ACJU/NGS/2023/122
12.04.2023
20.09.1444
அனைத்து மஸ்ஜித்களின் தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹ்
எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக!
புனித அல்குர்ஆன் முழு பிரபஞ்சத்தையும் படைத்து பரிபாலித்து போசித்து வளர்த்து பாதுகாக்கும் ஏக வல்லோன் அல்லாஹுத் தஆலாவின்; மனித சமூகத்திற்கான தூதாகும். அதனை விளங்கி அதன் பிரகாரம் அமல் செய்கின்ற அளவுக்கு மனிதன் ஈருலக நற்பாக்கியங்களை அடைந்து கொள்கிறான்.
இலங்கை வாழ் ஒவ்வொரு மனிதனும் அல்குர்ஆனின் தூதை விளங்க வேண்டும் என்ற உயர்நோக்கில் இந்நாட்டில் சிங்கள மொழியில் பேசக்கூடிய எல்லோருக்கும் அதிலும் குறிப்பாக பெரும்பான்மை சமூகத்துக்கும் சிங்கள மொழி மூலம் ஆங்காங்கே தேவையான விளக்கங்களுடனும் முக்கிய குறிப்புகளுடன் கூடிய மொழிப்பெயர்ப்பை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டது. இது இந் நாட்டில் மிகத் தேவையான காலக் கட்டத்தில் வெளியிடப்பட்டு மாற்று மத சகோதரிகளின் பல்வேறு சந்தேகங்களைக் களையவும் அவர்களுக்கு தெளிவுகளை வழங்கவும் உறுதுணையாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
அதனைத் தொடர்ந்து இலங்கை வாழ் முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் பேசும் தமிழ் மொழி மூலமும் அல்குர்ஆனுக்கான மொழிபெயர்ப்பை வெளியிடும் முயற்சியில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஈடுபட்டு வருகிறது.
அம்முயற்சியின் முதற் கட்டமான ஜுஸ்உ அம்ம அச்சிடப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அல்குர்ஆனின் தூதை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சேர்ப்பது எம் அனைவரதினதும் கடமையாகும். இப்பாரியப் பணியை அகில இலங்கை ஜம்மியத்தில் உலமா மஸ்ஜித்களிலிருந்து ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. அல்குர்ஆன் இறக்கப்பட்ட புனித ரமழானில் லைலத்துல் கத்ருடைய இரவு அடங்கிய இறுதிப் பத்தில் இருக்கிறோம். எனவே, இந்த சிறப்பான தினங்களில் ஜம்இய்யாவின் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்ட தப்ஸீர் வகுப்புகளின் மூலம் இப்பாரிய பணியை தங்களது மஸ்ஜித்களில் ஆரம்பித்துவைக்குமாறு ஜம்இய்யா மஸ்ஜித் நிர்வாகிகளை வேண்டிக் கொள்கின்றது.
இப்புனித மாதத்தில் தங்களது மஸ்ஜித்களில் நடைபெற்று வரும் பல்வேறு நல்ல அமல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு எவ்வகையிலும் இடையூறு இல்லாமல் இதனை ஏற்பாடு செய்யுமாறும் வினயமாக வேண்டிக் கொள்கிறது.
மேலும், குறித்த அம்ம ஜுஸ்உவின் தமிழ் மொழிபெயர்ப்பை அச்சிட்டு வெளியிடுவதற்கு மக்களை ஆர்வமூட்டுமாறும் இம்மொழிபெயர்ப்பை மக்கள்மயப்படுத்தி ஒவ்வொரு வீடுகளுக்கும் கொண்டுபோய் சேர்ப்பதற்கு உதவியாக இருக்குமாறும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.
முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் என்.டி.எம் ளரீப்
செயலாளர்- ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா