்கள் சார்பாக எதிர்பார்க்கிறது.

மதங்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொள்ளல், நிந்தனைக் கருத்துகளை பதிவு செய்தல் மேலும் மத வெறுப்புப் பேச்சுகளை பேசுதல் என்பவற்றை முற்றாகத் தவிர்ந்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரிடமும் வலியுறுத்தி வேண்டிக்கொள்வதுடன் இவ்விடயத்தில் உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதனூடாக நாட்டில் பல்லின மக்களிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் உறுதிசெய்ய வழிவகுப்பார்கள் என ஜம்இய்யா நம்புகிறது.

 

அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாழில் ஹுமைதி
பதில் பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *