மாற்றுத்திறனாளிகள் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்

ACJU/NGS/2023/275
2023.12.03 (1445.05.18)

 

அல்லாஹு தஆலா மனிதனை மிக அழகான தோற்றத்தில் படைத்து, அவனை ஏனைய படைப்பினங்களை விட கண்ணியப்படுத்தியுள்ளான். அத்துடன் மனிதன் என்ற அடிப்படையில் யாவரும் சமம் என்றும் அவர்களில் அல்லாஹு தஆலாவிடத்தில் மிகச் சிறந்தவர்கள் அவனை அஞ்சி வாழக்கூடியவர்களே (இறையச்சம் உடையவர்கள்) என்றும் அல்-குர்ஆன் கூறுகின்றது.

மனிதர்களில் சிலரை அல்லாஹு தஆலா உடல் உறுப்புகள் அல்லது மன வளர்ச்சி ரீதியாக நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ சவால்களை எதிர்கொள்ளக் கூடியவர்களாக ஆக்கியுள்ளான். இவ்வாறானவர்களே மாற்றுத்திறனாளிகள் ஆவர். இத்தகையோர் இதுவரை உலக நாடுகளால் 22 வகையினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். உலக சனத்தொகையில் சுமார் 15 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். இவர்கள் மனதளவில் தைரியமும் செயல்திறனும் கொண்டவர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

இஸ்லாம் மாற்றுத்திறனாளிகளுடன் நல்லமுறையில் நடக்குமாறும் அவர்களை எல்லாக் காரியங்களிலும் அரவணைக்குமாறும் ஆர்வமூட்டியுள்ளது. அல்லாஹு தஆலா தனது திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

“நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவு உண்பதில் பார்வையற்றோர், நடக்க முடியாதவர்கள், நோயாளிகள் மீது எவ்விதக் குற்றமும் இல்லை.” (ஸூறா அந்-நூர் : 61)

நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களும் மாற்றுத்திறனாளிகளோடு அன்பாக நடந்து கொண்டார்கள். இதற்கு பின்வரும் சம்பவங்கள் சான்றான உள்ளன.

“இத்பான் பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களிடம் நான் எனது கண் பார்வையை இழந்துள்ளேன். என்னால் பள்ளிவாசலுக்குச் செல்ல முடியவில்லை. நீங்கள் என் இல்லத்தில் ஓர் இடத்தில் தொழ வேண்டும். அ(ந்த இடத்)தை நான் தொழும் இடமாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; இத்பான் பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டுக்குச் சென்று ஒரு இடத்தை தொழும் இடமாக ஆக்கிக் கொடுத்தார்கள்.” (ஸஹீஹுல் புகாரி: 839) மேலும் “இப்னு உம்மி மக்தூம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அவர் பார்வையற்றவராக இருந்த நிலையில் மக்களுக்குத் தொழுகை நடத்துவதற்குத் நியமித்தார்கள்” (ஸுனனு அபீதாவூத் : 595)

மற்றுமோர் சந்தர்ப்பத்தில் ஒரு பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கிறது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபியவர்கள் அப்பெண்ணுக்கு, “நீ பொறுமையுடன் இருந்தால் உனக்கு சொர்க்கம் கிடைக்கும். என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி: 5652)

நபியவர்கள் பலவீனர்கள், மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் நன்மாராயங்களையும் கூறியுள்ளார்கள். “அல்லாஹ் கூறுகின்றான்: நான் என் அடியானை, அவனது பிரியத்திற்குரிய இரு பொருட்களைக் கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்குப் பதிலாகச் சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். (‘அவனுடைய பிரியத்திற்குரிய இரு பொருட்கள்’ என்பது) அவருடைய இரு கண்களாகும் என அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி : 5653)

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் “நிச்சயமாக உங்களுடைய தேவைகள் நிறைவேற்றப்படுவதும் நீங்கள் உதவி செய்யப்படுவதும் உங்களில் இருக்கின்ற பலவீனர்கள் மூலமாகவேதான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி: 2896)

இஸ்லாமிய வரலாறுகளை உற்று நோக்குகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு விஷேட ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. கலீபா உமர் இப்னு அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தகவல்களைத் திரட்டி அவர்களுக்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்கள். இமாம் அபூ ஹனீபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மாற்றுத்திறனாளிகளைக் கவனிப்பதற்கு அரசப் பொது நிதியில் இருந்து செலவிடப்படவேண்டும் என்ற சட்டத்தை வகுத்தார்கள்.

அதேபோன்று இஸ்லாம் அதன் வருகைக்கு முன்னர் மக்களிடையே காணப்பட்ட மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்கின்ற மனப்பான்மையை, வெறுப்புணர்வை மாற்றியமைத்ததோடு ஒருவரையொருவர் பரிகாசம் செய்ய வேண்டாம், குறை கூற வேண்டாம் என்றும் கட்டளையிட்டுள்ளது. எனவே ஒவ்வொருவருடைய மார்க்கம், உயிர், மானம், அறிவு, செல்வம், வம்சம், ஆகியவைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை நோக்கமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அன்றாட வாழ்வில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் அவர்களது அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யும் வகையிலும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.

எனவே சக மனிதனை மனிதனாக மதிக்கும் மானுடம் பேணுவோம். அவர்களுடன் அன்பாகவும் பண்பாகவும் நடந்து கொள்வோம். அல்லாஹு தஆலா வழங்கிய எண்ணற்ற அருட்கொடைகளை பொருந்திக்கொண்டு அவற்றுக்கு என்றும் நன்றியுள்ள அடியார்களாக வாழ்வதற்கு அல்லாஹ் எம்மனைவருக்கும் துணை புரிவானாக! அத்துடன் உலகெங்கிலுமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அல்லாஹு தஆலா அழகிய பொறுமையையும் நம்பிக்கையையும் அருள வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *