ACJU/NGS/2023/199
2023-08-19 (1445-02-02)
மனிதாபிமானம் எனப்படுவது சகமனிதனையும் மனிதனாக மதித்து, அவனது இயல்பை விளங்கி, உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவனை சமூகத்தில் ஒருவனாக ஏற்றுக் கொள்வதனை குறிப்பதாகும்.
அல்லாஹுதஆலாவும் மனிதனை ஒரு சிறப்பான படைப்பாக படைத்திருப்பதாக, மனிதர்களை தான் கண்ணியப்படுத்தியிருப்பதாக அல்குர்ஆனிலே குறிப்பிடுகின்றான்.
‘நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்..’ (ஸுறா பனீ இஸ்ராயீல் : 70)
இஸ்லாத்தில் மனிதாபிமானம் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு விடயமாக காணப்படுகிறது. மனிதாபிமானம் என்பது சமத்துவம், சமவுரிமை, உதவி, ஒற்றுமை போன்ற விடயங்களின் மூலம் புலப்படக்கூடிய ஓர் அம்சமாக விளங்குகிறது. பிறருக்கு தைத்துவிடும் என்பதற்காக பாதையில் கிடக்கும் ஒரு முள்ளை அகற்றுவதுகூட இறைநம்பிக்கையின் அடையாளம் என்கிறது மார்க்கம். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : 1833)
இஸ்லாம் கட்டமைந்திருக்கக்கூடிய ஐம்பெரும் தூண்களான கலிமா, தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் ஆகிய வணக்கங்களில் கூட சமத்துவம், ஒற்றுமை, உதவி போன்ற மனிதாபிமானத்தின் கூறுகள் பொதிந்திருக்கின்றன. அனைவரும் கூட்டாக நின்று தொழும் தொழுகையில் சமத்துவமும் ஒற்றுமையும் நிறைந்திருக்கிறது. உலகின் இலட்சோப லட்சம் முஸ்லிம்கள் சங்கமிக்கும் ஹஜ் கடமையில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் பார்க்கப்படுவதில்லை. அங்கு தீண்டாமைக்கு இடமில்லை. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எந்தப் பாகுபாடுகளும் கிடையாது. அல்லாஹுதஆலாவுக்கு முன் அனைவரும் சமம் என்ற உயரிய தத்துவமே இவ்வணக்கங்கள் மூலம் நிலைநிறுத்தப்படுகிறது.
நிறம், மொழி, இனம், நாடு, குலம், கோத்திரம் என அனைத்து வேற்றுமைகளையும் இஸ்லாம் தகர்க்கிறது. மனிதர்கள் என்ற பொதுவில் நின்றே இஸ்லாம் அனைவரையும் நோக்குகிறது. இதனை அல்லாஹுதஆலா கீழ்வருமாறு குர்ஆனிலே குறிப்பிடுகின்றான்.
‘மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.’ (ஸுறா அல் ஹுஜ்ராத் : 13)
பிறருக்கு நலம் நாடுவதே இஸ்லாம் என்பதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் அவர்கள் எமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். அதேபோல இன்னொரு இடத்தில், தான் விரும்புகின்ற ஒன்று தன் சகோதரனுக்கும் கிடைக்கவேண்டும் என எண்ணாதவரை ஒருவரது இறைநம்பிக்கை பூரணம் அடையமாட்டாது என்பதாகவும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எம்மை எச்சரித்திருக்கிறார்கள். (நூல் ஸஹீஹ் முஸ்லிம் : 71)
தற்கால உலகில் மனிதாபிமானத்தின் தேவை உணரப்படுகிறது. உலகையே முடக்கிப்போட்ட கோவிட் 19 தொற்றுப்பரவல், ரஷ்ய உக்ரைன் போர் ஆகிய கெடுபிடிகளுக்குப் பின்னால் பெரும்பாலான நாடுகளின் பொருளாதார நிலைகள் சரிவடையத் தொடங்கின. இதன் விளைவாக உலகின் மொத்த சனத்தொகையில் சுமார் 18 சதவீதமான மக்கள் தற்போதுவரைக்கும் மிகவும் கடுமையான வறுமையின் பிடியில் சிக்கித்தவிப்பதாக சர்வதேச புள்ளிவிபரத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இலங்கைத் திருநாட்டில் கூட அண்மையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மற்றும், கெடுபிடிகள் காரணமாக 13.1 சதவீதமாகவிருந்த வறுமை மட்டம் தற்பொழுது இரட்டிப்பாகி 25 சதவீதமாக அதிகரித்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆக வறுமையில் வாடும் மக்களுக்கு உதவ நாம் மனிதாபிமானத்தோடும் பாகுபாடின்றியும் உதவ முன்வரவேண்டும். எம்மால் முடியாவிட்டாலும் அதற்கான வழிகளையாவது ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். அதுவும் இயலாதுவிட்டால் அல்லாஹுதஆலாவிடம் மக்களுக்காக இருகரமேந்தி பிரார்த்தனையாவது செய்யவேண்டும். அல்லாஹுதஆலா அல்குர்ஆனிலே குறிப்பிடுகின்றான்.
‘இன்னும் நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள் பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்.’ (ஸுறா அல்மாயிதா : 02)
முடியுமானவரை பிறரோடு மனிதநேயம் பாராட்டக்கூடியவனாக பிறரது வளர்ச்சிக்கு பங்களிப்பாற்றக் கூடியவனாக ஒருமனிதன் திகழவேண்டும். அவ்வாறு பிறருக்காக உழைப்பவர்களுக்கு இஸ்லாம் எண்ணற்ற பல சிறப்புக்களை வழங்கியிருக்கிறது. அதனால்தான் ஒரு மனிதரை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் என அல்குர்ஆன் எமக்கு போதனை செய்கிறது.
தாகித்திருந்த ஒரு நாய்க்கு நீர் புகட்டியமைக்காக ஒரு விபச்சாரியின் பாவங்களையே அல்லாஹுதஆலா மன்னித்திருப்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். பிறரது கஷ்டங்களை தீர்ப்பவர்களுக்கு அந்தளவுக்கு சிறப்பையும் கண்ணியத்தையும் இஸ்லாம் வழங்கியிருக்கிறது.
இற்றைக்கு உலகளாவிய ரீதியில் இன்றியமையாத ஓர் அம்சமாக மனிதாபிமானம் காணப்படுகிறது. அந்தவகையில் ஐ.நா சபையும் ஆகஸ்ட் 19 ஆம் திகதியினை சர்வதேச மனிதாபிமான தினமாக பிரகடனப்படுத்தியிருக்கிறது.
பல்லின சமூகங்கள் வாழும் இலங்கைத் திருநாட்டில் நாம் மனிதாபிமானத்தையும், மனித நேயத்தையும் மிகவும் கடைப்பிடித்து ஒழுகக்கூடியவர்களாக திகழவேண்டும். எமது மனிதாபிமான, மனிதநேய செயற்பாடுகள் மூலமாக இஸ்லாத்தினது மகத்துவங்களையும், நற்போதனைகளையும் பிறசமூகத்தவர்களுக்கு அழகியமுறையில் கொண்டு சேர்க்கவேண்டும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் அதனை உத்தியோகபூர்வமாக செயற்படுத்திவருகிறது. சமூக சேவைக் குழு, ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு என தனித்தனிக் குழுக்களை அமைத்து சமுதாய முன்னேற்றம், சமூக ஒற்றுமை மற்றும் இனநல்லினக்கத்தை ஏற்படுத்தவும் செயற்பாட்டுரீதியான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
சமூகத்திலும் நாட்டிலும் முழு உலகிலும் மனிதாபிமானம், மனிதநேயம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு போன்ற நற்பண்புகளை நிலைநிறுத்த பாடுபடும் அனைவருக்கும் அல்லாஹுதஆலா நற்கூலிகளை வழங்குவதோடு தேசியரீதியிலும், சர்வதேச ரீதியிலும் இனநல்லிணக்கமும், சமத்துவமும் நிலவ அருள்புரியவேண்டுமெனவும் ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்தனை செய்கிறது.
அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா